Wednesday, November 30, 2011

ஈழம் இன்று - நடுங்கும் ராஜபக்ஷே!



ழம்... இந்த நூற்றாண்டின் சொல்லி மாளாத சோகம்!இரண்டரை ஆண்டுகளைக் கடந்த பிறகும், மரண பீதி இன்னும் விலகவில்லை. கடவுளின் வரைபடத்தில்கூட இல்லாத தேசமாகிவிட்டது. சிதைக்கப்பட்ட இடங்களின் சிதிலங்கள் மீது சிமென்ட் பூசி மறைக்கும் காரியங்கள் மட்டும்தான் இந்த 30 மாதங்களில் நடந்துள்ளன. மிச்சம் இருப்பவர்களை உரிமை பெற்றவர் களாக அல்ல... உயிர் உள்ளவர்களாகக்கூட மதிக்க இலங்கை அரசு தயாராக இல்லை என்பதே உலகத்துக்கான சேதி!

இன்னமும் முறியாத முள் வேலி!

'விடுதலைப் புலிகள் மட்டும் அல்ல... மொத்தத் தமிழர்களும் போராளிகள்தான். அவர்களை வெளியே விடுவது ஆபத்து!’ என்று அனைத்துத் தமிழர்களையும் நடுக் காட்டுக்குள் திறந்தவெளிச் சிறைவைத்து... சுற்றிலும் இரும்பு முள் வேலி அமைத்தார் கள். அதில் சுமார் 3 லட்சம் தமிழர்கள் அடைக்கப்பட்டார்கள். இப்படி ஒரு மனித உரிமை மீறல் உலகத்தில் எங்கும் நடந்தது இல்லை என்று ஐ.நா. சபை உள்ளிட்ட அனைத்து நாடுகளும் திரும்பத் திரும்பச் சொல்லி, ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்குப் பொருளாதாரத் தடை விதிக்கும் சூழ்நிலை வந்த பிறகுதான்... வயதானவர்கள், பெண்கள், குழந்தைகளை வெளியே விட்டார்கள். முள் வேலிக்குள் இருப்பவர்களுக்கும் சரியான சாப்பாடு, குடிக்கத் தண்ணீர்கூடக் கொடுக்காமல்விட்டதில் பலரும் நொந்தே செத்துப்போனார்கள். கையில் பணமும் நகையும் வைத்திருந்தவர்கள், அங்கே இருந்த சிங்கள அதிகாரிகளுக்கு அதைக் கொடுத்து வெளி நாடுகளுக்குத் தப்பித்தார்கள். இப்படிப் பலரும், பல வழிகளில் தப்பியது போக.... இன்னமும் கதிர்காமர் மற்றும் ஆனந்த குமாரசாமி ஆகிய இரண்டு முகாம்கள் இருக்கின்றன. கதிர்காமர் முகாமில் 1,017 குடும்பங்களும் ஆனந்த குமாரசாமி முகாமில் 1,262 குடும்பங்களும் என, மொத்தம் 7,540 பேர் மட்டுமே இருப்பதாகக் கடந்த வாரம் இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரு தகவல் சொல்லப்பட்டுள்ளது.


முகாமைவிட்டு வெளியே வந்து தங்களது சொந்த ஊருக்குச் சென்ற பலருக்கும் அவர்களது வீடு இருந்த சுவடே இல்லை. மரங்கள் உள்ள இடத்தில் டென்ட் போட்டுத் தங்கி இருக்கிறார்கள். அவர்களது சொந்த நிலம் எங்கே என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை. 'அரசாங்கம் எடுத்துக் கொண்டுவிட்டது. பழைய பத்திரங்கள் செல்லாது!’ என்று சொல்லிவிட்டார்கள். மீன் பிடிக்கக் கடற்கரைக்கும் செல்ல முடியாது. இடிபாடுகள்கொண்ட பழைய கட்டடங்களையும் தெருக்களையும் பார்த்த படியே படுத்துக்கிடக்கின்றன தமிழ்க் குடும்பங்கள். 80 ஆயிரம் விதவைகள், 5,000 உடல் ஊனமுற்றோர் அநாதைகளாக அலைகிறார்கள். எங்கள் குழந்தைகளைக் காணவில்லை என்று குவிந்த புகார்களில் இருந்து 49 குழந்தைகள் மட்டும் மீட்கப்பட்டு உள்ளன. 50 ஆயிரம் வீடுகள் கட்ட இந்தியா கொடுத்த கோடிக்கணக்கான பணத்தைவைத்து இதுவரை 50 வீடுகள்கூடக் கட்டித் தரவில்லை என்கிறார் எம்.பி-யான சீ.யோகேஸ்வரன். 'எங்களை யாரும் கேள்வியே கேட்க முடியாது’ என்பதுதான் ராஜபக்ஷே, தமிழர்களுக்குச் சொல்லும் ஒரு வரிச் செய்தி!

எங்கும் ராணுவமயம்!

''வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ராணுவத்தின் ஆட்சிதான் நடக்கிறது!'' என்று தமிழ் எம்.பி-க்கள் கூட்டமைப்பு சொல்கிறது. அதை உறுதிப்படுத்துவது மாதிரியே திரும்பிய பக்கம் எல்லாம் ராணுவம்... ராணுவம்... ராணுவம் மட்டுமே!''போர் முடிந்துவிட்டதே... அப்புறம் எதற்கு ராணுவத்தினரை இந்த அளவுக்கு நிறுத்திவைத்து இருக்கிறீர்கள்? அவர்களை வாபஸ் வாங்க வேண்டியதுதானே?'' என்று தன்னைச் சந்தித்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷேவிடம், ஐக்கிய நாடுகள் அவையின் செயலாளர் பான் கீ மூன் கேட்டார். ''அவர்கள்தான் இப்போது தமிழர்களுக்குச் சேவை செய்கிறார்கள். அரசாங்கத்தின் அனைத்துத் திட்டங்களை யும் அமல்படுத்த அவர்களைத்தான் பயன் படுத்துகிறோம்!'' என்றார் ராஜபக்ஷே. துப்பாக்கியை வைத்துக்கொண்டு சமூக சேவை செய்பவர்களை இலங்கையில்தான் பார்க்க முடியும். வடக்கில் போர் முடிந்து இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. கிழக்கில் போர் முடிந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், யாழ்ப்பாணத்தில் போர் முடிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்படிப்பட்ட யாழ்ப்பாணத்திலேயே இன்னும் 44 ஆயிரம் ராணுவ வீரர்கள் இருப்பதாக, அந்த மாவட்டத்து எம்.பி. சொல்கிறார். அதன் மொத்த மக்கள் தொகையே 6 லட்சம்தான்!
இலங்கை முழுவதும் ஆறு ராணுவப் படைத்தளங்கள் உள்ளன. அதில் நான்கு, தமிழர் பகுதிகளான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வன்னி ஆகிய இடங்களில் உள்ளன. ராணுவத்தின் 17 டிவிஷன்கள் அங்கு உள்ளன. சிங்களப் பகுதியில் நான்கு டிவிஷன்கள் மட்டுமே இருக்கின்றன. 'இன்னமும் தமிழ் மக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்குவதற்காகவே இவர்களை நிறுத்திவைத்து இருக்கிறார்கள்!’ என்று தமிழ் எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டுகிறார்கள்!

சிங்களமயமாகும் தமிழ் நிலம்!

