Sunday, April 29, 2012

புகழ் பெற்ற எழுத்தாளர்கள் எழுதும் விதம்!

எழுத்தாளர் ஆல்க்ரென்

  • ஆல்க்ரென் எனும் எழுத்தாளர், சில சுவையான சம்பவங்களை மட்டுமே யோசிப்பார். அவற்றை எழுதத் தொடங்கி ஒன்றுக்கொன்று முடிச்சுப் போடும் போதுதான் கதைக் கரு என்ற ஒன்றே உருவாகும்.
  • மாரியக் என்ற எழுத்தாளர் எழுதத் தொடங்கிவிட்டால் அது முடியும் வரை எழுதிக் கொண்டே போவார். ஒரு நாவல், எந்தக் காரணத்துக்காகவும் ஒரு நிமிடம் கூட தடைபட்டு நிற்கக்கூடாது என்பது இவருடைய கொள்கையாகும். உணவு, உறக்கம் என எல்லாவற்றையும் மறந்து நாள் கணக்கில் இவர் நாவல்கள் எழுதியுள்ளார்.
  • அன்டோனி பார்சன் என்பவர் துப்பறியும் நாவலாசிரியர். உணவுக்காகக் கூட தன் நாவலை இடையில் நிறுத்தி வைக்க மாட்டார். ஆனால், எழுதி முடித்த பின்பு வயிறு முட்ட உணவு சாப்பிட்டு விட்டு இரண்டு நாட்கள் தூங்குவாரம்.


எழுத்தாளர் ட்ரூமன் கபோட்

  • ட்ரூமன் கபோட், தான் எழுத நினைக்கும் கதையை வரிக்கு வரி சிந்தித்து மனதுக்குள் கற்பனையாக ஒரு முறை எழுதி விடுவாராம். அதன் பின்புதான் முதல் வரியையே எழுதத் தொடங்குவாரம்.


எழுத்தாளர் பெர்னார்ட் ஷா

  • ஜார்ஜ் பெர்னார்ட் ஷா ஒரு நாளைக்கு ஐந்து பக்கங்களுக்கு மேல் ஒரு வார்த்தை கூட எழுதமாட்டார். ஐந்தாவது பக்கம் எழுதி முடிக்கும்போது ஒரு வாக்கியம் பாதி எழுதப்பட்டிருந்தால் கூட, எழுதுவதை நிறுத்திவிட்டு அதை மறுநாள்தான் எழுதத் தொடங்குவார்.


எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ்

  • சார்லஸ் டிக்கன்ஸ் எழுதும்போது தன் எழுத்தில் உள்ள நகைச்சுவைப் பகுதியைப் படித்து தானே வயிறு குலுங்கச் சிரிப்பார். சோகமாக எழுதும்போது, அந்தப் பக்கம் முழுவதும் அவர் கண்ணீரால் நனைந்திருக்கும். அந்த அளவுக்கு உணர்ச்சிப் பிழம்பானவர்.



எழுத்தாளர் எட்கார்ட் வாலஸ்

  • எட்கார்ட் வாலஸ் என்பவர், வெள்ளிக் கிழமையில்தான் எழுத ஆரம்பிப்பாராம். வெள்ளி இரவு உணவு முடித்து பின் பேனாவைக் கையில் எடுத்தால், திங்கட் கிழமை காலை ஒன்பது மணிக்குள் முடித்து விடுவார். இடையில் உணவும் இல்லை தூக்கமும் இல்லை. கற்பனை வளத்துக்காக தேநீர் மட்டும் நிறையக் குடிப்பாராம்.


கவிஞர் ஷெல்லி

  • ஷெல்லி கவிதைகள் எழுதும்போது, அவருடைய வாய் எதையாவது மென்று கொண்டே இருக்கும். அப்பொழுதுதான் கறபனை தடைபடாமல் பெருக்கெடுத்து ஓடும்.
  • இமானுவேல் பர்க் தனது கற்பனை வளம் குன்றும்போதெல்லாம் சூடான நீரில் கால்களை நனைத்துக் கொண்டே சிந்திப்பார். அப்பொழுதுதான் அவருக்கு கற்பனை சுரக்குமாம்!
  • அப்பாஸ் என்ற எழுத்தாளர் மிகவும் இரைச்சலும் கூச்சலும் நிறைந்த மக்கள் சந்தடியுள்ள இடத்தில்தான் உட்கார்ந்து எழுதுவார். இதற்காகவே கூச்சல் மிகுந்த ஓட்டலை நாடிச் சென்று அங்கே அமர்ந்து எழுதுவாராம்!.






தகவல் : மெர்வின்.

Saturday, April 28, 2012

கருப்பு மருந்துகளின் தந்தை!




Louis Pasteur

பாம்பு,தேள், போன்ற விஷ ஜந்துகளுக்கு மட்டுமல்ல...தான் வீட்டில் வளர்க்கும் செல்ல நாய்க் குட்டிகளிடமும் கூட மனிதன் அப்போதெல்லாம் பயந்து நடுங்கிய காலம் அது. ஆம், வெறிநாய்க்கடி என்பது அப்போதெல்லாம் ஓர் உயிர்கொல்லி நோய். எந்த மருந்துக்கும் கட்டுப்படாத அந்த ராபீஸ் நோயைக் கட்டுபடுத்தினார் லூயி பாஸ்டர் என்ற மருத்துவ மேதை.

பிரான்ஸில் 1822-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி பிறந்த லூயி பாஸ்டர், சிறுவயது முதலே வேதியியல் பாடத்தில் அதிக கவனம் செலுத்தினார். அந்த ஆர்வம்தான், படிப்பை முடித்தவுடன் சிறிய அளவில் ஒரு ஆய்வுக் கூடத்தை நிறுவவும் அவரைத் தூண்டியது. ஒரு முறை லூயி தன் ஆய்வுக் கூடத்தில், வேதியியல் மாற்றங்களை உற்று நோக்கிக் கொண்டிருந்தபோது, கிருமிகள் எனப்படும் நுண்ணுயிரிகளை கவனித்தார். உலகையே வருத்திக் கொண்டிருக்கும் நோய்களையும் இந்த நுண்ணுயிரிகளையும் பொருத்திப் பார்த்தார். எல்லா நோய்களுக்கும் அடிப்படைக் காரணம் கிருமிகளே, கிருமிகளின்றி ஓரணுவும் அசையாது என்று தன் ஆராய்ச்சிகளின் மூலம் நிரூப்பித்தார்.

நோய்களுக்கான காரணத்தைக் கண்டறிந்ததோடு நிற்காமல், தடுப்பு மருந்துகளை உருவாக்கும் முயற்சியிலும் தீவிரமாக இறங்கினார்.முதலில் பால் போன்ற திரவங்களில் உள்ள தீய பாக்டீரியாக்களை அழிக்கும் வழிமுறையைக் கண்டறிந்தார். இன்றுவரை பால் தொழிற்சாலைகளில் பின்பற்றப்படும் இந்த வழிமுறை, லூயி பாஸ்டரின் பெயரிலேயே 'பாஸ்டரைஸிங்' என்று அழைக்கபடுகிறது.


அதன்பின் கடும் முயற்சியின் விளைவாக, ஆந்த்ராக்ஸ் மற்றும் வெறிநாய்க்கடி (ராபீஸ்) கிருமிகளைக் கட்டுபடுத்தும் வழி முறையைக் கண்டுபிடித்தார் லூயி.

1885-ம் ஆண்டில் ஜோசப் மெயிஸ்டர் என்ற ஒன்பது வயது சிறுவனை வெறிநாய் ஒன்று 15 முறை கடித்துவிட்டது. அன்றையை மருத்துவர்கள் அனைவரும் கை விரித்துவிட்ட நிலையில், அவனுக்கு லூயி தந்து தடுப்பு மருந்து மூலம் சிகிச்சை அளித்தார். உயிரையும் காப்பாற்றினார். அந்தச் சிகிச்சையின் வெற்றிக்குப் பிறகு, லூயி உலகம் முழுவதும் பிரபலமாகி, லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றினார்.

