Monday, October 31, 2011

குழந்தைகளை ஏமாற்ற முடியாது !


குழந்தைகளுக்கு நல்லது கெட்டது தெரியாது என்பார்கள். அதிகமாக கொடுத்தாலும், குறைவாக கொடுத்தாலும் குழந்தைகளுக்கு எந்த வித்தியாசமும் தெரியப்போவதில்லை என்பது பெற்றோர்கள் அடிக்கடி சொல்லும் வார்த்தை.

இதில் உண்மை இல்லை என்கிறது சமீபத்திய ஆய்வு. 15 மாத குழந்தைக்கு நல்லது எது, கெட்டது எது, தனக்கு (உதாரணமாக.. தின்பண்டம்) குறைவாக கொடுத்து இருக்கிறார்களா ? அதிகமாககொடுத்து இருக்கிறார்களா ? என்று ஒப்பிட்டு பார்த்து கொள்ளும் புத்திசாலித்தனம் உள்ளது என்கிறது இந்த ஆய்வு.

வாஷிங்டன் பல்கலைகழக்கதைச் சேர்ந்த பேராசிரியர் ஜெஸ்சிகா சோமர்வில்லி என்பவர் தலைமையில் ஒரு குழுவினர் இது தொடர்பாக ஆய்வு நடத்தினார்கள். இதன்படி குழந்தைகளை வைத்து அவர்களில் சிலருக்கு அதிகமாக தின்பண்டங்களும், சிலருக்கு குறைவாகவும் கொடுத்தனர். இதில் குறைவான தின்பண்டம் பெற்ற குழந்தைகள் முரண்டு பிடித்தன. அதிகமான தின்பண்டம் வைத்திருந்த குழந்தையின் கையில் இருந்து அதை பிடுங்க முயற்சி செய்தன. சில குழந்தைகள் இதை ஏற்க மறுத்து அழுது அடம்பிடித்தன. சில குழந்தைகள் தங்கள் கையில் கொடுத்ததை வீசி எறிந்து, அதிகமாக வைத்திருக்கும் குழந்தையிடம் இருந்து உணவு பண்டங்களை பிடுங்கி ரகளை செய்தனர்.

உணவுப்பண்டங்கள் மட்டுமல்ல, பொம்மைகள் விசயத்தில் இந்த அடம்பிடித்தல் அதிகமாக இருந்தது.



இந்த ஆய்வு நடத்திய விஞ்ஞானிகள் கூறும்போது, 'நாம் நினைப்பதைவிட குழந்தைகள் ரொம்பவே புத்திக் கூர்மையுடன் உள்ளனர். எல்லோருக்கும் சரி சமமாகவே கிடைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தனர். மற்றவர்களை விட தங்களுக்கு குறைவாக கிடைக்கும் போது அதை ஏற்க மறுப்பதோடு, கூடுதலாக கிடைக்கும் வரை போராடவும் (அழுது ஆர்பாட்டம் செய்யவும்) அவர்கள் தயாராக இருந்தனர் என்று தெரிவித்தனர்.


இதை படிக்கும் போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சொன்ன வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன ;

" பிறந்த குழந்தைக் கூட அழுகை எனும் புரட்சி செய்துதான் தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறது".




தகவல் : தினத்தந்தி

Sunday, October 30, 2011

நாகேஷ் சில நினைவுகள்...

இயக்குநர் ஸ்ரீதரைக் கடைசியாகப் பேட்டி கண்ட துயரமான அதிர்ஷ்டசாலி நான். பக்கவாதத்தால் மிகவும் நலிவுற்று மரணப் படுக்கையில் இருந்த ஸ்ரீதர் அன்றைய தினத்தில் இரண்டு பேரைப் பற்றி சிலாகித்துப் பேசினார். ஒருவர் ஜெயலலிதா...

இன்னொருவர் நாகேஷ். '' 'நெஞ்சில் ஓர் ஆலயம்’ படம் ஆரம்பிச்சப்ப ஏற்கெனவே வாய்ப்பு கேட்டுப் போயிருந்த நாகேஷை வரச் சொன்னேன். குழந்தையைக் காணாமல் கம்பவுண்டர் தேடுற காட்சிக்கு ஒத்திகை பார்த்தோம். அந்த கேரக்டரில் நடிக்க வேண்டிய ராமாராவ் வரவில்லை. அதனால், நாகேஷை நடிக்க வெச்சோம். படுக்கைக்குக் கீழே குனிந்து குழந்தையைத் தேடுவதுதான் காட்சி. ஆனால், நாகேஷ் என்ன செய்தார் தெரியுமா? பெட்டில் கிடந்த தலையணையைத் தூக்கிப் பார்த்தார். பெட்டுக்கு அருகே இருந்த டிராயரைத் திறந்து பார்த்தார். குழந்தையைக் குழந்தைத்தனமாகவே அவர் தேடிய காட்சி ஸ்பாட்டில் எல்லாரையும் சிரிக்கவைத்துவிட்டது. கல்யாண்குமார் அழைத்தவுடன் வேகமாக படிக்கட்டில் நாகேஷ் இறங்கி வர வேண்டும். நடிப்பு தத்ரூபமாக வருவதற்காக படிக்கட்டில் விழுந்து புரண்டு ஓடினார். என் சம்மதம் இல்லாமல் கேரக்டர்கள் எதையும் செய்ய அனுமதிக்க மாட்டேன். ஆனால், நாகேஷ§க்கு மட்டும் நான் எல்லா சுதந்திரத் தையும் கொடுத்தேன். காரணம், நான் நாகேஷின் ரசிகன்!'' - ஸ்ரீதர் சிலாகித்துச் சொன்ன வார்த்தைகள் அப்படியே இன்றும் மனதுக்குள் ரீங்கரிக்கின்றன.