''வடக்கும் கிழக்கும் தமிழர் பெரும்பான்மையாக வாழும் இடம். எனவே, இது தமிழர் தாயகம். இவை இரண்டையும் இணைத்து தமிழ் ஈழம் அமைப்போம்!'' என்பதுதான் தமிழர்கள் இதுநாள் வரை வைத்த கோரிக்கை. வடக்கிலும் கிழக்கிலும் சிங்களவர்களைப் பெரும்பான்மை ஆக்கிவிட்டால்? தமிழர் தாயகம், இணைப்பு, தமிழ் ஈழம் என்ற கோரிக்கையே செல்லாததாக ஆகிவிடும் அல்லவா? ராஜபக்ஷேவின் திட்டம் இதுதான். இப்போது தமிழர் பகுதியில் இதுதான் நடக்கிறது.தமிழர் கையில் இருந்த நிலங்களை வித்தியாசமான தந்திரத்தின் மூலம் பறிக்கிறார்கள். 'ஊர்க் காவல் படைக்கு இடம் வேண்டும்’, 'ராணுவத்துக்கு இடம் வேண்டும்’ என்று சொல்லி, மொத்தமாக அரசாங்கம் எடுத்துக்கொள்கிறதாம். பிறகு, இந்த இடங் கள் ராணுவ வீரர்களுக்குத் தரப்படுகின்றன. அவர்கள் சிங்கள மக்களுக்கு விற்பனை செய்கிறார்கள். பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இந்த மாதிரி கையகப்படுத்தப்பட்டு சிங்களவர்களுக்குத் தாரைவார்க்கப்படுகின்றன. ''புதிய முகாம் அமைத்தல், ராணுவத்துக்கான இடவசதிகள், ராணுவத்தின் தேவைகள் ஆகியவற்றுக்காக காணிகளை எடுப்பது என இடங்கள் பறிக்கப்படுகின்றன. மக்கள் தங்களது சொந்த இடங்களுக்குச் சென்று தங்களது வாழ்க்கையைத் தொடங்க முடியாமல், அவர்களது வாழ்க்கையே ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது!'' என்கிறார் தமிழ்த் தலைவர்களில் ஒருவரான இரா.சம்பந்தம். இதனால், ஓமந்தை என்ற இடம் 'ஓமந்த’ என்ற சிங்கள உச்சரிப்புடன் சொல்லப்படுகிறது. கொச்சன்குளம் என்ற ஊர் 'கால பொவசெவெள’ என்று மாற்றப்பட்டு விட்டது. தமிழில் எழுதப்பட்ட பலகை கள் அழிக்கப்பட்டு... சிங்களம், ஆங்கிலத் தில் எழுதப்படுகின்றன. கிளிநொச்சியில் பிரதான தெருவுக்கு 'மகிந்த ராஜபக்ஷே மாவத்தை’ என்று சூட்டப்பட்டு உள்ளது. இந்து, கிறிஸ்துவக் கோயில்கள் இடிந்த நிலையில் கிடக்க... புத்த விகாரைகள் புத்துணர்வு பெற்று எழுகின்றன!

நடுங்கும் ராஜபக்ஷே!



''இலங்கைக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொடர்ந்து அச்சுறுத்தல் இருக்கிறது. எந்த நாட்டுக்குச் சென்றாலும் என் மீது தாக்குதல் நடப்பதற்கான சூழல் இருக்கிறது. அதனால்தான் ராணுவ பலத்தை நான் அதிகப்படுத்தி வருகிறேன்!'' என்று கொழும்பு கல்லூரி ஒன்றின் பட்டமளிப்பு விழாவில் அதிபர் ராஜபக்ஷே பேசும்போது சொன்னார். இலங்கைப் பகுதியில் அதிக அளவில் விழாக்களில் அவர் பங்கேற்பது இல்லை. பெரும்பாலும் அலரி மாளிகை விழாக்களில் மட்டுமே கலந்துகொள்கிறார். லண்டனுக்கு அவர் சென்றிருந்தபோது புலம்பெயர் ஈழத் தமிழர்கள், அவர் தங்கி இருந்த இடத்தைச் சுற்றி வளைத்தபோது 'எப்படித் தப்பினார்?’ என்று வெளியே தெரியாத அளவுக்கு கொழும்பு வந்து குதித்தார். இதன் பிறகு அவரது வெளிப் பயணங்கள் பலதும் தள்ளிவைக்கப்பட்டன!அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் ராஜபக்ஷே மீது 'போர்க் குற்றவாளி’ என்று குற்றம்சாட்டும் வழக்குகள் பாய்ந்துவருகின்றன. இதனாலும் பயணங்கள் தள்ளிவைக்கப்படுகின்றன. ராஜபக்ஷேவுக்கு அடுத்த நிலையில் அவரது தம்பி பசில் வருவாரா அல்லது அவரது மகன் நிமல் வருவாரா என்ற உள்வீட்டுக் குழப்பம் இப்போதே தொடங்கிவிட்டது. தனது மகனைக் கொண்டுவர வேண்டும் என்பதில் மகிந்தாவின் மனைவி ஆர்வமாக இருக்கிறார். விடுதலைப் புலிகள் பேரால் கூறப்படும் ஆபத்து ஒரு பக்கம் இருந்தாலும், நிதி நெருக்கடி காரணமாக இலங்கை அதிகப்படியான கடன் சுமைகளில் மூழ்கிவருவதும்... இதனால் பொருட்களின் விலை அதிகமாகி வருவதும் சிங்கள மக்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கி உள்ளன. என்ன ஆனாலும் பரவாயில்லை என்று ராணுவத்துக்கு மட்டும் 229.9 மில்லி யன் ஒதுக்கிவிட்டு உட்கார்ந்துவிட்டார் ராஜபக்ஷே. நாடாளுமன்றத்தில் இந்த பட்ஜெட் மீதான விவாதம் நடந்துகொண்டு இருந்தபோது, பார்வையாளர் மாடத்தில் இருந்து ஒருவர் தண்ணீர் பாக்கெட்டைத் தூக்கிப் போட... வெடிகுண்டு விழுந்ததைப் போல அத்தனை பேரும் பதறிப்போனார் கள். அனைவரையும்விட அதிகமாகப் பதறியவர் ராஜபக்ஷே!

கண்துடைப்பு கமிஷன்!