தனிப்பட்ட வாழ்க்கையில் தனது 5 குழந்தைகளில் மூவரை டைபாய்டு நோய்க்கு பலி கொடுத்தவர் லூயி. பிற்காலத்தில் அவர் டைப்பாய்டு மட்டுமல்லாமல், டைபஸ், மஞ்சள் காமாலை, டிப்தீரியா, இன்புளூயன்சா போன்ற நோய்களையும் தன் மருந்துகளால் கட்டுபடுத்திக் காட்டினார்.

இறுதியாக 1895-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி... லூயி பாஸ்டர் என்ற பொக்கிஷத்தை இந்த உலகம் இழந்தது. மரணத்தோடு போராட அவர் கொடுத்துவிட்டுப் போன சில மருத்துவப் பொக்கிஷத்தை மரணத்தால் பறித்துக் கொள்ள முடியுமா என்ன ?




தகவல் : சி.பரத்.

Thursday, April 26, 2012

நிலம்....நடுக்கம்.


அருகருகே நகரும் இரண்டு பூமித் தட்டுகள் லேசாக உராயும்போது பெரிய அளவில் அழிவு இல்லை. அது லேசான நடுக்கமே. ஆனால், எதிரெதிர் திசையில் நகரும் இரண்டு பூமித் தட்டுகள் முட்டிக் கொள்ளும்போதுதான் பிரளயமே நடுங்குகிறது.

பொதுவாகவே பூமித் தட்டுகள் நகர்வது ரொம்ப குறைவான வேகத்தில்தான். ஆண்டுக்கு சில சென்டி மீட்டர்கள். ஆனால் முட்டிக்கொள்ளும்போது நீயா - நானா என்கிற அளவிற்கு கங்கணம் கட்டிக் கொள்கின்றன. இரண்டும் தட்டுகளும் ஆண்டுக்கணக்காக அப்படியே முட்டிக் கொண்டு நிற்கும். தட்டின் பின் பக்க சுமை இதை அழுத்தி முன்னால் தள்ளப் பார்க்கும். இப்படி ஒருபுறம் நகரமுடியாமல் தவிக்கும் இந்தத் தட்டுகளில் அழுத்தம் அதிகமாகிக் கொண்டே இருக்கும்.

ஸ்பிரிங் விளையாட்டு போலத்தான் இது. இருபுறமும் கைகளால் ஒரு ஸ்பிரிங்கை அழுத்திப் பிடித்திருக்கிறீர்கள். அதை அழுத்தி வைக்கும்போது எப்படியாவது இயல்பு நிலைக்கு திரும்ப முயற்சிக்கும். இரண்டு புறமும் பிடித்திருக்கும் கைகளை விட்டுவிடுகிறீர்கள். சட்டென அது விரிந்துவிடும் இல்லையா ? அதுபோல இரண்டு தட்டுகள் ஆண்டுக்கணக்கில் முட்டிக் கொண்டிருக்கும்போது சேரும் அழுத்தம் திடீரென சில நொடிகளில் வெளிப்படும். அந்த சக்தியின் வெளிப்பாடு மிகப் பயங்கரம்.



அப்போது அந்தத் தட்டுகள் நகர்ந்து, இத்தனை ஆண்டுகளாக பாக்கி வைத்திருந்த தூரத்தை ஒரே சமயத்தில் கடக்கப் பார்க்கும். இதில் ஒரு தட்டு பெரியதாகவும் இன்னொன்று சிறியதாகவும் இருந்தால் ஒரு தட்டு இன்னொரு தட்டிற்கு அடியில் கொஞ்ச தூரம் போய்விடும். அதன் பின் சில காலம் ஆட்டம் கண்டு கொண்டே இருக்கும். நிலை பெறுவதற்கு 6 மாதங்கள் கூட ஆகலாம்.





நன்றி : முத்தாரம் இதழ்.

Wednesday, April 25, 2012

நம்பினால் நம்புங்கள் !


ஆச்சா என்கிற மரத்திலிருந்துதான் நாதஸ்வரம் இசைக் கருவி செய்யப்படுகிறது.



கிளியோபாட்ரா என்பது ஒரு அழகியின் பெயர் அல்ல. மாசிடோனிய இளவரசிகளின் பட்டத்துப் பெயரே கிளியோபாட்ரா.



நம் உடலிலேயே அதிக அளவு வேலை செய்வது நம் கைகளில் உள்ள கட்டை விரல்தான்.



இந்தியா - பாகிஸ்தான் என இரு நாடுகளுக்கும் எல்லைக் கோடாக அமைந்திருக்கும் கிராமத்தின் பெயர் யூரி.






தகவல் : டி. கார்த்திக்.

Tuesday, April 24, 2012

தேங்காய் நண்டு !

(Coconut Crab-Chennai Museum)

"மனிதர்களில் பராக்கிரமசாலிகளை நாம் பாராட்டத்தான் செய்வோம். ஆனால், விலங்குகளில் மட்டும் பராக்கிரமசாலிகளை வசை பாடப் பழகிவிட்டோம். அப்படி நம்மிடம் கெட்ட பெயர் வாங்கிய பராக்கிரமசாலி தான் திருட்டு நண்டு எனப்படும் தேங்காய் நண்டு!"

-- காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் பாடம் செய்யப்பட்ட தேங்காய் நண்டைக் காண்பித்து இந்தத் தகவலைச் சொன்னார் சென்னை அருங்காட்சியகத்தின் விலங்கியல் பிரிவு காப்பாட்சியர் அசோகன். அப்படி என்ன பராக்கிரமம் இந்த நண்டுக்கு ? அதையும் அவரே விளக்குகிறார் ?

"நிலத்தில் காணப்படும் முதுகெலும்பற்ற விலங்கினங்களிலேயே இதுதான் மிகப் பெரியது. மூன்றடிக்கு மேல் நீளமும் நான்கு கிலோ வரை எடையும் இருக்கும். தண்ணீரில் வாழும் பெரும்பாலான நண்டுகளுக்கு மத்தியில்.... நிலத்தில், அதிலும் தென்னை மரங்கள் அடர்ந்த பகுதிகளில் அதிகம் வாழும் நண்டுகள் இவை. தென்னை மரத்தில் ஏறி தேங்காயைப் பறித்து அதன் நாரையும் உரித்து உடைத்து உட்கொள்வதால்தான் தேங்காய் நண்டு என்ற பெயரைப் பெற்றது.

மனிதர்கள் வாழக்கூடிய பகுதிக்கு இது வந்தால் அவ்வளவுதான். மனிதர்கள் பயன்படுத்தும் சட்டி,பானை இத்யாதிகளை எல்லாம் ஏதோ உணவுப் பொருள் என்று நினைத்து உருட்டிக் கொண்டு போய்விடும். அதனால்தான் திருட்டு நண்டு என்றும் பெயர் பெற்றது.


இந்த வகை நண்டுகள் கடல் நீரில்தான் முட்டைகளை இடும். முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் சிப்பி, நத்தை,சங்கு, ஆமை போன்ற உயிரினங்களின் ஓடுகளில் ஒட்டிக்கொண்டு சிறிது காலம் வாழும்.கொஞ்சம் வளர்ச்சியடைந்தாலும் தரைக்கு வந்து நிலத்தில் குழிகளைத் தோண்டி, மெத்தென்று தேங்காய் நார்களைப் போட்டு அதில் வசிக்க ஆரம்பிக்கின்றன.

இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் கடல் தீவுகளில் அதிகம் வாழும் தேங்காய் நண்டுகள், பல நிறங்களிலும் காணப்படுகின்றன. நல்ல நுகரும் சக்தி இருப்பதால் இவை எளிதில் இரையைக் கண்டுபிடிக்கின்றன. பொதுவாக இது மற்ற நண்டினங்களிருந்து மாறுபட்ட் இருப்பதால் இதை உன்ன விரும்ப மாட்டார்கள்.

