Friday, January 13, 2012

சிங்களனும், வட இந்தியனும் அந்நியர்தான் !


மீனவர் பிரச்னை என்பது கடலும் கடல் சார்ந்ததுமாகப் பார்க்கப்படாமல், நாடும் நாடுகள் கடந்துமாகப் பார்க்கப்படுகிறது. எனவேதான் அது தீர்க்க முடியாத சிக்கலாகவும் இருக்கிறது. மொழியால், இனத்தால், நிலப்பரப்பால் வேறுபட்டு இருந்தாலும், இலங்கை மீனவர்களும், தமிழக மீனவர்களும் அடிப்படையில் மீனவர்கள்தான். அவர்களுக்குக் கடல் பற்றி புரிதல் உண்டு. மீன் பிடித் தொழிலில் உள்ள நுட்பங்கள், கஷ்ட-நஷ்டங்கள் குறித்த அறிதல் உண்டு.

கச்சதீவு அந்தோணியார் கோயில் திருவிழாவில் தமிழக மீனவர்களும் இலங்கை மீனவர்களும் கட்டித் தழுவி அன்பு பாராட்டும் காட்சிகளைக் காணலாம். ஆனால், இந்த மீனவர்களின் வாழ்க்கையையே அறியாத சிங்கள கடற்படை, இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள், இருநாட்டு அரசுகள்தான் பிரச்சனையை மேலும் சிக்கலாக்குகிறார்கள். வடமேற்கு இலங்கைக்கும், கச்சத்தீவுக்கும் இடைப்பட்ட பூங்கொடித்தீவு, நெடுந்தீவு போன்ற பகுதிகள்தான் மீன்வளம் அதிகம். தமிழகக் கடல் எல்லைக்குள் நீர்ப்பரப்பு உண்டே தவிர, மீன் வளம் இல்லை. மீன் பிடிக்க வேண்டும் என்றால் கச்சத் தீவைத் தாண்டுவதைத் தவிர தமிழக மீனவர்களுக்கு வேறு வழி இல்லை.


இந்தியக் கடற்படை

கடல் பரப்பை எல்லை போட்டுப் பிரிப்பதை விட, மீன் வளத்தை எப்படி இருநாட்டு மீனவர்களும் பங்கிட்டுக்கொள்வது என்பதுதான் முக்கியம். ராமேஸ்வரத்தில் நாட்டு படகு மீனவர்களுக்கும், விசைப் படகு மீனவர்களுக்கும் இடையில் எந்தெந்த நாட்களில் மீன் பிடிக்க செல்லலாம் என்ற ஒப்பந்தம் இருக்கிறது. அதைப் போல இலங்கை மீனவர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் இடையில் புரிதலும் ஒப்பந்தமும் ஏற்பட வேண்டியது அவசியம். ஆனால், விடுதலைப் புலிகள் இருந்த காலம் வரை, தமிழக மீனவர்களைக் கடற் புலிகளாகவே கருதி தாக்குதல் தொடுத்தது இலங்கை அரசு. இப்போது புலிகள் இல்லாத காலத்திலும் அவர்களுக்கு புலி அச்சம் போகவில்லை. பிழைப்புக்காக கடலில் படகெடுத்து செல்லும் அப்பாவிகளைக் கண்மூடித்தனமாகத் தாக்குவதும், சுட்டுத்தள்ளுவதும், எந்த தார்மீக நெறிகளிலும் சேர்த்தி இல்லை. மீன் என்பது எப்போதும் வலையில் விழாது. இரவில் வலை போட்டு கண் அசந்துவிடுவார்கள் மீனவர்கள். காலையில் படகு இந்திய எல்லையைத் தாண்டி விடும். படகு திசைமாறிப் போவது என்பது காற்று, தட்பவெப்ப நிலை, நீரோட்டங்கள் எல்லாவற்றையும் பொறுத்தது. இதை எல்லாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், ஒருவர் மீனவர் வாழ்கையைப் பற்றி புரிந்தவராக இருக்க வேண்டும் என்பதைத்தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.