''ராஜபக்ஷே மீது போர்க் குற்ற வழக்கைப் பதிவுசெய்துக் கைது செய்'' என்பதுதான் உலகெங்கும் வாழும் தமிழர்களின் குரல். இதற்கு அவர் சொன்ன பதில், ''இலங்கையில் போர் விதிமீறல் நடந்திருக்கிறதா என்று நாங்களே ஆய்வு நடத்தி, அப்படித் தவறு செய்தவர்களைக் கண்டிப்போம்!'' என்பது. அதாவது, இலங்கை ராணுவத்தினர் செய்த தவறுகளை இலங்கை அரசே விசாரிக்கும் காமெடி இது!'கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு’ என்று இதற்குப் பெயர். 338 பக்கம்கொண்ட இந்தக் குழுவினரின் அறிக்கை ராஜபக்ஷேவிடம் கடந்த 20-ம் தேதி தரப்பட்டது. ''மொத்த சம்பவங்களைப் பூசிமெழுகும் காரியம் இது'' என்று கொழும்பு பத்திரிகையாளர்கள் சொல்கிறார்கள். சிங்கள மொழி பேசியபடியே தமிழ்ப் பெண்களைக் கற்பழிக்கும் காட்சியும்... தமிழ் இளைஞர்களை ராணுவத்தினர் நிர்வாணமாக்கி, கண்ணைக் கட்டி சுட்டுக் கொல்லும் காட்சியும்... சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளி பரப்பானது. உலகத்துக்கு உண்மையைச் சொன்ன ஒரு சில நிமிடங்கள் அவைதான். அந்தக் காட்சியே பொய்யா னது என்று இந்த அறிக்கை சொல்கிறதாம். ''ராணுவத் துக்கு வேறு வழி இல்லை. பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று ராணுவம் நினைத்திருந்தால், தீவிரவாதிகளது கை ஓங்கி இருக்கும்!'' என்று காரணமும் சொல்கிறதாம். அதையும் மீறிச் சில சம்பவங்கள் நடந்திருந்தால், அதற்கு சரத் ஃபொன்சேகாவும் அவரது ஆதரவு ராணுவ அதிகாரிகள் சிலரும்தான் காரணம் என்று கைகாட்டுகிறதாம் இந்த அறிக்கை. நாடாளுமன்றத்தில் இன்னமும் தாக்கல் செய்யப்படாத அந்த அறிக்கையின் சில தகவல்களை சிங்களப் பத்திரிகைகள் வெளியிட ஆரம்பித்து உள்ளன. ''இந்த அறிக்கையை ஏற்க முடியாது!'' என்று சிங்களக் கட்சிகளே சொல்ல ஆரம்பித்துஉள்ளன!

எப்படி இருக்கிறார் ஃபொன்சேகா?

மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சரத் ஃபொன்சேகா, கொழும்பு வெலிக்கடைச் சிறையில் இருக்கிறார். அவரது விடுதலைக்காக எடுக்கப்பட்ட அத்தனை முயற்சிகளும் பொய்த்துவிட்டன. தனக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுத் தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்தார் ஃபொன்சேகா. யார் இந்தத் தண்டனையைக் கொடுத்தாரோ... அதே நீதிபதிக்குப் பதவி உயர்வைக் கொடுத்து, அந்த அப்பீல் மனுவையும் அவரையே விசாரிக்கச் சொல்லிவிட்டார் ராஜபக்ஷே. பிரிந்த இந்த இரண்டு மாஜி நண்பர்களுக்குள் நடக்கும் அரசியல்தான் இன்றைய இலங்கை அரசியல். ''என் கணவரைக் காப்பாற்றுங்கள்!'' என்று ஃபொன்சேகாவின் மனைவி தான் தினமும் அறிக்கை விடுகிறார். ஃபொன் சேகாவை எப்போது எல்லாம் மருத்துவமனையில் காட்ட வேண்டுமோ... அப்போது எல்லாம் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி, அங்கு அழைத்துச் செல்ல மறுத்துவிடுகிறார்களாம். இந்த நிலையில், ஃபொன்சேகாவின் விடுதலைக்காக சிங்க ளக் கட்சிகளை ஒன்றுதிரட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே குரல் கொடுத்துள்ளார். உடனே, ரணில் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளைச் (ஹோமோ செக்ஸ் மாதிரியான புகார்கள்) சொல்லிக் கேவலப்படுத்தும் காரியங்கள் தொடங்கி இருக்கின்றன. 'ஃபொன்சேகா உயிரோடு வெளியே வர மாட்டார்!’ என்கிற அளவுக்கு அவருக்கு நெருக்கடிகள்ஏற்பட்டு விட்டனவாம்!

பேசிப்பார்க்கும் தமிழ் எம்.பி-க்கள்!


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் அணி திரண்டுள்ள தமிழ் எம்.பி-க்கள் மட்டும்தான் ஈழத் தமிழர்களுக்காக அந்த மண்ணில் இருந்தபடி தயங்காமல் பேசுகிறவர்கள். நாடாளுமன்றத்திலும் இவர்கள் பேச்சு நம்பிக்கை தருவதாக உள்ளது. பயன் இருக்கிறதோ இல்லையோ, இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் இருக்கிறார்கள். இதுவரை 13 முறை இவர்கள் பேசி இருக்கிறார்கள். டிசம்பர் மாதம் மட்டும் நான்கு நாட்கள் பேசுவதற்கான தேதி குறிக்கப்பட்டுள்ளது. மீள் குடியமர்வு, புனர்வாழ்வு, வீட்டுவசதி, தொழில்வாய்ப்பு, அத்தியாவசியத் தேவைகள் ஆகிய கோரிக்கைகளை இவர்கள் முன்வைப்பதோடு, அரசியல் தீர்வையும் வலியுறுத்துகிறார்கள். ''நாங்கள் எங்களுக்குத் தேவையானதைச் சொல்லிவிட்டோம். அரசு இதுவரை எந்தப் பதிலும் சொல்லவில்லை!'' என்கிறார் சம்பந்தம்.'இந்தப் பேச்சுவார்த்தையில் நாங்கள் நிதானமாகச் செயல்படுவோம். எமது மக்களுக்கு நாங்கள் துரோகம் செய்ய மாட்டோம். விட்டுக்கொடுக்க முடியாத விடயங்களை விட்டுத்தர மாட்டோம்!'' என்கிறார் சம்பந்தம். இன்னும் எத்தனை சுற்று பேசுவார்கள் எனப் பார்ப்போம்!

தமிழர்களின் மௌன எழுச்சி!

தமிழர்கள் முதலில் அடி வாங்கியதும், திருப்பி அடிக்க ஆரம்பித்ததும் யாழ்ப்பாணம்தான். எல்லாவற்றுக்கும் ஆரம்பம் அதுதான். இப்போது அங்கும் சில ஒளி மின்னல்கள் கடந்த வாரத்தில் தெரிந்தன. உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நவம்பர் 27 மாவீரர் நாளுக்கான நிகழ்வாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டதாம்.'சத்திய லட்சிய வேள்வியில் தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களின் சத்திய வழியில் பயணித்து, சுதந்திரத் தமிழீழத்தை வென்றெடுக்க உறுதி பூணுவோம்!’ என்று எழுதப்பட்டதைப் பார்த்து, தமிழ் மாணவர் கள் உணர்ச்சி அடைய... அடுத்த சில நிமிடங்களிலேயே ஆறு பைக்குகளில் முகமூடி அணிந்து (ராணுவத்தினர் என்று சொல்லப்படுகிறது!) வந்தவர்கள் அந்த சுவரொட்டியைக் கிழித்துச் சென்றுவிட்டார்களாம். கானா நகர் மணற்காடு முத்துமாரி அம்பாள் ஆலயத்துக்கும் பண்டத்தரிப்பான் குளம் ஸ்ரீசுந்தரேசன் பெருமாள் கோயிலுக்கும் வந்த கடற்படை வீரர்கள், 'இந்த ஒரு வாரத்துக்கு கோயிலில் மணி அடிக்கக் கூடாது!’ என்று உத்தரவிட்டார்களாம்.
மீறி ஒலித்திருக்கிறது 'மாவீரர்’ மணிஓசை!





நன்றி : விகடன்.
நன்றி : மழைக்காகிதம் வலைப்பூ
(http://malaikakitham.blogspot.com)


Tuesday, November 29, 2011

கெடுவார், கேடு நினைப்பார் !