ஆனால், இந்த நண்டின் மாமிசத்தில் மருத்துவ குணம் உண்டென்று ஒரு புரளி உள்ளதால் சில நாடுகளில் இதை வேட்டையாடுவதும் உண்டு. இதனால் இந்த இனம் சில பகுதிகளில் முற்றிலும் அழியும் நிலைக்கு வந்துவிட்டது!" என்று அபயாமணி அடித்தார் அசோகன்.


இன்றுவரை நாம் ஆச்சரியப்படுவதற்கென்று இருக்கும் ஒன்றிரண்டு உயிரினங்களையும் நம் மூடநம்பிக்கைகள் அழித்துவிடக் கூடாது அல்லவா ?









தகவல் : டி.ரஞ்சித்.

Monday, April 23, 2012

படம் சொல்லும் சேதி !


உலகின் மிகக் குட்டியான நாய் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது இது. டாஷண்ட் கலப்பின குட்டியான இது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பிறந்திருக்கிறது. பிறந்த குட்டியாக இருந்தபோது ஒரு ஸ்பூனுக்குள் அடங்கிவிட்டதாம். மூன்றரை இஞ்ச் நீளமே இருக்கும் இதற்கு, உலகின் மிகப் பெரிய பாப் பாடகியான பியான்ஸ் நோல்ஸ் பெயரை வைத்திருக்கிறார்கள்.



மனித இனம் நெருப்பைப் பயன்படுத்தத் தெரிந்து கொண்ட பிறகுதான் நாகரீகத்தை நோக்கிய முதல் பாய்ச்சல் நிகழ்ந்தது.எப்போது முதல் மனிதர்கள் நெருப்பைப் பயன்படுத்தினார்கள் என்பதில் மானுட ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிகழ்கிறது. இதை தீர்க்கும் ஆதாரம் தென் ஆப்பிரிக்க நாட்டில் கிடைத்திருக்கிறது.

இங்கிருக்கும் ஒன்டர்வெர்க் குகையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் நிறைய சாம்பல் கிடைத்திருக்கிறது. கூடவே எரிந்த எலும்புகளும்! இவை பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று கண்டறிந்து உள்ளனர். நமது முன்னோர்களான ஹோமோ எரெடக்ஸ் இனத்தவர் விலங்குகளை எரித்து மாமிசம் சாப்பிட்டிருக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.



நம் ஊர்களில் ஆண்டு தேர்வு முடிந்ததும் பள்ளி மாணவர்கள் ஒருவர் சட்டையில் இன்னொருவர் இங்க் அடித்து மகிழ்ச்சியடைவார்கள். அவ்வாறு அசாம் மாநிலத் தலைநகர் கௌகாத்தியில் தேர்வு முடிந்த கல்லூரி மாணவர்கள் தங்கள் முகத்தில் வெள்ளி மூலாம் பூசி தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடுகின்றனர்.






தகவல் : முத்தாரம் இதழ்.

Friday, April 20, 2012

மணல் சாலை இல்லை, இது சணல் சாலை !


சணல் கயிறு, சணல் சாக்கு, சணல் பைகள், சணல் சட்டைகள் கூடக் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், சணல் சாலை தெரியுமா உங்களுக்கு ? இது வேறெங்கோ வெளிநாட்டில் நடக்க உள்ள அதிசயம் இல்லை. நம் இந்தியாவில்தான் போடுகிறார்கள் !

கொல்கத்தாவில் உள்ள சணல் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று, 24 கி.மீ. தூரத்துக்கு சணல் ரோடு அமைக்கத் திட்டமிட்டுள்ளது. சாதாரண தார் சாலையைக் காட்டிலும் இந்த 'நார்' சாலை வலுவானதாக இருக்கும் என்று அடித்துச் சொல்கிறது அந்நிறுவனம்.

நமது நாட்டில் பெரும்பாலான சாலைகள் வாட்ட சாட்டமாக காட்சியளித்தாலும், ஒரே மழைக்காலம் வந்துவிட்டால் அடித்துப் போட்ட 'கைப்புள்ள' மாதிரி, குற்றுயிரும் குலையுயிருமாகி விடுகின்றன. அவற்றைப் பழுது பார்க்கவே நமது பொருளாதாரம் ததிங்கிணத்தோம் போடுகிறது. ஆனால், இந்த சணல் சாலை வலுவானதாக மட்டுமின்றி, மழைக்காலங்களிலும் பாதிக்கப்படாமல் இருக்குமாம். இத்தனை வாக்குறுதிகளையும் அவர்கள் சும்மா சொல்லவில்லை. ஏற்கனவே மாதிரிச் சாலை ஒன்றை உருவாக்கி சணலின் மதிப்பை சோதித்த பிறகே சொல்கிறார்கள்.

கொல்கத்தாவிலிருந்து நூறு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குப்தி பாரா என்ற கிராமத்தில்தான் அமைத்திருக்கிறது அந்த மாதிரிச் சாலை. சாலை போட பரப்பப்படும் சரளைக் கற்களுக்கும் மண்ணுக்கும் இடையே சிறு பட்டையாகச் சணலை அங்கே அவர்கள் பயன்படுத்தினார்கள். இந்தச் சணல் பட்டை, மழை நீரை உள்வாங்கிச் சாலையைப் பழுதுபடாமல் பாதுகாத்தது. அது மட்டுமல்ல...சரளைக் கற்களையும் நகர விடாமல் பிடித்து வைக்கிறதாம் சணல் பட்டை.



"சணலைப் பயன்படுத்துவதன் மூலம் சாலையின் ஆயுளை மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு நீட்டித்து உத்தரவாதப்படுத்தலாம்" என்கிறார் ஒரு ஆராய்ச்சியாளர்.

மேற்கு வங்கத்தில் சணல் உற்பத்தி அதிகம்.ஆனால், இந்தியா முழுக்க சணலின் பயன்பாடு குறைந்துவிட்டது. சணல் சாக்குகளுக்கு பதில் பாலிதீன் சாக்குகள் வந்துவிட்டன. அதற்கு எதிர்ப்பு கிளம்பிய பிறகும் காகித பைகள் பயன்படுத்தப்படுகின்றனவே தவிர, சணல் சாக்குகள் புத்துயிர் பெறவில்லை. அதனால், உபரியாக இருக்கும் சணலை சாலைகள் போட உபயோகிப்பது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் திட்டம் !

கிராமத்து சணல் உற்பத்தியாளர்களும் நகரத்து இரண்டு சக்கர தோழர்களும் ஒருசேர மகிழ்ச்சியடையும் நாளை விரைவில் எதிர்பார்க்கலாம் !






தகவல் : ஆர்.ஆர்.பூபதி.

Thursday, April 19, 2012

அந்தரத்தில் மிதக்கும் சீனர் !


அடுத்த நொடி இவர் கதி என்ன ஆகியிருக்கும் ? பதைபதைப்போடு இந்தக் கேள்வியைக் கேட்டாலும், லி வெய் அதை புன்னகையோடு எதிர்கொள்கிறார். சீனாவின் ஹூபெய் நகரைச் சேர்ந்த இந்த 37 வயது மனிதர், புவி ஈர்ப்பு விசைக்கே சவால் விடுகிறார். புகைப்படக் கலைஞரான இவர் எடுத்த புகைப்படங்களைவிட, இவரை இப்படி பிறர் எடுத்த படங்களே புகழ் பெற்று உள்ளன.

" அடுக்குமாடியின் உயரத்திலிருந்து உதைக்கப்பட்டு விழுவது, வில்லில் அம்பாக சாய்ந்திருப்பது, அந்தரத்தில் நடப்பது, தலைகீழாய் மிதப்பது என எல்லா படங்களிலும் நான் ரிஸ்க் எடுத்திருக்கிறேன். இது சர்க்கஸ் இல்லை: மேஜிக்கும் இல்லை; இயந்திரங்களின் உதவியோடு செய்யப்படும் சின்னசின்ன சாகசங்கள்" என்கிறார் இவர். சில புகைப்படங்களை உற்றுப் பார்த்தால் இவரை பிணைத்திருக்கும் கயிறு தெரியலாம் !