''எதையும் மிகைப்படுத்திப் பேசப் பிடிக் காது. ஆனா, நாகேஷ் மாதிரி ஒரு கலைஞனை மிஞ்சுற ஆள் இந்தியாவிலேயே இல்லைனு சொல்வேன். அந்த மாபெரும் கலைஞனுக்கு பத்மஸ்ரீ பட்டம்கூடக் கிடைக்கலையேங்கிறது என்னோட மிகப் பெரிய ஆதங்கம்!'' - வருத் தத்தில் துடிக்கிறது இயக்குநர் பாலசந்தரின் குரல். நாடகத் துறையின் மீது நாகேஷ் கொண்டிருந்த அதீத பாசத்தை விவரிக்கிறார் பாலசந்தர்.

''என்னோட 'மேஜர் சந்திரகாந்த்’ நாடகம் அப்போ ஏக பிரசித்தம். டி.கே.சண்முகம், நாகேஷ் எல்லாரும் 'மேஜர் சந்திரகாந்த்’பத்தி எல்லார்கிட்டயும் பெருமையாப் பேசினாங்க. 'இனிமே துண்டு துக்கடா வேஷத்தில் நடிக்க விரும்பலை. உங்களோட இயக்கத்தில் நான் நடிச்சே ஆகணும்’னு சொன்னார் நாகேஷ். தினமும் மாலை அவர் என்னைப் பார்க்க வரும் நேரம்தான் எனக்கு டீ டைம்.

'ஏதோ ஒரு கேரக்டரைக் கொடுக்க முடியாது. உன்னை மனசுல வெச்சு தனியா கதை பண்ணினால்தான் உண்டு. அதனால, நீ கொஞ்ச காலம் காத்திரு’னு சொன்னேன். அப்போ ஸ்ரீதருடைய 'நெஞ்சில் ஓர் ஆலயம்’ ரிலீஸாகி, ஓவர் நைட்ல நாகேஷ் ஃபேமஸ் ஆகிட்டார். அப்புறம் அவர் என்னைப் பார்க்க வரும்போது எல்லாம் கூட்டம்கூடிரும். சினிமாவில் பிரபலமான பின்னும் என் நாடகத்தில் நடிக்கணும்னு தீவிரமா இருந் தார். அவருக்காகவே நான் உருவாக்கியது தான் 'சர்வர் சுந்தரம்’ நாடகம். அந்த நேரம் பார்த்து 'காதலிக்க நேரமில்லை’ ரிலீஸ். நாகேஷ் பெரிய காமெடியனா உருவாகிட்டார். எனக்குப் படபடப்பு ஆகிருச்சு. காரணம், ஒரு காமெடியனா நாகேஷ் சினிமாவில் ஜெயிச்சிருக்கும்போது 'சர்வர் சுந்தரம்’ நாடகம் எப்படி எடுபடும்கிற தயக்கம். நாகேஷ் அழுவுற ஸீன்லகூட மக்கள் சிரிச்சிடுவாங்களேங்கிற பயம். ஆனாலும், நாகேஷ், 'அப்படி எல்லாம்நடக் காது பாலு. நாடகம் நிச்சயம் ஹிட் ஆகும்’னு நம்பிக்கையா சொல்லிட்டு இருந்தார். தயக்கமும் பயமுமா நாடகம் முடிஞ்சப்ப, பெரிய ரெஸ்பான்ஸ். 'நான் உங்களுக்குத் தைரியம் சொன்னேனே தவிர, எனக்கும் பதற்றம்தான். கைத்தட்டலைப் பார்த்த துக்கு அப்புறம்தான் பதற்றம் போச்சு’னு சொன்னப்ப, நாகேஷ் முகத்தில் அப்படிஓர் உருக்கம். நாம் எதிர்பார்க்கிறதைக் காட்டி லும் அதிகமாகச் செய்து அசத்துவதில் நாகேஷை மிஞ்ச ஆளே கிடையாது!'' - பாலசந்தரின் வார்த்தைகளே நாகேஷின் நடிப்புக்கான பதக்கங்கள்.


''சத்யா ஸ்டுடியோ பக்கம் வர்றப்பலாம் எங்க வீட்டுக்கு வந்து என் அம்மா கையால ஃபில்டர் காபி வாங்கிச் சாப்பிடுவார். 1976-ல் அவருக்குத் திடீர்னு உடல்நிலை சரி இல்லா மல் போயிடுச்சு. ஜி.ஹெச்சுக்கு ஓடினேன். 'எல்லாம் முடியப்போகுது’னு டாக்டர் கை விரிச்சுட்டார். கோமாவில் இருந்த நாகேஷ் கிட்ட 'நான் மௌலி வந்திருக்கேன்’னு சொன்னேன். 'எனக்கு காபி தர்றியா’னு முனங்கினார். அதுதான் அவர் என்கிட்ட பேசுறது கடைசினு நினைச்சேன். ஆனா, பல லட்சம் பேரின் பிரார்த்தனைகள் கோமாவின் பிடியில் இருந்த நாகேஷை அன்றைக்குக் காப்பாற்றியது!'' என்கிறார் மௌலி அப்போதைய பரவசம் விலகாத குரலில்.

நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாகப் பேசுகிறார் கிரேஸி மோகன். '' 'அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் சிங்கத்திடம் நாகேஷ் சிக்குவதுபோல் ஒரு காட்சி. நாங்க டூப் போட்டு எடுத்துக்கிட்டு இருந்தோம். அப்போ, அங்கே வந்த நாகேஷ் சார், 'இந்த ஸீனுக்கு ஏன் டூப் போடுறீங்க? நான் இதில் நடிச்சே தீருவேன்’னு மல்லுக்கு நின்னார். 'சிங்கத்தைப் பார்த்துப் பயம் இல்லையா’னு கேட்டால், 'வீரன் போரில்தான் சாகணும். வியாதியில் சாகக் கூடாது. நடிக்கிறப்பவே செத்தால் அது வரம்’னு சொன்னார். நாங்க உடனே நெகிழ்ந்து உருக்கமாகவும், 'அட, உங்களைக் கலாய்க்கச் சொன்னேன்பா... இந்த மாதிரி எத்தனை சிங்கத்தை நான் பார்த்திருப்பேன்’னு டைமிங்கா காமெடி பண்ணார். என்னோட ஒரு நாடகத்தில் முதலில் ஒரு பைத்தியக்கார கேரக்டர் வரும். அடுத்து வர்ற ஒரு நபரும் மனநிலை தவறிய மாதிரியே பேசுவார். அதைப் பார்க்கும் ஹீரோ, 'நீயும் பைத்தியமா’னு கேட்பார். அந்தக் காட்சியைப் பார்த்த நாகேஷ், 'ஏன்பா, ஹ்யூமருக்குப் பொழிப்புரை போடுறீங்க. இரண்டாவது வர்ற ஆளைப் பார்த்து, 'நீயுமா’னு கேட்டாலே போதுமே. 'நீயும் பைத்தியமா’னு ஏன் ரெண்டு வார்த்தைகள் போடுறீங்க. வார்த்தைகளை எப்பவுமே வீணடிக்கக் கூடாது’னு சொன்னார். வார்த்தைகளைக் கௌரவப்படுத்திய கலைஞன் அவர். இறப்பதற்கு ஒரு மாசத்துக்கு முன்பு என்னோட 'சாக்லேட் கிருஷ்ணா’ நாடகத்தைப் பார்க்க வந்திருந்தார். 'மோகன், எனக்கு உடம்பு சரியில்ல. அதனால, பத்து நிமிஷத்துலயே கிளம்பிடுவேன்’னு சொன்னார். ஆனால், நாடகம் முடியும் வரை உட்கார்ந்து பார்த்தார். மறு நாள் போன் பண்ணி, ஒன்றரை மணி நேரம் பாராட்டினார். நாடகத்தின் மீது அவர் வெச்சிருந்த பாசமும் மரியாதை யும் அப்படிப்பட்டது!''


நன்றி : விகடன் மற்றும் தேடிப்பார் இணையதளம்.

'கிச்சன் கேபினட்' வார்த்தை பிறந்த விதம்


அரசாங்கத் தலைவர்களின் அதிகாரபூர்வமற்ற ஆலோசகர்கள் வட்டம் 'கிச்சன் கேபினட்' என்று அழைக்கப்பட்டது.

இந்த வார்த்தை 1832 - ல் உருவானது. அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக ஆண்டரூ ஜாக்சன் என்பவர் இருந்தார். அவர் தனது நெருங்கிய நண்பர்கள் மூன்று பேருடன் அடிக்கடி அதிகாரப்பூர்வமில்லாத தனிப்பட்ட கூட்டங்களை நடத்துவார்.

அந்த நண்பர்கள் வெள்ளை மாளிகையின் பின் கதவு வழியாக நுழைந்து சமையலறை வழியாக மாளிகைக்குள் வருவார்கள். அதிலிருந்து, அமெரிக்க ஜனாதிபதியின் நெருங்கிய நட்பு வட்டத்தை 'கிச்சன் கேபினட்' என்று பத்திரிகையாளர்கள் குறிப்பிடத் தொடங்கினார்கள்.

பின்னர் படிப்படியாக, உலகம் முழுவதும் அதிகரப்பூர்வமற்ற அரசியல் ஆலோசகர்களைக் குறிக்கும் வார்த்தையாக மாறியது.



தகவல் : தினத்தந்தி

Saturday, October 29, 2011

துளித்துளியாய்......தகவல்கள்


சார்லி சாப்ளின் நடித்த படங்களின் எண்ணிகை 86.


முகமது அலியைத் தோற்கடித்த ஒரே குத்து சண்டை வீரர் - லாரி ஹோம்ஸ்.





கூடு கட்டும் ஒரே பாம்பு - ராஜா நாகம்.



கறுப்பின தலைவர் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் அடைக்கப்படிருந்த சிறையின் பெயர் கேப்டவுனில் உள்ள ரோப்பன் ஐலன்ட்.



11 ஆஸ்கார் விருதுகளைப் பெற்ற இரு ஹாலிவுட் படங்கள் பென்ஹர், டைட்டானிக்.




கொரில்லா போர் முறையை உருவாக்கியவர் இத்தாலியைச் சேர்ந்த கரிப்பால்டி.

Thursday, October 27, 2011

சொல்வனம்


"ஒருவருடைய சுயநலத்தோடு அது முரண்படாத வரையில், அவரிடம் அறிவு வேலை செய்யும். எப்போது அது சுயநலத்தோடு அது முரண்படுகின்றதோ, அப்போது அறிவு தோற்றுவிடுகின்றது."

-- டாக்டர் பாபாசாஹெப் அம்பேத்கர்.




நன்றி : தோழர் தமிழச்சி பெரியார்.

Wednesday, October 26, 2011

தகவல் களம் !


ஆப்பிள் பழம் Rosaceae என்ற ரோஜா குடும்பத்தைச் சேர்ந்தது. பியர், பீச், பிளம், ஸ்ட்ராபெர்ரி, பிளாக்பெர்ரி,ஆல்மண்ட், ஆகியவையும் இதே குடும்பம்தான்.





நாவில் உள்ளதைப் போலவே மனித நுரையீரலிலும் 'சுவை மொட்டுகள்' போன்ற அமைப்பு உள்ளது.




வானொலியைக் கண்டுபிடித்த மார்கோனி திருமணம் செய்து கொண்ட போது அவருக்கு வயது 51 .




மலைப்பாம்புகளுக்கு உடலின் நீளத்தில் மூன்றில் இரண்டு பங்கு நுரையீரல் ஆகும். நுரையீரலில் காற்று நிரம்பி இருக்கும் போதுதான் பாம்பால் இரையைக் கெட்டியாகக் பற்றிக் கொள்ள முடியும்.




தகவல் : முக்கிமலை நஞ்சன்

Tuesday, October 25, 2011

ஏப்ரல் பூல் உளவாளி .


நாளை காலை உலகம் அமைதியாக இருக்க வேண்டுமா ? இல்லை ஆர்பாட்டமாக ஆட்டம் போட வேண்டுமா ? என்பதை தீர்மானிப்பது வல்லரசுகளின் உளவு நிறுவனங்கள்தான்.