பல மாதங்களுக்கு முன் ஆஸ்திரேலிய செய்தித்தாள்களை ஆக்கிரமித்து இருந்த வேலைவாய்ப்பு செய்தி இதுதான் : 'நன்றாக வளர்ந்திருக்கும் தக்காளி செடியை உலுக்க ஆட்கள் தேவை'.

எதற்காக செடியை சம்பளம் கொடுத்து உலுக்க வைக்கிறார்கள் ? அதற்கு காரணம் இருக்கிறது. மனிதன் இயற்கையை மதிக்காமல் தன் விருப்பத்திற்கு ஆட்டம் போட்டதின் விளைவுதான் இது.

மரங்களை வெட்டி, இயற்கையை அழித்து, பூச்சிக்கொல்லி மருந்துகளை அளவிற்கு அதிகமாக பயன்படுத்தியதன் பலன். மனிதர்கள் படுவேகமாக பூச்சிகள் வளர்வதை அழித்து வருகிறார்கள். கொசு, கரப்பான் போன்ற நோயை உண்டாக்கும் பூச்சிகள் என்றால் பரவாயில்லை. ஆனால், நமக்கு நன்மை செய்யும் பூச்சிகளும் அழிந்து போனால் என்ன செய்வது ?

இனி நடந்த நிகழ்வைப் பார்ப்போம்.

ஆஸ்திரேலியாவில் மரம், செடி, கொடிகள் எல்லாமே திடகாத்திரமாக வளர்கிறது. ஆனால், அவை பூப்பதில்லை. காய்ப்பதில்லை.காரணம் ஏனென்று தெரியவில்லை ? கடைசியில் விடை கிடைத்தது. 'பம்பிள் பீ' என்கிற குண்டுத்தேனீ வயல்வெளிகளில் அங்கும் இங்குமாக பறந்து கொண்டிருக்கும். தற்போது அந்த தேனீ க்கள் முற்றிலும் அழிந்து விட்டது.

இந்த தேனீக்கள் தேன் சேகரிப்பதோடு தன் வேலையை முடித்து கொள்வதில்லை.கூடுதலாக மற்றொரு வேலையையும் செய்கிறது. அது, ஒரு பூவில் இருக்கும் மகரந்தத்தை இன்னொரு பூவிற்கு எடுத்து செல்கிறது. இந்த சேர்கைதான் பூக்கள்,காய்கள் உருவாவதற்கு காரணம். இந்த அரிய பணியை செய்து வந்த பம்பிள் பீ குண்டுத்தேனிக்கள் தற்போது இல்லை. தேனிக்கள் குறைந்ததால் மகசூலும் குறைந்தது.

அதனால், அந்த வேலையை செய்ய ஆட்களை அமர்த்துகிறார்கள், பண்ணை முதலாளிகள். அந்த வேலையாட்களுக்கு என்ன வேலை தெரியுமா ? நாள் முழுவதும் தோட்டங்களை சுற்றி வர வேண்டும். ஒவ்வொரு தக்காளி செடியாக சென்று அதை மென்மையாக உலுக்க வேண்டும். செடியின் பூக்களில் இருந்து மகரந்த துகள்கள் கீழே கொட்டும். அது காற்றில் பறந்து அயல் மகரந்தச் சேர்க்கையை நிகழ்த்தும்.


இந்த வேலையை திறம்பட செய்யத்தான் இப்போது ஆட்களை விளம்பரம் கொடுத்து கூவி அழைக்கிறார்கள். பம்பிள் பீ ஒரு பைசா கூட வாங்காமல் இலவசமாக திறம்பட செய்த வேலையை, இப்போது மனிதர்கள் செய்ய தொடங்கி இருப்பது ஒரு தொடக்கம்தான் என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள். இன்னும் சந்திக்க வேண்டியது நிறைய இருக்கிறது.

சரி, பம்பிள் பீ குண்டுத் தேனீ எப்படி காணமல் போனது ? நம்மூரில் சிறுவர்கள் தட்டான் பூச்சிகளை பிடித்து விளையாடுவது போல, ஆஸ்திரேலிய சிறுவர்கள் 'கொழு கொழு'வென உடம்பை வைத்து கொண்டு சாவதானமாக பறந்து திரியும் இந்த குண்டுத் தேனீயைப் பார்த்தல், பிடித்து விளையாடி கொன்று விடுவார்கள்.
இப்படி விளையாட்டாக விளையாடியது வினையாக முடிந்தது. இந்த குண்டுத் தேனீ கொட்டினால் வலி தாங்க முடியாது என்ற தவறான எண்ணமும், இந்த தேனீ அழிந்து போக மிக முக்கிய காரணம். இதுதவிர, விவசாயத்திற்கு பயன்படுத்தும் ரசாயன பூச்சிகொல்லியும் இந்த வகை பூச்சிகளை கொன்று குவித்துவிட.....விவசாயிகளுக்கு நண்பனாக விளைச்சலை அதிக்கபடுத்திய, மனிதனுக்கு தேனை கொடுத்த தேனீ க்களும் அழிந்து விட்டன.

இப்போது இயற்கை செய்த வேலையை மனிதன் செய்கிறான். இப்படி இயற்கை ஆற்றும் பணிகள் ஒவ்வொன்றையும் மனிதன் செய்ய முடியுமா ? அது நடக்கும் காரியமா ? உயிரினங்களின் மறைவு, இயற்கை கொடுக்கும் பதிலடி. இனியாவது இயற்கையை பேணிக் காப்போம்.





தகவல் : தினத்தந்தி

Monday, November 28, 2011

ஆர்டிக் அபாயம் !

புவி வெப்பமடைதல் காரணமாக பருவ நிலை மாற்றம் ஏற்பட்டு ஆர்டிக் பனிக்கட்டிகள் உருகிவருவது ஏற்கனவே அனைவரும் அறிந்த செய்தி. இன்னும் 20 ஆண்டுகளில், அதாவது, 2030 - ஆம் ஆண்டுக்குள் ஆர்டிக் பனிக்கட்டிகள் முழுவதும் உருகிவிடும் என்றே இதுவரை விஞ்ஞானிகள் கூறி வந்தனர். இந்நிலையில் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கடல் ஆராய்ச்சி நிபுணரான பீட்டர் வாதம்ஸ் கடந்த சில ஆண்டுகளாக பூமியின் வட துருவத்தில் உள்ள ஆர்டிக் கடல் குறித்து ஆராய்ச்சி செய்து வந்தார். அந்த ஆய்வு முடிவு நம் தூக்கத்தை கலைத்திருகிறது.

"ஆர்டிக் கடலில் உள்ள பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருவது தெரியவந்துள்ளது.அங்கு பருவ நிலை மாற்றம் அடைந்துள்ளது. வெப்பநிலை அதிகரித்துள்ளது. எனவே எதிர்பார்த்ததைவிட ஆர்டிக் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. 2030 - வரைக்குள் உருகும் என்ற நிலை மாறி, இன்னும் 3 ஆண்டுகளில், அதாவது 2015 - க்குள் பனிக்கட்டிகள் உருகிவிடும்.

இதனால் ஆர்டிக் கடலை ஒட்டியுள்ள வடக்கு ரஷ்யா, கனடா,கீரின்லாந்து உள்பட 40 லட்சம் சதுர கிலோ மீட்டர் நிலப்பகுதிகள் பாதிப்புக்கு உள்ளாகும்.