தகவல் : லோகேஷ்.

Wednesday, April 18, 2012

புள்ளிகளுக்குள் பெரும் புள்ளி - லூயி பிரெய்லி!


பார்வை இழந்தவர்கள் என்றால் வாழ்வையே இழந்தவர்கள் என்றுதான் முன்பெல்லாம் மக்கள் கருதினார்கள். அதை மாற்றிக் காட்டிய மாமேதைதான் லூயி பிரெய்லி!.

1809-ம் ஆண்டு ஜனவரி 4-ம் தேதி பிரான்ஸ் நாட்டில் கூப்வெரி என்ற இடத்தில் பிறந்தார். இவர் தந்தை சைமன் ரேனே பிரெய்லி, தோல் பொருட்கள் செய்யும் திறம்மிக்க கலைஞர். லூயி மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, தந்தையின் தோல் தொழிற்சாலையில் பயன்படும் குத்தூசியைக் கையில் வைத்து விளையாடினார்.

அது அவர் வலது கண்ணில் குத்திக் கிழித்தது. சில நாட்களில் வலது கண் காயத்திலிருந்து நுண்கிருமிகள் இடது கண்ணையும் தாக்கியதால் இரு கண்களிலும் பார்வையை இழந்தார்.


லூயி பிரெய்லியின் பிறந்த வீடு


அந்தக் காலத்தில் பார்வையற்றவர்கள் பிச்சை எடுத்து வாழும் நிலையிலேயே இருந்தனர். இந்நிலை தன் மகனுக்கு வந்துவிடக்கூடாது என்று நினைத்த அவர் தந்தை, எழுத்துகளை ஆணி மூலம் பலகையில் பதித்து அவருக்குக் கல்வி கற்பித்தார். மேலும், யார் துணையுமின்றி நடந்து செல்ல ஊன்று கோல் ஒன்றையும் தயாரித்துக் கொடுத்தார்.

பார்வை இல்லை என்ற குறைபாட்டை அறிவுக் கூர்மை ஈடுசெய்ய, நன்கு படித்து கல்வியில் தேறினார். பின்பு பாரிஸில் இருந்த பார்வை இழந்தோர் சிறப்புப் பள்ளியில் சேர்ந்தார். அங்குதான் தன் வாழ்நாள் முழுவதையும் கற்பதிலும், கற்பிப்பதிலும் கரைந்தார்.

1821-ம் ஆண்டு, பார்வையற்றோருக்கான 'நைட் ரைட்டிங்' என்ற புதிய எழுத்து வடிவம் அந்தப் பள்ளியில் அறிமுகபடுத்தபட்டது. விரலால் தொட்டு அறியக் கூடிய 12 புள்ளிகளை அது கொண்டிருந்ததால் மாணவர்கள் படிப்பது கடினமானதாகவும், சிரமமாகவும் இருக்கும் என்று லூயி நினைத்தார்.

1824-ம் ஆண்டு இம்முறைக்கு மாற்றாக 6 புள்ளிகளைக் கொண்ட புதிய பிரெய்லி குறியீட்டை அவர் உருவாக்கினார். இம்முறையை உலகம் முழுவதும் பார்வையற்றோர் வரவேற்றனர். அதன் மூலம் அவர்களால் வேகமாகவும் எளிதாகவும் படிக்க முடிந்தது. 1829-ம் ஆண்டு பிரெய்லி முறையில் எழுத்தப்பட்ட தன் முதல் புத்தகத்தை வெளியிட்டார் லூயி. மேலும், பார்வை இழந்தோருக்கான பிரெய்லி தட்டச்சு இயந்திரத்தை பியரி என்பவருடன் இணைந்தது தயாரித்து வெற்றி கண்டார்.


சாதனையாளர்களை விழுங்கினால்தான் நோய்களின் அகோரப் பசி அடங்குமோ என்னவோ.... பிரெய்லியைத் தாக்கியது எலும்புருக்கி நோய். 1852-ம் ஆண்டு...தனது பிறந்த நாளைக் கொண்டாடிய இரண்டே நாட்களில், அதாவது ஜனவரி 6-ம் தேதி தனது 43-வது வயதில் மறைந்தார்.

இன்றும் பார்வையற்றோர் தொட்டு உணரும் அந்த ஆறு புள்ளிகளுக்கு இடையே ஒரு பெரும் புள்ளியாக அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.








தகவல் : சி.பரத்.

Tuesday, April 17, 2012

உலகம் பல விதம் !


கழுகு இனங்களில் பிரமாண்டமானது அமெரிக்காவில் வாழும் 'கலிபோர்னியா காண்டேர்' இனப் பருந்துகள். இவை இன்னொரு சாதனைப் பட்டியலிலும் இடம்பெறப் போகின்றன. சான் டியாகோ விலங்கியல் பூங்காவில் 'காண்டேர் கேம்' என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறார்கள். அடை காக்கப்படும் ஒரு முட்டையிலிருந்து கழுகுக் குஞ்சு ஓட்டை உடைத்துக் கொண்டு வெளியில் வந்து, இந்த உலகை தன் கண்ணால் முதன்முதலில் பார்க்கும் காட்சியை நேரடி ஒளிபரப்பு செய்வதுதான் இந்தத் திட்டம். 'இப்படி கழுகின் பிறப்பைப் பார்ப்பவர்கள், உயிரின் மதிப்பை உணர்வார்கள். அதன்பின் விலங்குகளுக்கு தொல்லை தரமாட்டார்கள்' என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் விலங்கியல் பூங்கா நிர்வாகிகள்.



ஒவ்வொரு நகரிலும் ஒரு மணிக்கூண்டு இருக்கும்; அதில் பெரிய கடிகாரம் கட்டாயமாக இருக்கும். அந்த மணிக்கூண்டுக்குப் பின் ஒரு வரலாறு இருக்கும். காலப்போக்கில் அது அந்த நகரின் அடையாளமாகவும் மாறிப் போகும்.

இதேபோல் செக் குடியரசின் தலைநகர் பிராக்கில், நகர சதுக்கத்தில் ஒரு பிரமாண்ட கடிகாரம் உள்ளது. இதை கடிகாரம் என்று சொல்வதைவிட அதிசயம் என்று சொல்லலாம். இது சாதாரணமான நேரம் காட்டும் கடிகாரம் இல்லை. வானசாஸ்திர கடிகாரம். சூரியன், நிலா, இதர கோள்கள் ஆகியவை ஒன்றுக்கொன்று எந்தெந்த திசையில் இருந்தபடி சுழல்கின்றன என்ற கிரக அமைப்பைக் காட்டும். 1410-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த கடிகாரம், இப்போதும் இயங்கும் உலகின் மிகப்பழமையான ஒரே வானியல் கடிகாரம். இரண்டாம் உலகப் போரின் போது நாஜிக்கள் இதை தீயிட்டு அழிக்க முயல, நகர மக்கள் பெரும் போராட்டம் நடத்தி இதைக் காத்தனர்.



குழந்தைகள் விரும்பும் 'பேட்மேன்' போல உடை அணிந்த இந்த வௌவால் மனிதன் ஸ்லோவாக் நாட்டைச் சேர்ந்தவர். 26 வயதாகும் இவர் பெயர் ஜோல்டன் கோஹாரி. தண்ணீர், மின்சாரம் ஏதும் இல்லாத பழைய வீட்டில் தனியாக வாழ்ந்துவரும் இவரை அந்நாட்டு மக்கள் செல்லமாக 'ஸ்லோவாக் பேட்மேன்' என்று அழைக்கின்றனர். இவர் நாட்டில் நடக்கும் அநியாயத்தை தட்டிக் கேட்கும் சினிமா ஹீரோ கிடையாது.