ஒரு நாட்டை உளவு பார்ப்பதற்காக அதற்கு பகைமையான நாடுகள் தங்கள் சார்பாக உளவாளிகளை அனுப்பி வைப்பது, சரித்திரம் காலம் தொட்டு நடந்து வரும் விஷயம்.

அப்படி ஒரு உளவாளியைத் தான் அமெரிக்கா ஏற்பாடு செய்தது. அந்த உளவாளியின் பெயர் 'ஏப்ரல் பூல்' என்பது. இது ஒரு கற்பனை பெயர்தான்.


ஆனால் இவர் சதாம் உசைனின் அழிவுக்கு காரணம் என்பது யாருக்கும் தெரியாது. அமெரிக்க புலனாய்வு பிரிவு ஏற்பாடு செய்திருந்த இந்த உளவாளி திறமையாக செயல்பட்டு சதாம் உசைனை நெருங்கி விட்டார்.

கூடவே அவரின் நம்பகத்தன்மையையும் பெற்று விட்டார். அந்த நம்பிகை வீண் போகாத வகையில் அமெரிக்காவைப் பற்றி 100 சதவீதம் சரியான நம்பகமான துப்புகள் கொடுத்ததால் ஈராக் ராணுவம் ஏப்ரல் பூலை விலைக்கு வாங்கியது.

அமெரிக்கா பற்றி தரும் ஒவ்வொரு தகவலுக்கும் லட்சகணக்கில் பணம் பெற்றுக் கொண்டார். அதே நேரத்தில் அமெரிக்காவின் நம்பிகையையும் 'ஏப்ரல் பூல்' தொடர்ந்து தக்க வைத்து கொண்டார். ஈராக் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த நேரம். அப்போது " அமெரிக்கா ஈராக்கின் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் இருந்து தாக்குதல் நடத்த திட்டம் போட்டிருக்கிறது" என்ற தகவல் கொடுத்தார், 'ஏப்ரல் பூல்' .

இதனை நம்பிய சதாம் உசேன் அங்கு படைகளை குவித்தார். ஆனால், அமெரிக்கா ஏற்கனவே தான் போட்ட திட்டப்படி கிழக்கு மற்றும் தென் கிழக்கு திசையில் இருந்து அமெரிக்க காலாட்படை ஆக்ரோஷமாகத் தாக்கியது. ஈராக் ஆடிப்போனது. மூன்றே வாரங்களில் பாக்தாத் விழ்ந்தது.

ஈராக் இராசயனப் பேரழிவு ஆயுதங்கள் வைத்திருப்பதாக சொல்லித்தான் போரை ஆரம்பித்தது, அமெரிக்கா. அங்கே ஆயுதங்களும் இல்லை. ஆய்வுக்கூடங்களும் இல்லை. போரின் இறுதியில் அமெரிக்காவே ஏப்ரல் பூல் ஆனது தனிக் கதை.

'கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் எட்டு நாளைக்குத் தான்'.



தகவல் : தினத்தந்தி.

Monday, October 24, 2011

கடல் கடந்து கவிதை படித்தவர்


ராபர்ட் ஓபன் ஹய்மர் என்ற அறிவியல் அறிஞர் இருந்தார். இவர் அணுக்கருப் பிளவு, அணு உலை சார்ந்த அறிவியலில் சிறந்து விளங்கினார்.

தனது 21 - ம் வயதில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்குச் சென்று படித்தார். படிப்பதில் ஆர்வம் அதிகம் உடையவர். அதனால், நூலகத்திற்கு சென்று பல நூல்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும், தேடி தேடிப் படிப்பார்.

இதனால், பல நேரங்களில் அவரது தந்தை தன் மகனைக் காணவில்லையே, எங்கு சென்றிருப்பான் என்று நூலகத்திற்கு வந்து தேடி செல்வார்.

ஒரு கட்டத்தில் அவரது தந்தை, 'தன் மகன் எப்போதும் படித்துக் கொண்டே இருக்கிறானே' என்று பயந்தே போய்விட்டார். அதனால், மகனின் மனநிலையை மாற்ற நினைத்தார். தனது மகன் உல்லாசமாக பொழுதை கழிக்க வேண்டும் என்று எண்ணி ஒரு படகை வாங்கி கொடுத்தார். ஆனால், ஹைமரோ, இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை பார்க்க வேண்டும் என்று விரும்பினார். அதனால், தந்தை வாங்கி கொடுத்த படகில் ஏறி, அட்லாண்டிக் கடலைக் கடந்து இங்கிலாந்து நாட்டுகே சென்று விட்டார்.

ஓபன் ஹைமர் படித்து முடித்த பின்னர், அவருக்கு பல பல்கலைக்கழகங்களில் இருந்து அழைப்பு வந்தது. கடைசியாக, அவர் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.

வேலையில் சேர்ந்த முதல் நாளே அந்தப் பல்கலைக்கழகத்தின் டீன் அவரிடம் வந்து "ராபர்ட் உனக்கு பல பல்கலைக்கழகங்களில் இருந்து அழைப்பு வந்தும், நீ ஏன் இந்தப் பல்கலைக்கழகத்தைத் தேர்ந்த்தெடுத்தாய் ?" என்று கேட்டார். அதற்கு ஓபன் ஹைமர், "இங்குள்ள நூலகத்தில் 16 மற்றும் 17 - ம் நூற்றாண்டைச் சேர்ந்த சில பழைய பிரெஞ்சுக் கவிதைகளை நான் ஒரு முறை படித்தேன். அவற்றை மீண்டும் படிக்க வேண்டும் என்ற ஆவலில் தான் இங்கு வந்து சேர்ந்தேன்" என்றார்.



தகவல் : தினத்தந்தி.

நம்பினால் நம்புங்கள் !


ஜெயின்ட் பாண்டா தினமும் 12 மணிநேரம் சாப்பிட்டுக் கொண்டே இருக்கும்.




உலகில் இன்னும் 54 லட்சம் உயிரினங்களுக்கு பெயரிடப்படவே இல்லை.




அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் 'டைனோசர்' என்ற நகர் உள்ளது.