அதேவேளையில், அங்குள்ள துருவ கரடிகள் மொத்தமும் அழிந்துவிடும் அபாயம் உள்ளது" என எச்சரித்து இருக்கிறார் பேராசிரியர் வாதம்ஸ்.



தகவல் : டி. கார்த்திக்

நம்பினால் நம்புங்கள் !

மனித உடம்பில் ரத்த ஓட்டம் பற்றி ஆராய்ந்தவர் வில்லியம் ஹார்வி. ஆனால், இவருக்கு 400 ஆண்டுகளுக்கு முன்பே உடற்கூறு பற்றி ஆராய்ந்து ரத்த ஓட்டத்தின் பாதையை படம் வரைந்தவர் ஓவியர் லியானார்டோ டாவின்சி.


நோய் வந்தால் தங்கள் பெயரை மாற்றிக் கொள்கின்றனர் திபெத்தியர்கள். பெயரை மாற்றினால் நோய் குணம் ஆகிவிடும் என்பது இவர்களின் (மூட) நம்பிக்கை.இதனால் ஒவ்வொருவருக்கும் பல பெயர்கள் உள்ளன.


23 சதவிகிதம் அமெரிக்கர்களுக்கு வங்கியில் பணம் செலுத்தும் படிவத்தை சரியாக நிரப்ப தெரியாது.


பழைய படுக்கை விரிப்புகள், தலையணைகளில் 1 லட்சம் முதல் 1 கோடி வரையிலான 'டஸ்ட் மைட்' உயிரிகள் இருக்கும்


தகவல் : முத்தாரம் இதழ்

Saturday, November 26, 2011

பச்சை நிறத் துரோகம்


கிளிக்குஞ்சு
மரப் பொந்திலிருந்து எடுத்துவரப்படுகிறது
குழந்தை
வீட்டிலிருந்து கூட்டிவரப்படுகிறது

கிளிக்குஞ்சு கூண்டில் அடைக்கப்படுகிறது
குழந்தை பள்ளியில் சேர்க்கப்படுகிறது

கிளிக்குஞ்சு கத்திக்கொண்டே இருக்கிறது
குழந்தை அழத் துவங்குகிறது

பழம் கொடுக்கப்படுகிறது கிளிக்கு
அழுகையை நிறுத்திவிடுகிறது குழந்தை

கிளி பழத்துக்கு அடிமைப்படுகிறது
குழந்தை பாடல்களைக் கற்றுக்கொள்கிறது

சீட்டுகளைக் கலைத்து
நெல்மணியைப் பெற்றுகொள்கிறது கிளி
புததகங்களை அடுக்கி
பாராட்டுப் பெறுகிறது குழந்தை

தனியாகப் பள்ளி செல்லப்
பழகி விட்டது குழந்தை
கவனமாக வெட்டிவிடப்படுகின்றன
கிளியின் சிறகுகள்

வெளிச்சமாயிருப்பதாகச் சொல்லப்படுகிறது
குழந்தையின் எதிர்காலம்
நல்ல காலம் பிறக்குமென
எழுதப்பட்டிருக்கிறது கிளிச் சீட்டில் !



- இளையநிலா ஜான்சுந்தர்.





நன்றி : விகடன்

Thursday, November 24, 2011

போர் வினோதங்கள் !

ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டிற்கும் நடக்கும் உக்ரமான
போர்களில் சில வினோதமான நிகழ்வுகள் நடைபெறுவதுண்டு. ஆரம்ப காலங்களில் போர் விமானங்கள் போருக்கான பொருட்களை கொண்டு செல்ல மட்டுமே பயன்பட்டு வந்தன.

1911 - ல் துருக்கிய போரின் போது விமானங்களில் குண்டுகளை எடுத்து சென்ற இத்தாலிய விமானி ஒருவர், இத்தனை குண்டுகள் வைத்திருந்தும் நேரடியாக போரில் ஈடுபட முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் இரண்டு குண்டுகளை கையில் எடுத்து வீசினார். இப்படி ஆரம்பித்துதான் விமானத்தில் இருந்து குண்டு போடும் (கொடுமை) முறை ஏற்பட்டது.

ஜப்பானிய போர் விமானிகளில் மிக முக்கியமானவர் ஹிரோயோஷி நிஷிசலா. தனி ஆளாக விமானத்தில் பறந்து 80 எதிரி விமானங்களை சுட்டு வீழ்த்தியவர்.கடைசியில் பயணிகள் விமானத்தில் பயணம் செய்த போது விபத்தில் சிக்கி இறந்தார்.


இரண்டாம் உலக போரின் போது கிரிமியாவின் சூடாக் என்ற இடத்தில் போர் நடந்தது. இதில் ஜெர்மனியும் ரஷ்யாவும் மோதி கொண்டன. ஆவேசமாக நடந்த இப்போர் நாட்டை காக்க அல்ல.

ஒரு பொருள் சேமித்து வைக்கும் கிடங்கை காப்பற்ற நடந்தது. அப்படி அந்த கிடங்கில் என்ன இருந்தது என்று பார்த்தால் லடசக்கணக்கான குடிமகன்களுக்கான மது பாட்டில்கள் இருந்தது.

ரஷ்யாவுக்கும் பின்லாந்துக்கும் இடையே நடந்த ஒரு யுத்தத்தில் ஒரு பின்லாந்து வீரரின் உடலுக்குள் பாய்ந்த குண்டு வெடிக்காமல் அப்படியே உடலில் பொதிந்து கொண்டது. எப்போது வெடிக்குமோ ? என்ற மரண பயத்தில் வீரர் மயங்கி கீழே விழுந்தார்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, வீரரின் உடலில் பாய்ந்த குண்டு வெடித்து விடுமோ என்ற பயத்துடனேயே மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அந்த குண்டை பத்திரமாக அப்புறப்படுத்தினர்.

1942 - ல் ரஷ்யாவின் விமானி கஸ்னேக்லேபாவ் விமானத்தில் பயணம் செய்து கொண்டு இருந்த போது திடீரென்று அவருடைய விமானம் தாக்குதலுக்கு உட்பட்டது. எப்படியோ தப்பித்து விட்டார். பின் அந்த இடத்தில் இருந்து தப்பிக்க நினைத்த போது, விபத்து நடந்த இடத்தில் எதேச்சையாக அங்கு ஒரு ஜெர்மனிய போர் விமானம் நின்று கொண்டு இருந்தது.

தான் ஏறி பயணம் செய்து கொண்டு இருப்பது எதிரி நாட்டின் விமானம் என்று தெரியாமல் ரஷ்யாவுக்குள் நுழைந்தார். அவ்வளவுதான், எதிரி விமானம் உள் நுழைந்து விட்டது என எண்ணிய ரஷ்ய நாட்டு ராணுவத்தினர் சரமாரியாக சுட அதில் இருந்து தப்பித்து வருவதற்குள் அவருக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.

இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மன் தலைநகர் பெர்லின் மீது அமெரிக்கா, குண்டு ஒன்று வீசியது, போருக்கு சற்றும் சம்பந்தப்படாத அப்பாவி மக்களை போல அந்த குண்டு ஒரு மிருகக் காட்சி சாலையில் விழுந்து ஒரு யானை இறந்தது.

முதல் உலகப் போரின் போது அமெரிக்க ராணுவம் பயன்படுத்திய துப்பாக்கி பற்றிய தொழில்நுட்பம் ஜெர்மனிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.