ஆனால் மக்களுக்கு சேவை செய்வதுதான் இவரின் வேலை. தன் ஏரியாவில் வசிப்பவர்களுக்கு தன்னால் முடிந்த சின்ன சின்ன உதவிகளைச் செய்ய ஆரம்பித்தார். அதுவே அவரின் நிரந்தர வேலையாக மாறிவிட்டது. வெளியே செல்லும்போது இந்த உடையில் இருப்பதால், குழந்தைகள் மத்தியில் ஜோல்டன் மிகவும் பிரபலம்.









தகவல் : ப்ரியா.

Monday, April 16, 2012

தூங்க வைக்கும் தொலைபேசி !


தூங்கியே காலத்தைக் கழிக்கும் சோம்பேறிகள் ஒருபுறம் இருக்க, தூக்கமே வராமல் துன்பப்பட்டுக்கொண்டு தூக்க மாத்திரைகளை நாடும் துக்கமான நோயாளிகளும் இன்னொரு பக்கம் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நோயாளிகள் 'இன்சோம்னியாக்கள்' (insomniacs) எனப்படுகிறார்கள்.

தூக்கம் வராமல் இந்நோயால் பரிதவிப்பவர்களுக்காவே நியூயார்க்கில் இயங்குகிறது ஸ்லீப் லைன் சேவை. அதாவது, ஒரு தொலைபேசி அழைப்பின் மூலமாகவே நம்மைத் தூங்க வைக்கும் தூக்க சேவை. "ஆம், தொலைபேசியில் இந்த ஸ்லீப் லைனைத் தொடர்பு கொண்டால் போதும்.... எப்பேர்ப்பட்ட ஆளையும் நாங்கள் பேசியே தூங்க வைத்துவிடுவோம்" என்று சவால் விடுகிறது இந்த சேவை அமைப்பு.

முதன் முதலில் இந்தப் பேச்சு - ஹிப்னாட்டிச முறையை அறிமுகப்படுத்தியவர் டான் டக்லஸ் (Don Douglas) என்ற நரம்பியல் மற்றும் மனநோய் மருத்துவர்தான். தூக்கத்தைத் தூண்டும் விதமாக இவர் பேசிய 8 நிமிட உரையைத்தான் இந்த ஸ்லீப் லைன் சேவையிலும் ஓட விடுகிறார்கள். அந்தக் குரல் செய்யும் மாயாஜாலமோ, அல்லது பேசும் விஷயம் அவ்வளவு மொக்கையோ தெரியவில்லை..... இந்த சேவையைத் தொடர்பு கொள்பவர்களில் பெரும்பாலனவர்கள் நல்ல தூக்கத்தைப் பெற்று விடுகிறார்களாம்.



முதலில் தூங்க வசதியான, பிடித்த இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. இவை சிகிச்சையின் முதல் படிகள். சிகிச்சையின் போது தொலைபேசிக் குரலின் ஒலி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வரும். கடைசியாக அந்தக் குரல் பேசி முடிப்பதற்குள் மறுமுனை 'கொர்ர்....கொர்ர்'தான்!

"ஏராளமான பக்க விளைவுகள் கொண்ட தூக்க மாத்திரைகளைப் பயன்படுத்துவது இதனால் வெகுவாகக் குறைந்த்திருக்கிறது" என்கிறது இந்தச் சேவையை நடத்திவரும் "லென்னாக்ஸ் ஹில்' மருத்துவமனை.

ஸ்லீப் லைன் பெற்று வரும் வெற்றியின் விளைவாக, விரைவில் நீரிழிவு நோய்க்கு ஒரு ஹெல்ப் லைன், காச நோய்க்கு ஒரு ஹெல்ப் லைன் என்று இவர்கள் கொண்டு வரவிருக்கிறார்கலாம். இந்த இரண்டு நோய்களுக்கும் பேச்சால் தீர்வு தர முடியாது என்றாலும், சிகிச்சை தொடர்பான பயனுள்ள ஆலோசனைகளை தொலைபேசியில் வழங்குவார்கள்.






தகவல்: ஆர்.ஆர்.பூபதி.

Sunday, April 15, 2012

உலகின் மிக விலையுர்ந்த ஓவியங்கள் !


"மோனலிசா"

இன்றுவரை விலை மதிப்பிடமுடியாத இடத்தில் இருப்பது மோனலிசாதான். இத்தாலிய எழுச்சியின்போது, பிரபல இத்தாலிய ஓவியர் லியனார்டோ டா வின்சி இதை வரைந்தார். இப்போது பிரான்ஸ் நாட்டின் லாவ்ரே அருங்காட்சியகத்தில் பொக்கிஷமாக மாட்டி பாதுகாக்கப்படும் மோனலிசா ஓவியத்தை இன்சூரன்ஸ் செய்வதற்காக 1962-ம் ஆண்டு மதிப்பிட்டார்கள். அப்போது,'460 கோடி ரூபாய் பெரும்' என கணக்கிட்டார்கள். ஐம்பது ஆண்டுகள் கழித்து இன்றைய கணக்கில் மதிப்பிட்டால், இது சுமார் 3220 கோடி ரூபாய் ! இந்த விலையிலும் இதனை வாங்கி தங்கள் சொந்தமாக்கிக் கொள்ள உலகின் பெரும் பணக்காரர்கள் தயார். ஆனால், பிரெஞ்சு அரசுதான் விற்க தயாராக இல்லை.




"தி கார்டு பிளேயர்ஸ்'

"தி கார்டு பிளேயர்ஸ்' இதுவரை ஏலங்களிலும் தனிப்பட்ட முறையிலும் உலகெங்கும் விற்கப்பட்ட ஓவியங்களிலேயே மிக அதிக விலைக்கு விற்பனையாகி சரித்திரம் படைத்தது. இரண்டு பேர் சீட்டாடும் காட்சியில் அப்படி என்ன ரசனைக்குரிய அம்சம் இருக்கிறதோ தெரியவில்லை.... இதேபோல பல ஓவியங்களை வரைந்திருக்கிறார் பிரெஞ்சு ஓவியர் பால் செழான். அதில் 1892-ம் ஆண்டு வரைந்த இந்தக் குறிப்பிட்ட ஓவியத்தை கடந்த ஆண்டு கத்தார் குடும்பம் விலைக்கு வாங்கியது. பொது ஏலத்தில் இல்லாமல் தனிப்பட்ட முறையில் வாங்கியது என்பதால் சரியான விலையை அவர்கள் சொல்லவில்லை. என்றாலும், கிட்டத்தட்ட 1250 கோடி ரூபாய் கொடுத்து அவர்கள் வாங்கியதாகத் தகவல்.



"நம்பர் 5 1948"

அமெரிக்க ஓவியர் ஜாக்ஸன் போல்லாக் வரைந்த 'நம்பர் 5 1948' என்ற ஓவியம் விற்பனை சாதனையில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. நவீன ஓவியங்களுக்கு முன் மாதிரியாகக் கருதப்படும் இது 1948-ம் ஆண்டு வரையப்பட்டது. கோடுகளும் வண்ணங்களும் தாண்டி இதில் என்ன உருவம் இருக்கிறது என்பது சாதாரணர் கணகளுக்குப் புலப்படாது. கடந்த 2006-ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த ஏலத்தில் இந்த ஓவியம் 700 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.



"வுமன் 3"

நெதர்லாந்தில் பிறந்து அமெரிக்காவில் வசித்த வில்லெம் டி கூனிங் என்ற ஓவியர் வரைந்த ஓவியம் வுமன் 3 என்ற ஓவியம் இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறது. பெண்களை மையக் கருவாக வைத்து இவர் வரைந்த ஆறு ஓவியங்களில் இதுவம் ஒன்று. 1953-ம் ஆண்டு வரையப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டு இது 681 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.