சோனி நிறுவனத்தின் முதல் தயாரிப்பு ரைஸ் குக்கர். ஆனால் அது சரியாக வேலை செய்யவில்லை.




செவ்வாய் கோளில் உள்ள பாறைகளுக்கு யோகி, ஸ்கூபீ டு, இன்டியானா ஜோன்ஸ் என்றெல்லாம் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

நீயின்றி நானில்லை.. நிலவின்றி நாமில்லை


நிலா எப்போதுமே கவிஞர்களை கொள்ளை கொள்ளும் ஒரு அம்சம்தான். இந்த நிலா உருவானதற்கு நீண்ட வரலாறு உண்டு. 400 கோடி வருடங்களுக்கு முன்பு தியா என்ற பெரிய கிரகம் ஒன்று பூமியில் வந்து மோதியது. அந்த மோதல் சரியான கோணத்தில் அமைந்ததால் மட்டுமே நமக்கு நிலவு என்ற ஓர் அற்புதம் கிடைத்தது. இந்தக்கோணம் சற்று அதிகமாக இருந்திருந்தால் அது பூமியின் மீது மோதாமலே சென்றிருக்கும். பூமிக்கு நிலவு கிடைத்திருக்காது.

அதே வேளையில் அந்த கோணம் சற்று குறைவாக இருந்திருந்தால் அது பூமியில் மோதியவுடன் பூமி தூள்தூளாக நொறுங்கி போயிருக்கும். எரிகற்கள், வால் நட்சத்திரங்கள் போல் பூமியும் சூரியனை சுற்றி வந்திருக்கும். சரியான கோணத்தில் இந்த மோதல் நிகழ்ந்த காரணத்தால் தான் நிலவு சரியான அளவில் சரியான தொலைவில் உள்ளது. இதனால்தான் நம்மால் முழுமையாக சூரியகிரகணத்தை பார்க்க முடிகிறது. நிலவின் தொலைவு சற்று மாறி இருந்தாலும் நம்மால் சூரியகிரகணத்தை பார்க்க முடிந்திருக்காது.


2004 - ம் ஆண்டு டேவ் வால்தட் என்ற விஞ்ஞானி நடத்திய ஆய்வின் படி நிலவின் எடை இப்போது இருப்பதை விட இரண்டு சதவிகிதம் அதிகமாக இருந்திருந்தால் கூட பூமியின் அச்சு சாய்வு 50 டிகிரி வரை மாறியிருக்கும். ஒரு சதவிதம் பூமியின் எடை கூடியிருந்தால் கூட பூமியின் சுழலும் வேகம் குறைந்திருக்கும் என்கிறார். இதனால் நீண்ட பகலும், நீண்ட இரவும் ஏற்பட்டிருக்கும்.


நிலவின் எடை இப்போது உள்ளதை விட குறைவாக இருந்தாலும் பூமியின் சுழலும் வேகம் அதிகரித்திருக்கும். இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திருக்கும். டேவ் சொன்னபடி 50 டிகிரி வரை சாய்வு கோணம் அதிகரித்திருந்தால் பருவ காலங்களில் மிகுந்த மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும்.

அது மனிதன் மட்டுமல்ல, பூமியில் எந்த உயிரினமும் வாழ முடியாத சூழ்நிலையை உருவாக்கியிருக்கும். அதேபோல் பூமியின் சுழலும் வேகம் குறைந்தால் பகலுக்கும், இரவுக்குமான வெப்பநிலை மிக அதிகமாக வித்தியாசப்படும். மேலும் துருவப்பகுதிக்கும், பூமத்திய ரேகைப் பகுதிக்கும் இடையே உள்ள வெப்பநிலை வித்தியாசம் குறைவாக காணப்படும். அதனால் துருவப்பகுதிகளில் பனிப்பாறைகள் இருப்பது சந்தேகமே.

ஒருவேளை பூமியின் சுழலும் வேகம் அதிகரித்தால் அதிகமான அழுத்தத்தோடு காற்று வீசும். பகலுக்கும், இரவுக்கும் இடையே உள்ள வெப்பநிலை வித்தியாசம் குறைவாக இருக்கும். துருவப்பகுதிம், பூமத்திய ரேகைப் பகுதிக்கும் இடையே உள்ள வெப்பநிலை அதிகரிக்கும்.


இதன் காரணமாக துருவப்பகுதிகளில் குளிர் அதிகமாகி கரியமில வாயு உறையும் நிலைக்கு சென்று விடும். இப்படி உறைவதால் காற்றில் கரியமில வாயுவின் அளவு குறையும். இந்த வாயு வெப்பத்தை தன்னுள் வைத்துக்கொள்ளும் தன்மை கொண்டது. இதன் அளவு வளி மண்டலத்தில் குறைவதால் பூமி மேலும் குளிர்வடைந்து ஒரு பனிப்பந்தாக மாறிவிடும்.

நிலவின் தோற்றம் எதிர்பாராத ஒரு விபத்து என்றாலும், அது உயிரினங்கள் வாழ்வதற்கு தகுதியான இடமாக பூமியை மாற்றியுள்ளது. இந்த இயல்பான சூழ்நிலையே மனிதன் உருவானதற்கு காரணம். ஒரு வேலை நிலவு மட்டும் இல்லையென்றால் பூமியின் முதல் நிலை உயிரினங்களான பூச்சிகள், நுண்ணுயிரிகள் மட்டுமே தோன்றியிருக்கும். மனிதன் தோன்றியிருக்க மாட்டான். எனவே மனிதன் உருவாக நிலவுதான் காரணம்.


தகவல் : தினத்தந்தி .

Sunday, October 23, 2011

சின்ன சின்ன செய்திகள்


'The Cure for Insomnia' இதுவே உலகின் மிக நீளமான திரைப்படம். மொத்தம் 87 மணி நேரம்.




ஐ.நா சபை தனிப்பட்ட தபால் தலையைப் பயன்படுத்துக்கிறது.



சொக்க தங்கம் என்றால் 1000 கிராமில் 999 கிராம் வரை தூய்மையான தங்கம் இருக்கும்.