ஒரு புறம், ஜெர்மன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி கொண்டு இருந்த அமெரிக்கா, மறுபுறம், அந்த துப்பாக்கி தொழில்நுட்பத்தின் உரிமத்திற்கான பணத்தை ஜெர்மனிக்கு தவறாமல் வழங்கி கொண்டு இருந்தது.




தகவல் : தினத்தந்தி

Wednesday, November 23, 2011

தகவல் களம் !

மரணம் எனும் நெருக்கடி

உலகிலேயே மிகவும் நெருக்கடியான கல்லறைகள் அமைந்துள்ள இடம் இராக்கில் பாக்தாத் நகரில் உள்ள நஜாப் என்ற இடமே. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இங்கு கல்லறைகளே இருக்கின்றன. ஒவ்வொரு கல்லறைக்கு இடையேயும் ஒரு அடி மட்டுமே இடைவெளி. உலகில் எங்குமே இப்படி நெருக்கடியான கல்லறை கிடையாது.


அழிந்து போன பறவையும்-மரமும்

மொரீஷியஸ் தீவுகளில் வாழ்ந்த இப்பறவையின் பெயர் டோடோ பறவை. கிட்டத்தட்ட 90 சென்டிமீட்டர் உயரமும், 15 கிலோகிராம் எடையும் கொண்டது.

இப்பறவையின் மிகப் பெரிய குறைப்பாடு என்னவென்றால் பறக்கும் திறன் அற்றது. மொரீஷியஸ் தீவிற்கு வந்த டச்சு நாட்டவர்களின் வேட்டையின் காரணமாக இப்பறவை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து 1681 - ல் முற்றிலும் அழிந்துவிட்டது.


நெல் வகை

நெல் வகைகளுக்கு இப்போது புதுப் புதுப் பெயர்கள் வைக்கப்படுகின்றன. ஆனால், 500 ஆண்டுகளுக்கு முன்னாலேயே தமிழ்நாட்டில் 44 வகை நெல்கள் இருந்திருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விவசாய தொழில்நுட்ப கற்பனைக்கும், ஒட்டுவகைப் பயிருக்கும் ஆதாரமாக விளங்கியவை.

நாளாவட்டத்தில் அவற்றின் எண்ணிக்கை குறுகி, 18 வகை மட்டும் இப்போது பதிவில் உள்ளன.

அவை :

1. செம்பவளச் சம்பா
2. மாணிக்கச் சம்பா
3. முத்துச் சம்பா
4. முத்து மாலை
5. முத்து விளங்கி
6. கருங்குறுவை
7. கருஞ்சூரை
8. கருப்புச் சாலி
9. கருப்பன்
10.குங்குமச் சம்பா
11.குங்குமப் பாளை
12.செஞ்சம்பா
13.செந்தாழை
14.செம்பிளசி
15.முழு வெள்ளை
16.வெள்ளை சம்பா
17.வெள்ளை முடங்கன்
18.மாணிக்க மாலை.


தகவல் : டி.வித்யுத் மற்றும் தினத்தந்தி

Tuesday, November 22, 2011

சற்று கவிதை வாசிப்போம்.......


பேசாமல் இருப்பவர்கள்


கோபித்துக்கொண்டு
பேசாமல் இருந்தவர்கள் பின்னால்
பேசாமல் இருந்ததற்காகக்
கோபித்துக்கொள்கிறார்கள்

சாப்பிடுகையில் பேசாதவர்கள்
பின்னொரு தருவாயில்
சாப்பாட்டைப்பற்றியாவது பேசுபவர்களாக
மாறிவிடுகிறார்கள்

பேசாதேயென
மாணவர்களை அதட்டும் குருமார்கள்
பிறகு மாணவர்களின் பகடி நிரம்பிய
பேச்சுக்கு ஆளாகிறார்கள்

நல்லதைப் பேசியவர்கள்
நாளடைவில் பேச முடியாதவர்களாகவும்
யாராலும்
பேசப்படாதவர்களாகவும் ஆகும்
அபாயம் நேர்ந்துவிடுகிறது

குடிமுயங்கப் பேசுபவர்கள்
தெளிந்ததும் தான் பேசியதையும்
பேசாததுபோலக் காட்டிக்கொள்கிறார்கள்

பேச வேண்டிய நேரத்தில்
பேசாத ஒரு தலைவன் வேறு வேறு
காரணங்களைப்
பேசிக்கொண்டிருக்கிறான்

காலம்
கடந்து போவது தெரியாமல்
பேசுபவர்கள்
கடந்த காலத்தையும் பேசும் நிலை

பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை
பேசாமல் இருந்தாலும் அதேதான் !


- கவிஞர் யுகபாரதி








தங்கம்



"புறப்பட்ட இடத்துக்கே
பொருள்கள் வந்து சேர்கின்றன.
இந்த பொது விதிக்கு
நீதான் பொது விலக்கு.

மரணித்துப் போனது
மாதாவாக இருந்தால் கூட
அழுதுக் கொண்டே
உன்னை மாத்திரம்
அப்புறப்படுத்திவிடுகிறோம் !"


- வலம்புரி ஜான்.



நன்றி : விகடன்.




Monday, November 21, 2011

படம் சொல்லும் சேதி

எவ்வளவுதான் நவீன வாகனங்கள் வந்தாலும், சைக்கிளை அடித்துக் கொள்ள முடியாது. சைக்கிளின் பெருமையை மையமாக வைத்து "பார் எவர் பைசைக்கிள்" (Forever Bicycle) என்ற பெயரில் சீனக் கலைஞர் அய் வெய் வேய், தைவான் நகர் தாய்பேயில் சைக்கிளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் காட்டிய வித்தியாசமான காட்சி இது.


அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அடிக்கடி நிகழும் வாணவேடிக்கை வடமுனை ஒளி அல்லது தென்முனை ஒளி. இரவில் மட்டுமே இது ஏற்படும். இதன் அறிவியல் பெயர் Aurora Borealis Celestial Phenomenon. இதற்கு அபூர்வ ஒளி என்றும் பெயர். இந்த ஒளித் தோற்றம் பூமி தோன்றிய காலம் முதலே ஏற்பட்டு வருகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.


உலகின் மிகப் பெரிய மிதக்கும் விளையாட்டு அரங்கம்
'மெரினா பே' (Marina Bay). சிங்கப்பூரில் உள்ளது. கடற்கரை ஓரத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது. இதை நீரிலேயே மிதக்கும்படி வடிவமைத்து இணைத்துள்ளனர். நீளம் 120 மீட்டர். அகலம் 83 மீட்டர். இந்த அரங்கில் 9000 பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்க்க முடியும்.




தகவல் : முத்தாரம் இதழ்.

தகவல் துளி !

கிறிஸ்துமஸ் மரத்தை நட்டு அதில் விளக்கு அலங்காரம் செய்யும் பழகக்கத்தை அறிமுகப்படுத்தியவர் மார்டின் லூதர் கிங்.


11 நாடுகளை எல்லைகளாக கொண்டது சீனா.



இந்தியாவின் முதல் மின்சாரக் காரின் பெயர் ரேவா. 2001 - ல் தயாரிக்கப்பட்டது.


நாயை விட பல மடங்கு மோப்ப சக்தி உடையது விலாங்கு மீன்.



சூரியனின் மகன் என்றழைக்கப்படும் தாவரம் பருத்தி.