'அடேல் பிளாச் பாயர்-1

இந்த பட்டியலில் ஐந்தாவது இடம் பிடித்திருக்கும் ஓவியம் 'அடேல் பிளாச் பாயர்-1 ஹஸ்டவ் கிலிமிட் என்ற ஓவியர் 1907-ம் ஆண்டு வரைந்து முடித்த ஓவியம் இது. முழு வேலைப்பாடுகளுடன் கூடிய மங்கையை சித்தரித்து முடிக்க, 3 வருடங்கள் ஆனதாம் அவருக்கு. நியூயார்க் நகரில் உள்ள நியூ கேலரிக்காக, ரோஸ்ட் லாடர் என்பவர் 2006-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த ஓவியத்தை 621 கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கினார்.







தகவல்: ராஜிராதா.

Friday, April 13, 2012

அறிவுலக நாயகன் அம்பேத்கர்.



சிறு சம்பவம்...

காலையில் மழை சோவென கொட்டத்துவங்கியது. சதாராவின் வீதியில் பள்ளிக்குப் புறப்படும் தருவாயில் இருந்த சிறுவர்கள் ஐந்தாறு பேர் மழையையே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். இதை சாக்காக வைத்துக் கொண்டு இன்று பள்ளிக்கு எப்படியும் மட்டம் போட்டுவிடுவது என்பது அவர்களுடைய திட்டம். அவர்களுள் ஒருவனாக நின்ற பீமின் மனதிலோ வேறு எண்ணம்.(பீமாராவ் சக்பால் அம்பேத்கரின் இயற்பெயர்)

என்னதான் மழை விடாமல் பெய்தாலும் இன்று எப்படியும் பள்ளிக்குச் செல்வது என அவன் முடிவெடுத்திருந்தான். இதைக் கேட்ட மற்ற சிறுவர்கள் பீமைக் கேலி செய்தனர். "உன்னால் இந்த அடை மழையில் பள்ளிக்குச் செல்லமுடியுமா ?" எனச் சவால் விட்டனர்.

அடுத்த நொடியே எதையும் பொருட்படுத்தாமல் பீம் தெருவில் இறங்கி நடக்கத் துவங்கினான். எப்படியெல்லாம் தன் புத்தக பையை ஈரம் படாமல் பாதுகாக்க முடியோமோ, அதற்கான முயற்சிகள் அத்தனையும் மேற்கொண்டபடி, பள்ளியை நோக்கி விறுவிறுவென நடந்துச் சென்றான்.

ஓரிடத்தில் மழை மிகக் கடுமையாகக் கொட்டத் துவங்க, அருகிலிருந்த வீடொன்றில் அவன் ஒதுங்கி நின்ற சமயம், வீட்டிலிருந்து வெளியே வந்த ஒரு பெண்மணி கோபத்துடன் பீமைப் பார்த்தாள். அடுத்த நொடி பீம் தெருவில் விழுந்து கிடந்தான். அவன் பிடித்திருந்த புத்தக பையினுள் இப்போது நீர் முழுவதுமாகப் புகுந்திருந்தது. எழுந்து நின்றான்.

அவனுக்கு எதிரே இன்னமும் அந்தப் பெண்மணி ஆவேசத்துடன் நின்றுகொண்டு இருந்தாள். "நீ ஒரு மகர். (மகர் என்பது தாழ்த்தப்பட்டச் சாதிகளுள் ஒன்று ). என்ன தைரியம் இருந்தால் வீட்டுக்குள் காலடி எடுத்து வைப்பாய்?" என இரைந்தாள்.

அந்த கொட்டும் மழை ஈரத்தையும் மீறி, தீண்டாமை எனும் கொடிய நெருப்பு சிறுவன் பீமின் இதயத்தை எரித்தது. தனது குழந்தைகளை எந்தப் பேய் நெருங்கிவிடக் கூடாது என்று கிராமத்தில் இருந்து ராம்ஜி சக்பால் (அம்பேத்கரின் தந்தை) நகரத்துக்கு அழைத்து வந்தாரோ, அங்கேயும் அது வெவ்வேறுவிதமான ரூபங்களில் தன் குழந்தைகளைப் பயமுறுத்துவதைக் கண்டு அவர் மிகுந்த வேதனை கொண்டார்.

பீம் வளர்ந்து பெரியவன் ஆனான்.ஆரம்பக் கல்வி முடிந்து, உயர்நிலைக் கல்வியில் சேரும் நேரமும் வந்ததது. பள்ளியில் தனது மகனைச் சேர்க்கச் சென்றபோது, இம்முறை ராம்ஜி கூடுதல் கவனத்துடன் புதிய பள்ளியின் சாதியத் தொந்தரவுகளிலிருந்து மகனைப் பாதுகாக்க ஒரு புதிய உத்தியைக் கையாண்டார்.

அதன்படி பீம் எனும் அவன் பெயருக்குப் பின்னால் ஒட்டிக்கொண்டிருக்கும் பட்டப் பெயரான சக்பாலை எடுத்துவிட்டு, பீமின் மேல் பற்று வைத்திருந்த ஆசிரியர் ஒருவரின் பெயரைச் சேர்க்க முடிவு செய்தார். அந்தப் பெயர்தான் அம்பேத்கர். இன்று இந்தியாவின் ஒவ்வொரு கடைசி மனிதனுக்கும் வாழ்வதற்கான நம்பிக்கையையும், போராடுவதற்கான வலிமையையும் ஊட்டும் பெயராக விளங்கிவரும் அந்தப் பெயர் உருவாக்கம் பெற்றது இப்படித்தான். பீமாராவ் சக்பால் என்று அழைக்கப்பட்ட அந்த சிறுவன், அன்றுமுதல் பீமாராவ் அம்பேத்கராக மாறினான்.


ராம்ஜி சக்பாலுக்கு இச்சமயத்தில் மகாராஷ்டிரத்தில் காரேகான் எனும் இடத்தில் காசாளர் வேலை கிடைத்தது. எனவே அவர், தன் பிள்ளைகளை அவர்களின் அத்தையின் பொறுப்பில் விட்டுவிட்டு அங்கே சென்றுவிட்டார். விடுமுறை நாளின்போது அம்பேத்கர், அவரின் சகோதரன் மற்றும் அக்காள் மகன் ஆகிய மூவரும் தங்கள் தந்தையைச் சந்திக்கவேண்டி, காரேகானுக்கு ரயிலில் புறப்பட்டு மசூர் ரயில் நிலையத்தை அடைந்தனர்.

அங்கே அவர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. குறித்த நேரத்தில், இவர்கள் வரும் தவகல் கிடைக்காத காரணத்தாலோ என்னவோ, இவர்களை அழைத்துப்போக ரயில் நிலையத்துக்குத் தந்தை வரவில்லை. மூவரும் வாடகைக்கு ஒரு மாட்டு வண்டியைப் பிடித்து காரேகான் செல்லத் தயாராயினர். பாதித் தொலைவு சென்றிருப்பார்கள்... வண்டிக்காரனுக்கு தான் மகர் இனச் சிறுவர்களை ஏற்றிச் செல்கிறோம் என்பது தெரியவர, சட்டென ஆத்திரப்பட்டவன் அப்படியே அந்த வண்டியைக் குடை சாய்த்து, மூன்று சிறுவர்களையும் கீழே உருண்டு விழச் செய்தான். அதன்பிறகு மிகுந்த சிரமத்துக்கிடையே மூவரும் தட்டுத்தடுமாறி, ஒருவழியாகக் காரேகானுக்குச் சென்று சேர்ந்தனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தாக மிகுதியால் ஒரு குளத்தில் இறங்கி நீர் குடிக்கச் சென்றபோது, ஊரார் ஒன்று சேர்ந்து துரத்தி அடித்த சம்பவம், சிகை திருத்தும் நிலையத்தில் முடி பாதி வெட்டப்பட்ட நிலையில் அரைகுறையாக இறக்கிவிடப்பட்டு அவமானத்தோடு வீடு வந்து சேர்ந்து, சகோதரிகளால் மீதமுள்ள முடி திருத்தப்பட்ட சம்பவம் எனச் சிறுவயதிலேயே தீண்டாமையின் கொடுமை வெந்தணல் கொப்புளங்களாக அவர் உள்ளத்தில் நீர் கட்டி நின்றன. கல்வி ஒன்றுதான் இவை அனைத்துக்கும் தீர்வு என்பதை நன்கு உணர்ந்துகொண்ட அம்பேத்கர், முன்னிலும் தீவிரமாகப் படிப்பில் நாட்டம் செலுத்தத் துவங்கினார்.