சிங்களக் கடற்படை


ஆனால், இதையெல்லாம் புரிந்து கொள்ளதவர்கள்தான் அதிகாரிகளாகவும், அரசியல்வாதிகளாகவும் இருக்கிறார்கள். ஏதோ சிங்கள கடற்படை மட்டும்தான் அநியாயம் செய்கிறது என்று இல்லை, இந்தியக் கடற்படை செய்யும் அட்டூழியம் அதைவிட அதிகம். கொலை செய்வது இல்லையே தவிர, மீனவர்களைத் தாக்குவது, மீன் பிடிப் பொருட்களைச் சேதப்படுத்துவது என எல்லா அட்டூழியங்களையும் இந்தியக் கடற்படை செய்கிறது. ஒரு தமிழக மீனவருக்கு எப்படி சிங்களம் பேசும் இலங்கைக் கடற்படை அதிகாரி அந்நியரோ, அதே போலத் தமிழ் தெரியாத வட மாநில இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரியும் அந்நியராகத்தான் இருக்கிறார்.


சமீபத்தில் கச்சதீவைச் சுற்றிலும் எண்ணெய் வளங்கள் இருப்பதாகக் கண்டுபிடித்து உள்ளனர். ஏற்கனவே எண்ணெய் அரசியலால் அரபுலகு நாடுகள் என்னென்ன பிரச்சனைகளைச் சந்திக்கின்றன என்பது நமக்குத் தெரியும். கச்சத்தீவிலும் அப்படி ஒரு ஆதிக்கப் போட்டி வரும். அந்தப் போட்டி எத்தகைய அழிவைக் கொடுக்கப்போகிறதோ தெரியவில்லை. அதற்கு முன், தமிழக மீனவர்கள், இலங்கை மீனவர்கள், இந்திய அரசு, இலங்கை அரசு என நான்கு தரப்பினரும் அமர்ந்து பேசி பரஸ்பரப் புரிதலுக்கு வருவதுதான் ஒரே தீர்வு !



நன்றி : எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ். - விகடன்.


எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ் கடலைப் பற்றியும், கடல் சார் மக்களான மீனவர்களைப் பற்றியும் எழுதிய மிகச் சிறந்த புத்தகம் "ஆழி சூழ் உலகு".

2 comments:

Deepak Karthik said...

sir yean intha kolaveri ?
yaathum oore yaavarum kelir nu sonnathum oru tamilan thane ?

manithargal nu paarunga sir,, Indian nu paarunga sir..
singala naaigala yaarodayum compare panathinga !
Indian army la north indians south indian nu pirichu paakrangala enna ??
manasula patatha sonen sir !
nandri
Deepak

Siraju said...

தீபக், உங்க உணர்ச்சி எனக்குப் புரிந்தாலும், புரியா விட்டாலும் இது வரை 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுடப்பட்டு இறந்து உள்ளனர்.இன்று ஒவ்வொரு மீனவக் குடும்பத்திலும் ஒரு தந்தை, ஒரு அண்ணன்,ஒரு தம்பி இல்லை.இம்மாதிரியான உறவுகள் இல்லாத குடும்பத்தின் நிலை நாம் ஒவ்வொருவரும் நம் சொந்த அனுபவத்திலோ, வேறு அனுபவத்திலோ வலி கண்டு இருப்போம். இல்லையா ?

நாம் எதற்காக கடலோரக் காவல் படைன்னு ஒன்னு வைத்திருக்கிறோம். பன்னு சாப்பிடவா ?. நம் மக்களை பாதுகாக்க, மீனவர்களை பாதுகாக்க. அப்போ இந்த 500 பேர் சாவுக்கு காரணம் அவர்களைச் சுட்ட சிங்களைனைவிட, அதை வேடிக்கை பார்க்கும் இந்தியக் கடலோர காவல் படைதான் குற்றவாளி.

சிங்களவனையும், மத்திய அரசையும் பார்த்துதான் நாம் கேட்கும் கேள்வி ஒய் திஸ் கொல வெறி டா ?

Post a Comment