தமிழகத்தில் கடற்கரை இல்லாத மாவட்டங்கள் - 18





தகவல் : சி.பரத், சென்னை மற்றும் ராஜசேகர், செய்யாறு.

Sunday, November 20, 2011

டீ கடை நாயரும் மாதவன் நாயரும்

அதிர்ஷ்டமில்லாத எண் 13 என்று வெளிநாடுகளில் ஒரு மூட நம்பிக்கை உண்டு. குடிமக்கள் மட்டுமின்றி, பல நாட்டு அரசுகளே கூட 13 - ம் எண்ணுக்கு பயப்படுகின்றன.

வீடுகளுக்கு தரப்படும் கதவு எண் கூட 12 -க்கு அடுத்து 14 தான் இருக்கும்.பெரிய ரயில் நிலையங்களில் 12- வது பிளாட்பாரத்துக்கு அடுத்து, 14- வது பிளாட்பாரம்தான் இருக்கும். எந்த அரசு விழாவும் 13 - ந் தேதிகளில் நடைபெறாது.

இந்த மூடநம்பிகை நமது நாட்டிலும் உண்டு. அதுவும் அறிவியல் அறிஞர்கள் (?!) மிகுந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்திலும் (இஸ்ரோ) இந்த நம்பிகை உண்டு என்பதுதான் ஆச்சரியமூட்டும் விஷயம்.

இஸ்ரோவின் முன்னால் தலைவர் மாதவன் நாயர் மிகவும் இறை நம்பிகை கொண்டவர். ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து ஒவ்வொரு ராக்கெட்டும் ஏவப்படும் முன்பு திருப்பதிக்கு சென்று ராக்கெட்டின் மாதிரியை வைத்து வழிப்படுவது அவரது வழக்கம். ஸ்ரீ ஹரிகோட்டாவிற்கு அருகில் இருக்கும் சூளூர்பேட்டை சங்கலம்மா கோவிலுக்கும் சென்று வழிப்பாடு நடத்துவார்.

இஸ்ரோ ஏவும் ராக்கெட்டுகள் பி.எஸ்.எல்.வி - 1, பி.எஸ்.எல்.வி - 2 என்று வரிசையாகத்தான் வரும். பி.எஸ்.எல்.வி - 12 ஏவப்பட்ட பின், அடுத்த ராக்கெட்டிற்கு பி.எஸ்.எல்.வி - 13 க்கு பதில் பி.எஸ்.எல்.வி - 14 என பெயரிட்டனர். இது உலக அளவில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 13 ராசியில்லாத எண் என்ற மூடநம்பிக்கைக்கு இஸ்ரோவும் தப்பவில்லை.


நிருபர்கள் கூட்டத்தில் பி.எஸ்.எல்.வி - 13 என்ன ஆனது என்று கேள்வி எழுப்பினார்கள். அப்படி ஒன்று நாங்கள் தயாரிக்கவே இல்லை என்று விஞ்ஞானிகள் பதில் அளித்தனர்.


தகவல் : தினத்தந்தி.

Friday, November 18, 2011

கட்டிடக் காடு !

நகர்ப்புறங்களில் மரங்கள் அழிக்கப்பட்டு கான்கிரீட் காடுகளாக மாறிவருகின்றன. மரங்களை அழித்த பயன், மழை பொய்த்து வறட்சியும் புவி வெப்பமடைதல் பிரச்சனை உலகை ஆட்டிப் படைத்து வருகின்றன.

இப்போதுதான் மரங்களின் அருமையை மனிதன் உணர ஆரம்பித்திருக்கிறான். அதற்காக அழிக்கப்பட்ட மரங்களை உடனே கொண்டு வருவது என்பது இயலாத காரியம்.

இதற்கு என்னதான் தீர்வு என்று இத்தாலியில் உள்ள மிலன் நகரில் ஸ்டெபனோ பொரி (Stefano Boeri) என்ற கட்டிடக் கலைஞர் யோசித்ததன் விளைவுதான், இந்த அடுக்ககக் காடு ! (Apartment Forest). ஏராளமான மரம், செடிகளுடன் கூடிய பிரம்மாண்டமான அடுக்குமாடி கட்டிடம் ஒன்றை அவர் உருவாக்கி வருகிறார்.


இதெப்படி சாத்தியம் ?

27 மாடிகளுடன் கூடிய அடுக்ககம் (Apartment) இது . இங்கு அனைத்து தளங்களிலும் மரம், செடி, கொடிகள் அமைக்கப்படுகின்றன. மொத்தம் 730 மரங்கள், 11 ஆயிரம் செடிகள், 5 ஆயிரம் புதர் மற்றும் குரோட்டன்ஸ் வகைகள். ஏறக்குறைய இரண்டரை ஏக்கர் பரப்பில் வளரும் அளவுக்கான தாவரங்கள் இந்த அடுக்கு மாடியில் வளர இருக்கின்றன. 'வானுயர அமைக்கப்படும் காடு' என்று பொருள்படும் வகையில் 'பாஸ்கோ வெர்ட்டிகல்' (Bosco Verticale) என்று இதற்கு பெயர் சூட்டியிருக்கிறார்கள்.


இதுபற்றி போரி நிறுவன இயக்குனர் மிக்கேல் பிரனலோ "மரம், செடிகள் நடுவதற்காக கட்டிடம் உருவாக்கக் கூடாத என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் 'பாஸ்கோ வெர்டிகல்' அடுக்குமாடிக் கட்டிடம். வெப்பம், மாசு பாதிப்பு ஆகியவற்றிலிருந்து மனிதர்களைக் காப்பவை தாவரங்கள்தான்.


இந்த சுகம் தரையில் வீடு அமைப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. அடுக்குமாடிவாசிகளுக்கும் இது வாய்க்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இதை உருவாக்கி வருகிறோம்.

இந்த அடுக்ககத்தின் விலை எவ்வளவு தெரியுமா ? அதிகமில்லை ரூ.4.35 கோடி முதல் 13. 25 கோடி வரை. இங்கு குடியிருக்க வருபவர்களுக்கு வீடுகள் மட்டுமே சொத்து. எல்லா தாவரங்களும் பொது சொத்து.புயல் மழைக்கு தாக்குபிடிக்கும் வகையில் மரங்கள் செழிப்பதற்கேற்ப தொழில் நுட்பத்தை பயன்படுத்த உள்ளோம். அடுக்குமாடி கட்டிட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டில் வீடும் காடும் தயார் என்கிறார் மிக்கேல்.


கட்டிடக் கலைஞர் ஸ்டெபனோ பொரி



தகவல் : டி. கார்த்திக்

தன்னம்பிக்கையின் அளவு !


தன்னம்பிக்கை இருந்தால் வாழ்வில் வெற்றிகள் வெகு இயல்பாக வந்து சேரும் என்பதற்கு உதாரணம், அமெரிக்க விஞ்ஞானி ஜான் பார்டீன் (John Bardeen) .

1956 - ல் டிரான்சிஸ்டரை கண்டுபிடித்ததற்காகவும், 1972 - ல் மின்தடை சிறிதும் இன்றி மின்சாரத்தைக் கடத்தும் கடத்திகளைப் பற்றிய உண்மைகளைக் கண்டறிந்ததற்காகவும் இயற்பியல் துறையில் இருமுறை நோபல் பரிசு பெற்றவர் இவர்.