பள்ளியில் அம்பேத்கர் தனது ஆழ்ந்த படிப்பாலும், இனிமையான சுபாவத்தாலும், எதனையும் ஆய்ந்தறிந்து வெளிப்படுத்தும் நுண்ணறிவாலும் தனித்துவமான மாணவனாக விளங்கினார். என்றாலும், சில மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் மூளையில் புற்றுநோயாக ஒட்டிக் கொண்டு இருந்த சாதியம் எனும் வெறி, அவரை மனதளவில் பள்ளியிலிருந்து விலகியிருக்கவே செய்தது.

இதனால், பள்ளிகாலங்களில் அம்பேத்காருக்குத் தோழர்கள் என யாரும் இல்லை. ஆனால், அந்தக் குறையைப் புத்தகங்கள் போக்கின. ஒரு நல்ல நூலைக் காட்டிலும் சிறந்த நட்பு வேறு எதுவாக இருந்துவிட முடியும்? சமயம் கிட்டும்போதெல்லாம் அந்த நண்பர்களுடன் தனது நேரத்தை முழுமையாகச் செலவிடுவார் அம்பேத்கர். மாலை நேரங்களில் அருகில் இருக்கும் பூங்காக்களுக்குச் சென்று, இந்த உலகத்தையும் மனிதர்களையும் வேடிக்கை பார்க்கத் துவங்குவார்.


இப்படிச் சிறு வயதிலேயே ஆழ்ந்த சிந்தனையும் தனிமையுமாகக் காணப்பட்ட அந்தச் சிறுவனை, அந்தச் சிறுவனை, அந்தப் பூங்காவுக்கு வழக்கமாக வரும் ஒரு நபர் நாள்தோறும் கவனிக்கத் துவங்கினார். அவர் பெயர் கிருஷ்ண அர்ச்சுன ராவ் கெலுஸ்கர். வில்சன் ஹைஸ்கூலின் தலைமை ஆசிரியரான அவர், அப்போதே இந்தச் சிறுவனிடம் அசாத்தியமானதொரு திறமை இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டார்.

அந்த வருட மெட்ரிகுலேஷன் தேர்வுகளின் முடிவுகள் வெளியானபோது, தாழ்த்தப்பட்ட மாணவர்களில் ஒருவன் முதல் முறையாக மெட்ரிக்கில் தேர்ச்சி பெற்றது மிக முக்கியமான செய்தியாக அங்கிருப்பவர்களால் பேசப்பட்டது. 'நமது சமூகத்தில் முதல் முறையாக ஒருவன் செய்திருக்கும் சாதனையை நாம் கொண்டாடவேண்டும்' என அந்த மக்கள் முடிவு செய்து, அதற்கென ஒரு விழாவை ஏற்பாடு செய்தார்கள். அந்த விழாவுக்கு அவர்கள் சிறப்பு விருந்தினராக ஒருவரை அழைத்தார்கள். அவர் கெலுஸ்கர். 'பூங்காவில் பார்த்து, எந்த மாணவனைப் பற்றி ஒரு நல்ல அபிப்ராயம் கொண்டிருந்தோமோ, அதே மாணவனுக்குத்தான் நாம் பரிசளிக்கப் போகிறோம்' என்பதை அறிந்து, அந்த ஆசிரியருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.


இனி....


சாதாரண ஒரு படைவீரனின் மகனாக, வரலாற்று வார்த்தைகளால் ஒடுக்கப்பட்ட குலத்தில் பிறந்து, இந்தியாவின் ஈடு இணையற்ற அறிஞராக, சாதி வெறியின் தலை மேல் சம்மட்டி அடிகொடுத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கு புது வெளிச்சம் தந்த புரட்சி வீரனாக மறைந்த அம்பேத்கரின் வாழ்வில் எதிர்கொண்ட வேதனைகளின் சரித்திரம் இனி வேறு எவராலும் நினைத்துப் பார்க்க முடியாதது.

சிறுவயதில், பள்ளியிலும் மழைக்கு ஒதுங்கிய வீட்டிலும் பட்ட அவமானங்களினால் அன்று மட்டும் முடங்கியிருந்தால் இன்றைய இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை எப்படியாக இருக்கும் என ஒருமுறை யோசித்துப் பாருங்கள். அன்று அவரை சுற்றிச் சூழ்ந்திருந்தது அடர் இருட்டு, கடைத்தேறவே வழியில்லாமல் சாதி வெறியர்களால் உருவாக்கப்பட்ட இருட்டு. அப்போது அவருக்கு முன் இருந்த ஒரே தூரத்து வெளிச்சம் கல்வி. கண்களை இறுக மூடி தளராத நெஞ்சுரத்துடன் அந்த வெளிச்சத்தை மட்டுமே பற்றுக்கோடாக்கி அவர் நடை பயின்றதன் பலன் இன்று லண்டன் மியூசத்தில் பெருமைப்படத்தக்க அறிஞர்களின் வரிசையில் கார்ல் மார்க்ஸுக்கு இணையான இடத்தில் அவரைப் புகைப்படமாக மாட்டப்படும் அளவுக்கு உயர்த்தியுள்ளது.

அரசியல், சமூகம், சட்டம், பொருளாதாரம், தத்துவம், வரலாறு, வணிகம், கல்வி, சமயம் என சகல துறைகளிலும் அசாத்தியமான அறிவாற்றலும், எழுத்து வன்மையும், மேதமையும் கொண்டிருந்த இதுவரையிலான இந்தியாவின் ஒரே அறிவுலக நாயகன் அம்பேத்கர் மட்டுமே. அப்படிப்பட்ட மேதை வேறு எந்த நாட்டில் பிறந்திருந்தாலும் கணக்கில்லாத விருதுகளைத் தந்து அந்த நாட்டின் அரசாங்கம் பெருமைக் கொண்டிருக்கும்.

ஆனால், அப்பேர்ப்பட்ட தலைவருக்கு, 'பாரத ரத்னா' விருது கொடுக்கப்பட்டதே அவர் இறந்து இருபத்தைந்து ஆண்டுகள் கழிந்த பிறகுதான் என்பது நாம் அனைவரும் வருத்ததோடு கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம்.

எந்த நாட்டின் அரசியல் சாசன சட்டத்தை வடிவமைக்க அம்பேத்கர் அல்லும் பகலும் அயராது வியர்வை சிந்தினாரோ அந்தச் சட்டங்களை செயல்படுத்தும் அந்த நாட்டின் நாடாளுமன்ற கட்டடம் அவரை தேசத்தின் சிற்பியாக அங்கீகரிக்க மனமில்லாமல் அவரது புகைப்படத்துக்கு அனுமதி மறுத்து வந்தது. பாரதப் பிரதமராக வி.பி.சிங்.பதவி ஏற்று கட்டளை இட்ட பிறகுதான் அந்தத் தடையும் விலகி நம் நாடாளுமன்றம் தன் கதவுகளைக் திறந்து வழிவிட்டது.

(இன்றும் கிராமப்புற மக்கள் தங்களின் ஒடுக்கப்பட்ட நிலையிலிருந்து விடுபட்டு கொஞ்சமேனும் பொருளாதார சுவாசக் காற்றை சுவாசிக்க காரணமான, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டை தன் ஆட்சிக் காலத்தில் அமுல்படுத்தியவர்தான் திரு.வி.பி.சிங் அவர்கள்)

இவை அனைத்துக்கும் சிகரமாக இருக்கும் இன்னொரு முக்கியமான விஷயம் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை மையாமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படத்துக்கு உண்டான நெருக்கடி...! இயக்குனர் ஜாபர் படேல் இயக்கத்தில் என்.எப்.டி.சி. தயாரிப்பில் உருவான அந்தத் திரைப்படம் கூட தற்பொழுதுதான் வெளிவந்து சில நாட்களில் ஆதிக்க சாதியின் அழுத்தத்தில் திரையரங்கில் இருந்து தூக்கப்பட்டது.



