Friday, November 18, 2011

கட்டிடக் காடு !

நகர்ப்புறங்களில் மரங்கள் அழிக்கப்பட்டு கான்கிரீட் காடுகளாக மாறிவருகின்றன. மரங்களை அழித்த பயன், மழை பொய்த்து வறட்சியும் புவி வெப்பமடைதல் பிரச்சனை உலகை ஆட்டிப் படைத்து வருகின்றன.

இப்போதுதான் மரங்களின் அருமையை மனிதன் உணர ஆரம்பித்திருக்கிறான். அதற்காக அழிக்கப்பட்ட மரங்களை உடனே கொண்டு வருவது என்பது இயலாத காரியம்.

இதற்கு என்னதான் தீர்வு என்று இத்தாலியில் உள்ள மிலன் நகரில் ஸ்டெபனோ பொரி (Stefano Boeri) என்ற கட்டிடக் கலைஞர் யோசித்ததன் விளைவுதான், இந்த அடுக்ககக் காடு ! (Apartment Forest). ஏராளமான மரம், செடிகளுடன் கூடிய பிரம்மாண்டமான அடுக்குமாடி கட்டிடம் ஒன்றை அவர் உருவாக்கி வருகிறார்.


இதெப்படி சாத்தியம் ?

27 மாடிகளுடன் கூடிய அடுக்ககம் (Apartment) இது . இங்கு அனைத்து தளங்களிலும் மரம், செடி, கொடிகள் அமைக்கப்படுகின்றன. மொத்தம் 730 மரங்கள், 11 ஆயிரம் செடிகள், 5 ஆயிரம் புதர் மற்றும் குரோட்டன்ஸ் வகைகள். ஏறக்குறைய இரண்டரை ஏக்கர் பரப்பில் வளரும் அளவுக்கான தாவரங்கள் இந்த அடுக்கு மாடியில் வளர இருக்கின்றன. 'வானுயர அமைக்கப்படும் காடு' என்று பொருள்படும் வகையில் 'பாஸ்கோ வெர்ட்டிகல்' (Bosco Verticale) என்று இதற்கு பெயர் சூட்டியிருக்கிறார்கள்.


இதுபற்றி போரி நிறுவன இயக்குனர் மிக்கேல் பிரனலோ "மரம், செடிகள் நடுவதற்காக கட்டிடம் உருவாக்கக் கூடாத என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் 'பாஸ்கோ வெர்டிகல்' அடுக்குமாடிக் கட்டிடம். வெப்பம், மாசு பாதிப்பு ஆகியவற்றிலிருந்து மனிதர்களைக் காப்பவை தாவரங்கள்தான்.


இந்த சுகம் தரையில் வீடு அமைப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. அடுக்குமாடிவாசிகளுக்கும் இது வாய்க்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இதை உருவாக்கி வருகிறோம்.

இந்த அடுக்ககத்தின் விலை எவ்வளவு தெரியுமா ? அதிகமில்லை ரூ.4.35 கோடி முதல் 13. 25 கோடி வரை. இங்கு குடியிருக்க வருபவர்களுக்கு வீடுகள் மட்டுமே சொத்து. எல்லா தாவரங்களும் பொது சொத்து.புயல் மழைக்கு தாக்குபிடிக்கும் வகையில் மரங்கள் செழிப்பதற்கேற்ப தொழில் நுட்பத்தை பயன்படுத்த உள்ளோம். அடுக்குமாடி கட்டிட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டில் வீடும் காடும் தயார் என்கிறார் மிக்கேல்.


கட்டிடக் கலைஞர் ஸ்டெபனோ பொரி



தகவல் : டி. கார்த்திக்

0 comments:

Post a Comment