பார்டீன் 1956 - ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றபோது அவரது இரு மகன்களும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தனர். எனவே அவர்கள் இருவரையும் தொந்தரவு செய்ய விரும்பாது நோபல் பரிசு வழங்கும் விழாவுக்கு ஒரு மகனை மட்டும் அழைத்துக் கொண்டு வந்திருந்தார்.

பார்டீனின் வாழ்க்கையில் நடைபெறும் மிக முக்கியமான விழாவுக்கு அவர் தன்னுடைய குடும்பத்தினரை அழைத்து வராததை சுவீடன் நாட்டு மன்னரான குஸ்டாவோ விரும்பவில்லை. பிள்ளைகள் இருவரையும் அழைத்து
வராததற்காக அவர் ஜான் பார்டீனை நாகரீகமாகக் கடிந்து கொண்டார்.

அப்போது மன்னரிடம் பார்டீன், "மாட்சிமை பொருந்திய மன்னர் பெருமானே, நான் இரண்டாம் முறை பரிசு பெற மீண்டும் உங்கள் அவைக்கு வருவேன். அப்போது தங்கள் விருப்பம் போல என் இரு பிள்ளைகளையும் அழைத்து வருகிறேன்" என்றார்.

மன்னர் அதை கேட்டு ஆச்சரியம் அடைந்திருக்கக்கூடும். ஆனால் பார்டீன் தான் சொன்னதை 1972 - ல் நிரூபித்தார். ஆம், அப்போது மின்சாரக்கடத்திகள் பற்றிய உண்மைகளைக் கண்டுபிடித்ததற்காக அவருக்கு இரண்டாவது முறையாக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

சொன்னபடியே அவர் தனது இரு மகன்களையும் பரிசளிப்பு விழாவிற்கு அழைத்து சென்று மன்னரை மகிழ்வித்தார். எவ்வளவு தன்னபிக்கை இருந்தால், 15 ஆண்டுகளுக்கு பின் தான் செய்ய போகும் சாதனையை ஒருவரால் முன்கூட்டியே அறிவிக்க முடியும் ? இது அவர் திறமையின் மீது அவருக்கு இருக்கும் நம்பிக்கை.

மனிதர்கள் ஒவ்வொருவரிடமும் திறமைகள் உள்ளன, அதை வெளிப்படுத்த முதலில் தேவைப்படுவது அவரவர் மீதான நம்பிக்கையே !




(ஜான் பார்டீனை பெருமைப்படுத்தும் விதமாக அமெரிக்க அரசு
வெளியிட்டுள்ள தபால் தலை)



இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு





தகவல் : தினத்தந்தி.

Wednesday, November 16, 2011

கவிதையின் கதை


அலங்கார வளைவுகளைத்
தாண்டிய பின்னும்
அரங்கிற்குள் நுழையத்
தயங்கி நின்றது கவிதை !

"உன்னைப் பற்றித்தான்
பேசுகிறார்கள் !
உள்ளே போ" -
உபசரித்தார் ஒருவர் !

உள்ளே-
நிற்கவும் இடமில்லா
நெருக்கடி !

அலட்டிக் கொள்ளத் தெரியாத
அப்பாவிக் கவிதை
மேடை வரை நடந்து போய்
மீண்டும் திரும்பி
இருக்கை தேடி
ஏமாற்ற மடைந்தது !

சாகித்ய மண்டல
சண்ட மாருதங்கள்....
ஞானபீட
வாண வேடிக்கைகள்...

இசங்களைக் கரைத்து
ரசங்களாய்க் குடித்தவர்கள்...
தமிழ்
செத்துப் போய்விடக்கூடாதே
என்ற
கருணையால்
பேனாவைப் பிடித்திருக்கும்
பிரும்மாக்கள்....

ஒருவர் கூட
கவிதையை
உட்காரச் சொல்லவில்லை !
இடம் தேடும் கவிதையை
ஏறிட்டுப் பார்க்கவில்லை !

சுற்றிச் சுற்றிப் பார்த்து
சோர்ந்த கவிதை
அரங்கிலிருந்து
வெளியே வந்தது !

விமர்சனத்தின்
கிழக்கு மேற்கு அறியாத
கிராமத்து ரசிகர் ஒருவர்
கவிதையைக் கேட்டார் :

"உன்னைப் பற்றித்தான்
விவாதம் நடக்கிறது....
நீயே வெளியேறுவது
நியாமா ? "

கவிதை அவரிடம்
கனிவுடன் உரைத்தது
"அவர்களின் நோக்கமெல்லாம்
என்னைப் பற்றி
விவாதிப்பதல்ல....
தம்மைப் பற்றித்
தம்பட்டம் அடிப்பதே ! "


- கவிஞர் மு.மேத்தா.



கவிஞர் மு.மேத்தா




நன்றி : விகடன் பவள விழா மலர்.

Tuesday, November 15, 2011

பட்டினி கிடக்கும் பத்து வயது பெண்கள் !

ஒரு கிராம் அளவு கூட அதிக சதை இல்லாமல் கச்சிதிமாகத் தோன்ற வேண்டும் என்பதில் ஆண்களை விட பெண்களுக்கு ஆர்வம் அதிகம்தான். அதிலும் இளம் பெண்களிடம் இந்த மோகம் தீவிரமாக உள்ளது.

ஆனால், தற்போது அதிர்ச்சி அளிக்கும் விஷயம், பள்ளி செல்லும் சுமார் 10 வயது பெண்கள் கூட மெலிதான உடலுடன் கூடிய அழகில் தோன்ற வேண்டும் என்று பட்டினி கிடந்து உடலை வருத்திக்கொள்கிறார்கள் என்பதுதான்.

10 - 11 வயதுப் பெண்களில் மூன்றில் ஒரு பங்குக்கு மேற்பட்டோர் பட்டினி கிடப்பது போன்ற கடுமையான வழிகள் மூலம் மெலிதான தோற்றத்தை அடைய முயற்சிக்கிறார்களாம்.


இது தொடர்பாக 83 ஆயிரம் பள்ளி மாணவிகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். அவர்கள் அனைவரும் 10 வயது மாணவிகள். அவர்களில் மூன்றில் ஒரு பங்குக்கு மேற்பட்டவர்கள் காலை உணவை உண்பதில்லை. இன்னும் மோசம் அவர்களில் 24 சதவீதம் பேர், முந்திய நாள் மதிய உணவையும் தவிர்த்திருகின்றனர்.

இளம் பெண்கள் வயது கூடக் கூட, அவர்கள் உணவை தவிர்க்கும் ஆர்வமும் கூடுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 14 - 15 வயதுப் பெண்களில் மூன்றில் ஒரு பங்கு பேர் தங்கள் எடையை குறைக்கவும், அதற்கு ஒரு தொடர்ச்சியான முறையை பின்பற்றவும் விரும்புகிறார்கள்.


"இளம் பெண்களுக்குத் தோற்றம் குறித்த கருத்தை உருவாக்குவதில் ஊடகங்கள் ஒரு முக்கியத்துவம் வகிக்கின்றன. ஆனால் அதற்காக பெண்கள் ஆரோக்கியமற்ற வழிகளை நாடுவதுதான் கவலையளிக்கும் விஷயம்"
என்கிறார் இந்த ஆய்வில் ஈடுபட்ட மருத்துவர் லாரா வைன்ஸ்.



தகவல் : தினத்தந்தி