வாழ்நாள் முழுவதும் எந்த தேசத்தின் உண்மையான அகவிடுதலைக்காகப் போராடினாரோ அந்த தேசத்தில்அவருக்கான முழுமையான மதிப்பும் மரியாதையும் அங்கீகாரமும் கிடைப்பதற்க்குத்தான் எத்தனை தடங்கல்கள், எத்தனை தடைகள்!

இவையனைத்தையும் கடந்து இதே தேசத்தில் இன்னொரு புறம் உலகம் வியக்கும் ஒரு மகத்தான பெருமையும் அவருக்கு உண்டு. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியாவின் 6 லட்சம் கிராமங்களிலும் இன்று நின்றுகொண்டிருக்கும் அவரது சிலைகளின் சாதனை, உலகின் வேறு எந்தத் தலைவருக்கும் இல்லாத பெருமைகளில் ஒன்று. ஆனால், எண்ணிக்கையில் 6 லட்சமாக இருந்தாலும் அவை இரண்டாகப் பிளவுண்டு 12 லட்சம் கிராமங்களாகவே இந்தியா இன்றும் காணப்படுவதுதான் மிக மோசமான வேதனை!






நூல்: அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு.
ஆசிரியர் அஜயன் பாலா.
விகடன் வெளியீடு.

முன்படம் : வே.மதிமாறன் வலைப்பூ.
மற்ற படங்கள் : கூகுள் இமேஜ்.





அண்ணல் அம்பேத்கரைப் மற்றொரு நிகழ்வு:

Wednesday, April 11, 2012

உலகின் உயர குகைப் பாலம்!

(Aizhai Suspension Bridge - China)


மலைக்குகைகளின் உள்ளே போகும் சாலை, திடீரென கிடுகிடு பள்ளத்தாக்கின் மீது தொங்கும் பாலத்தைத் தொட்டு, அடுத்த மலைக்குகைக்குள் நுழைந்தால் எப்படி இருக்கும் ? இது ஹாலிவுட் பட கற்பனை இல்லை. நிஜமாகவே இப்படி ஒரு பாலத்தை சீனாவில் கட்டி திறந்திருக்கிறார்கள். அய்ஸாய் பாலம் என்ற அது கடந்த வாரம் திறக்கப்பட்டது.

சீனாவின் ஹூனான் மாகாணத்தில் இருக்கும் இரண்டு பெரிய நகரங்கள் ஜிஷோ மற்றும் ஸடோங். இரண்டும் இரண்டு வெவ்வேறு மலைத்தொடர்களில் இருக்கின்றன. ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரம் போக, ஒரு மலையிலிருந்து இறங்கி, இன்னொரு மலையில் ஏற வேண்டும். வளைந்து செல்லும் மலைப்பாதைகளில் சாலை அருமையாக இருந்தாலும், போக நான்குமணி நேரம் ஆகும்.



இரண்டு மலைகளையும் பிரிக்கும் 1102 அடி ஆழ பள்ளத்தாக்கின் மீது தொங்கு பாலம் கட்ட முடிவெடுத்தது அரசு. உயரத் தூண்களிலிருந்து தொங்கும் இரும்புக் கம்பிகள் தாங்கிப் பிடிக்க 1146 மீட்டர் தூரத்துக்கு - அதாவது ஒரு கிலோமீட்டரையும் விட நீளமாக தொங்குகிறது இந்தப் பாலம். இருபுறமும் மலைகளைத் குடைந்து, குகைகளில் சாலை அமைத்து, பாலத்தோடு இணைத்திருக்கிறார்கள். ஆறு வழிப் பாதை என்பதால் ஏராளமான வாகனங்கள் பயணிக்கலாம். பாதசாரிகள் நடக்க பக்கத்தில் பாதை உண்டு. பள்ளத்தைப் பார்த்து பயப்படாதவர்கள் தாராளமாக நடைப் பயிற்சி கூட மேற்கொள்ளலாம். உலகின் உயர குகைப் பாலம் என்ற பெருமை பெற்றிருக்கிறது இது!






தகவல் : லோகேஷ்.

Tuesday, April 10, 2012

புவி வெப்பத்தால் குள்ளமாகிறோமா நாம்?


நமது உடல் அளவுக்கும் தட்ப வெப்பத்துக்கும் தொடர்பு உள்ளதாக அமெரிக்காவின் ப்ளோரிடாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டறிந்துள்ளார்கள். மனிதர்கள் மட்டுமல்ல... எல்லா பாலூட்டி இனங்களுமே இப்படித்தானாம். குளிர்ந்த சூழ்நிலையில் இருந்தால் தலைமுறை தலைமுறையாக அதன் சந்ததிகளின் உயரமும் எடையும் வளர்ந்து கொண்டே வந்து, சில ஆயிரம் வருடங்களில் மிகப் பெரிய உயிரினமாக பரிமாணம் பெற்றுவிடும். அதுவே வெப்பம் மிகுந்திருந்தால், படிப்படியாக அளவு குறைந்து மினியேச்சர் உயிரினமாகிவிடுமாம்.

ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த குதிரைகளின் புதை படிம எச்சங்களை ஆரய்ச்சி செய்த விஞ்ஞானிகள்தான் இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

முதன் முதலில் பூமியில் தோன்றிய குதிரைகளான சிப்ருஹிப்புஸ் இனத்தவை, வெறும் 6 கிலோ எடையோடு ஒரு நாயின் அளவில்தான் இருந்தனவாம். அது எப்படி இன்றிருக்கும் பிரமாண்டமான குதிரையாக மாறியது ? அதைத்தான் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துருக்கிறார்கள்.


பல்லாயிரம் வருடங்களாக நம் உலகம் குளிரையும் வெப்பத்தையும் மாறி மாறி அனுபவித்தே வந்திருக்கிறது. கடும் குளிர் சில ஆயிரம் வருடங்கள் என்றால், வெப்பம் சில ஆயிரம் வருடங்கள். இதுவே நம் பூமியின் வரலாறு.

"அப்படியொரு குளிரில் இருந்து உலகம் வெப்பமடைந்த காலத்தில், நாயளவு இருந்த சிப்ருஹிப்புஸ் குதிரைகள், மேலும் படிப்படியாக எடை குறைந்து பூனைக் குட்டி அளவிற்கு மாறி விட்டன. அதன் பிறகு மீண்டும் பூமி குளிர்ந்த போது, அவை மறுபடியும் வளர்ச்சியடைந்து தற்போதிருக்கும் குதிரைகளின் உயரத்திற்கு வந்து விட்டன " என்கிறார் ப்ளோரிடாவில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தைச் சேர்ந்த மருத்துவர் ஜோனாதன் ப்ளச்.


மருத்துவர் ஜோனாதன் ப்ளச் (Dr Jonathan Bloch).


குதிரைக்கு நேர்ந்த இந்த பரிமாண மாற்றம் நமக்கும் ஏற்படலாம்; தற்போது அதிகரித்து வரும் புவி வெப்பம், மனிதர்களின் அளவையும் குறைக்கலாம் என்பதே விஞ்ஞானிகளின் கருத்து.

ஆனால், இது உடனடியாக நிகழ்ந்து விடாது. தலைமுறை தலைமுறையாக நம் உடலும் எடையும் குறைந்து கொண்டே வந்து, சில ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு நாம் மினியேச்சர் மனிதர்கள் ஆவோம் என்பதும், புலி, சிங்கம், யானை போன்ற விலங்குகளும் நம்மோடு சேர்ந்து மினியேச்சர்கள் ஆகிவிடும் என்பது ஆறுதல் செய்திகள்....

அப்போது பொம்மை காரில் நிஜ மனிதர்கள் பயணிக்கக்கூடும் !






தகவல்: கோகுலவாச நவநீதன்.