சீனாவில் ரயில் நிலையங்களில் சுமை தூக்கிகள்(போர்டர்கள்) இல்லை.



மருந்துகளின் இளவரசி 'பென்சிலின்'.



ஏழு ஊர்களை உள்ளடக்கிய பகுதியே சென்னையில் உள்ள எழும்பூர்.




தகவல் : முத்தாரம் இதழ்

Saturday, October 22, 2011

மரியாதை குறைவான பயம்.

எல்லா மக்களுக்குமே சில விஷயங்களில் பயம் இருக்கும். ஆனால் ஒரு நாட்டுக்கே பொதுவான பயம் இருக்க முடியுமா ?

அப்படி ஒரு பயம்தான் 'டைஜின் கியோபுஷோ'.

இது ஜப்பானியர்களுக்கு வரும் மட்டும் பயம். தங்கள் செய்கைகள், உடல் அசைவுகள், எதிராளியை காயப்படுத்த்திவிடுமோ என்கிற பயம்தான் அது. பெரும்பாலான நாட்டு மக்களுக்கு சுய கவுரவம் தான் முக்கியம். நம்மவர்கள் மரியாதை குறைந்தால் கேட்டு வாங்குவார்கள். ஆனால், ஜப்பானியர்கள் அவமரியாதைக்கு உள்ளானால் கூட புன்னகையோடு நகர்ந்து சென்றுவிடுவார்கள். அவர்களின் பண்பாடு அப்படி.

வீட்டுக்கு வரும் விருந்தினரில் இருந்து, எதிரே வரும் முகம் தெரியாத நபர் வரை, அதனை பேருக்கும் மரியாதை கொடுத்து பழக்கப்பட்டவர்கள். சின்ன உடல் அசைவு கூட தவறான அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்பட்டு மரியாதை குறைவாக எடுத்துக் கொள்ளப்படுமோ என்று கவனமாக இருப்பார்கள்.

தன் தோற்றம், உடல் அசைவு, முக பாவனை, வியர்வை, நாற்றம் போன்றவை எதிராளிக்கு தன்னை பற்றி தவறான பிம்பத்தை ஏற்படுத்திவிடுமோ பயப்படுவார்கள். தன்னால் அடுத்தவர்கள் அவமானப்பட்டு விடுவார்களோ என்ற எச்சரிக்கை உணர்வே, பயமாக, நோயாக மாறி விடுகிறது.

இந்த வகை நோய் உள்ள ஜப்பானியர்கள் யாரையும் சந்திக்க விரும்பாமல் வீட்டுக்குள் முடங்கி கிடப்பார்கள். வேலைக்கும் போக மாட்டார்கள். வீட்டுக்கு யாரவது வந்தால் ஒளிந்து கொள்வார்கள். வேறு வழி இல்லாமல் சந்திக்க நேர்ந்தால் எதிராளியின் கண்களை பார்க்கமாட்டார்கள்.

ஒருவரை சந்திக்க பல முறை குளித்து, பல முறை வாசனை திரவியம் தடவி, சின்ன சுருக்கம் கூட இல்லாமல் துணி அணிந்து இருக்கிறதா என்று பார்த்து விட்டுதான் வெளியே கிளம்புவார்கள்.

சிறு வயதில் தன்னால் பிறர் அவமரியாதை பட்ட சம்பவம் ஒன்று இருந்தால், பிற்பாடு அதற்காக வருத்தப்பட்டால் அதுதான் இந்த பயத்தின் அடிப்படை.

இந்த பயத்தை போக்குவதற்கு ஜப்பானில் பல மருத்துவமனைகள் உள்ளன.

இந்த வகை நோயாளிகளுக்கு 'மோரிட்டா' என்கிற நான்கு நிலை சிகிச்சை கொடுக்கப்படுகிறது. முதலில் தூங்க சொல்வார்கள். எழுந்ததும் பய நோயாளியை கவிதை எழுதவோ அல்லது அன்றைய நிகழ்வுகளை குறிப்பேட்டில் எழுத சொல்வார்கள். அதற்கடுத்து, யோசிக்கவே முடியாத அளவிற்கு வேலை செய்ய சொல்வார்கள். நான்காவது நிலையாக, தொடர்ச்சியாக, பல கருத்தரங்குகளுக்கு சென்று நிறைய மனிதர்களை சந்திக்க வேண்டும் என்பதும் பயிற்சிகளில் ஒன்று. இப்படி ஒவ்வொரு நிலையாக நோயாளின் பயத்தை குறைத்து, நோயில் இருந்து விடுபட உதவி செய்வார்கள்.


தகவல் : தினத்தந்தி.

சொல்வனம் !


"மனிதரை மனிதர் மதித்து நடந்தால் அதுவே பண்பாடு. அதுவே சமூதாய நீதி. எந்தக் காலத்திலும் எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மனிதர்களின் கண்ணியத்துக்கு பரஸ்பரம் மதிப்புக் கொடுத்து நடந்து கொள்வதே நீதி."


- பிரெஞ்ச் சிந்தனையாளர் புரௌதான்.


நன்றி: தோழர் தமிழச்சி பெரியார்

Friday, October 21, 2011

நந்தி உண்டு... நந்தன் இல்லையா ?

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர் பி. சம்பத். அதன் அமைப்பாளராக இருந்து முன்னணியை உருவாக்குவதில் இவருக்கும் பெரும் பங்கு உண்டு.

" சொந்த ஊர் துத்துக்குடி. என் இரண்டு வயதில் அப்பா காலமானார். அம்மாவின் பராமரிப்பில்தான் வளர்ந்தேன். அம்மா ஹோட்டலில் கூலி வேலை செய்து வந்தார். நெல்லை இந்து கல்லூரியில் பி.யூ.சி. படித்தேன். மாணவனாக இருந்தபோது. என் அண்ணாச்சி .டி.யு தொழிற்சங்கத்தில் இருந்தார். அவர் வைத்திருக்கும் மார்க்சிய, இடதுசாரி நூல்களை வாசித்ததால் இயக்க ஈடுபாடு ஏற்பட்டது. மின்சார வாரியத்திலும் துத்துக்குடி அனல் மின் நிலையத்திலும் பணியாற்றினேன். 1987 - ல் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டேன். அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு, 1966 - ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சின் முழு நேர ஊழியன் ஆனேன். தற்போது கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்" - சுருக்கமாக தன் அறிமுகம் முடித்துவிட்டு தமிழகத்தில் தீண்டாமை குறித்து விரிவாகப் பேசத் தொடங்குகிறார்.....

சாதியப் பிரச்சனைகளில் தலையிட வேண்டும் என்ற ஈடுபாடு எப்போது ஏற்ப்பட்டது ?

"1992 - ல் திருச்செந்தூர் தாலுக்காவுக்கு உட்பட்ட நாலு மூலைக் கிணறு கிராமத்தில் தலித் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடந்தது. காரணம் இல்லாமல் ஊரில் உள்ள இளைஞர்களைக் கைது செய்தது காவல் துறை. பெண்கள் மற்றும் ஒன்றரை வயதுக் குழந்தை மீதுகூடத் தோட்டாக்கள் உமிழப்பட்டன. இந்தச் சம்பவம் எனக்குள் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. 1996 - ல் கொடியங்குளத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை கடுமையாகத் தாக்கி, வீடுகளைச் சேதப்படுத்தி, விலை உயர்ந்த பொருட்கள் எல்லாம் திருடிச் சென்றது காவல் துறை. 1995 - 96 -ல் தென் மாவட்டங்களில் தொடர்ச்சியான சாதிக் கலவரங்களில் தலித்துகள் அதிகம் பாதிக்கப்பட்டனர். கட்சி சார்பாகத் தொடர்ந்து அந்த மக்களைச் சந்தித்தேன். தலித்துக்களின் சமூக, பொருளாதார விடுதலைக்கான முயற்சியில் ஈடுபடவேண்டும் என்பது கணத்தில் எடுத்த முடிவல்ல. தொடர்ச்சியாக தலித் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களைக் கண்டதால், எடுத்த முடிவு!".

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பணிகளில் குறிப்பிடத்தக்கவையாக நீங்கள் கருதுவது ?

"2007 - ம் ஆண்டு ஆகஸ்ட் 16 தீண்டாமை ஒழிப்பு முன்னணி உதயமானபோது நான் அதன் அமைப்பாளர் ஆனேன். புதுக்கோட்டையில் நடந்த முதல் மாநாட்டில் மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். நாங்கள் முதலில் தலையிட்டது உத்தப்புரம் பிரச்சனையில்தான். எங்கள் போராட்டத்தால் சுவர் இடிக்கப்பட்டு பாதை உண்டக்கபட்டது.

உத்தப்புரம் தலித் மக்களின் கோரிக்கைக்களுக்காக,2010- ல் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது, போலீஸார் தடியடி நடத்தி, டி.கே.ரங்கராஜன், நான் உள்ளிட்ட பல தோழர்களை அடித்து இழுத்துச் சென்றார்கள். உத்தப்புரத்தில் எம். பி. நிதியில் இருந்து நிழற்குடை கட்டுவதற்கு 3 லட்ச ரூபாயை டி.கே.ரங்கராஜன் ஒதுக்கி தந்து இருக்கிறார். ஆனால், நிழற்குடை கட்டினால் சமூகப் பதற்றம் வரும் என்று காரணம் சொல்லி, அந்த நிதியை அரசு பயன்படுத்தவேயில்லை.

திருச்சி எடமலைப்பட்டி புதூர், கோவை பெருமாள் நகர், சேலம் மகாத்மா காந்தி மகான் தெரு, திருப்பூர் போன்ற பல இடங்களில் தீண்டாமை சுவர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வேலூர் டவுனில் பொதுச் சாலையில் தலித்துகள் நுழைய கூடாது என்பதற்காக இரும்பு கதவு போட்டு சாதியை பாதுகாத்தார்கள். அதனை இடங்களிலும் எங்கள் போராட்டங்களால் தீண்டாமைச் சுவர்கள் தகர்க்கப்பட்டன.

2008 ஜூலை 12 அன்று அருந்ததியர் உள் ஒதுக்கீடு கேட்டு பிரமாண்டமான பேரணியை சென்னையில் நடத்தி, அன்றைய முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து மனு அளித்தபோது, கொள்கை அளவில் அருந்ததியருக்கு மூன்று சதவிகித உள் ஒதுக்கீட்டு வழங்க ஒப்புக்கொண்டார். 18 இடங்களில் ஆலயப்
பிரவேசப் போராட்டங்கள் நடத்தி, முதன் முதலாக தலித் மக்களை கோயிலுக்குள் அழைத்து சென்று இருக்கிறோம்.

63 நாயன்மார்களில் நந்தன் மட்டுமே தலித் நாயன்மார். சிதம்பரம் கோயிலுக்குள் அவர் நுழைந்த வழி என்பதற்காக, தெற்கு வாசலை அடைத்து வைத்து இருக்கின்றனர். முன்பு அந்த பாதை இருந்ததற்கான சான்றுகள் சேக்கிழார் புராணத்தில் இருக்கின்றன. கட்டுமான பணிகளுக்குக்காதான் அந்த வாசல் தற்காலிகமாக வைக்கப்பட்டதாகவும், பின்னர் மூடப்பட்டதாகவும் கதை விடுகிறார்கள். தற்காலிக வாசலுக்கு எதற்கு கோபுரம் வைத்தார்கள் ? அதிகாரபூர்வமற்ற வாசலுக்கு முன் எதற்கு நந்தி வைத்தார்கள் ?.

2010 - ல் பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று அந்த வாசலைத் திறக்க கோரி கண்டன ஆர்பாட்டம் நடத்தினோம். ஆனால் அரசு செவி சாய்க்கவில்லை. 'நந்தன் என்று ஒருவர் இருந்தாரா என்பதே சந்தேகத்துக்கு இடம் இன்றி நமக்கு தெரியாது' என்று அப்போதைய முதல்வர் கருணாநிதி கூறியது வியப்பை அளித்தது.


தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்று பெயர் வைத்திருப்பது ஏன்?

சாதியை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழித்து விட முடியுமா?

சாதி ஒழிக்கப்பட வேண்டும். சாதிய ஒடுக்குமுறையின் கோர வடிவம்தான் தீண்டாமை. பெரியாரும், அம்பேத்காரும் தீண்டாமையைக் ஒழிக்க தனி கவனம் எடுத்து கொண்டார்கள். தீண்டாமை ஒழிப்பு என்பது, சாதி ஒழிப்பின் பிரிக்க முடியாத முன்னுரிமைக் கடமை. தீண்டாமை முற்றிலும் ஒழிந்து போனாலும் கூட சாதியை ஒழிக்க தீண்டாமை ஒழிப்பு முன்னணி தொடர்ந்து போராடும்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்ற தலித் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுக்கிறதா ?

தீண்டாமை ஒழிப்பு முன்னணியிலேயே பல தலித் அமைப்புகள் உள்ளன. மாநில அளவில் 18 அமைப்புகளும், மாவட்ட அளவில் 67 அமைப்புகளும் உள்ளன. சில தலித் அமைப்புகள் தங்கள் சுயநலத்துக்காவும், பதவியை பெறுவதற்காகவும், தொடங்கிய திசையை விட்டு விலகிச் செல்வதுபோலத் தோன்றுகிறது. அரசியல் கட்சிகளாக உருவெடுக்கும்போது இந்த மாதிரியான போக்கு உருவாகிறது. இதனை மாற்றிக் கொண்டால் எந்த அமைப்புடனும் இணைந்து செயல்படுவதில் எந்தத் தயக்கமும் இல்லை.


அப்படியென்றால் தலித்துகள் கட்சி அரசியலுக்கு வரவே கூடாது என்கிறீர்களா ?

நான் அப்படி சொல்லவில்லை. தலித் மக்களுக்கான அரசியலை முன்னெடுத்து செல்லாமல் சந்தர்பவாதக் கட்சிகளாக மாறுவது தலித் விடுதலைக்கு உதவாது. தலித் மக்கள் நிச்சயமாக அரசியல் சக்திகளாக உருவெடுக்க வேண்டும். அரசு நிர்வாகத்தில் பங்கு பெற வேண்டும். அதுதான் தலித் மக்களுக்கான உண்மையான அரசியல் விடுதலை. வெறுமனே எம்.எல்.-வாகவோ, எம்.பி,யாகவோ ஆகிவிட்டதால், அரசியல் அதிகாரம் பெற்றுவிட்டதாக நாம் சொல்லி விட முடியாது. எம்.எல்., எம்.பி ஆவதைவிட உள்ளாட்சி அமைப்புகளில் தலித்துகள் பதவிக்கு வருவதுதான் இன்றைக்கு பெரும் சவாலாக இருக்கிறது. பாப்பாபட்டி, கீரிப்பட்டி, மேலவளவு போன்ற எத்தனையோ உதாரணங்களை நாம் பார்த்துவிட்டோம்.

சாதி ஒழிப்புக் குறித்த புரிதல்களோடு இயங்கும் பிற இயக்கங்களுடன் இணைந்து உங்கள் அமைப்பு செயல்படுகிறதா ?

பெரியாரின் கொள்கைகளைத் திராவிடக் கட்சிகள் கைவிட்டுவிட்ட நிலையில், பெரியார் பெயரை காப்பாற்றும்படி சாதியம் குறித்து பேசும் இயக்கமாக பெரியார் தி.. இருக்கிறது. அதனுடன் இணைந்து நாங்கள் பல இயக்கங்கள், கருத்தரங்குகள், கூட்டு நிகழ்வுகளை நடத்தி இருக்கிறோம்.


பரமக்குடி துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு அங்கு சென்று வந்தீர்களே... என்ன நிலைமை ?

அங்கே காவல் துறை அடாவடித்னமான அத்துமீறலில் ஈடுபட்டு இருக்கிறது. இம்மானுவேல் குருபூஜைக்குச் செல்லும் தலித் மக்களை இயல்பாக அனுமதித்து இருக்க வேண்டும். செப்டம்பர் 9-ம் தேதி பழனிக்குமார் என்கிற 9-ம் வகுப்பு படிக்கும் தலித் மாணவன் கொலை செய்யப்பட்டான். இம்மானுவேல் குருபூஜை குறித்த அச்சத்தை ஏற்படுத்துவது தான் இதன் நோக்கமாக இருந்திருக்க முடியும். இந்த பின்னணியில் ஜான் பாண்டியனைக் கைது செய்ததன் மூலம் நிலைமையை மோசமாக்கியது காவல் துறை. தங்களது கடும் அதிருப்தியை தெரிவிக்க, மறியல் செய்ய முயன்றவர்களை கலைக்க எளிய வழிமுறைகளைக் கையாளாமல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது கண்டனத்துக்குரியது. தமிழக அரசு நியமித்துள்ள கண்துடைப்பு விசாரணை கமிஷன் மீது தலித் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. நாங்கள் சி.பி.. விசாரணைக் கோருகிறோம். தவறு இழைத்த அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 லட்ச ரூபாய், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மாஞ்சோலைத் தொழிலாளர் பேரணியின் போதும், உத்தப்புரம், காங்கேயனூர் போராட்டங்களின் போதும் தி.மு.. ஆட்சி. அப்போதும் காவல் துறை இப்படிதான் நடந்துகொண்டது. ஆட்சி மாறினாலும்,
காவல்துறையின் அட்டூழியங்கள் மாறவில்லை. காவல் துறையின் ஒரு பகுதி அதிகாரிகளிடம் சாதியக் கண்ணோட்டம் இருப்பதால் ஆட்சியில் யார் வந்தாலும் சாதிய வன்மைத்துடனே நடந்து கொள்கிறது காவல் துறை.


நன்றி : நிருபர் கவின் மலர்-விகடன் .