Tuesday, November 29, 2011

கெடுவார், கேடு நினைப்பார் !

பல மாதங்களுக்கு முன் ஆஸ்திரேலிய செய்தித்தாள்களை ஆக்கிரமித்து இருந்த வேலைவாய்ப்பு செய்தி இதுதான் : 'நன்றாக வளர்ந்திருக்கும் தக்காளி செடியை உலுக்க ஆட்கள் தேவை'.

எதற்காக செடியை சம்பளம் கொடுத்து உலுக்க வைக்கிறார்கள் ? அதற்கு காரணம் இருக்கிறது. மனிதன் இயற்கையை மதிக்காமல் தன் விருப்பத்திற்கு ஆட்டம் போட்டதின் விளைவுதான் இது.

மரங்களை வெட்டி, இயற்கையை அழித்து, பூச்சிக்கொல்லி மருந்துகளை அளவிற்கு அதிகமாக பயன்படுத்தியதன் பலன். மனிதர்கள் படுவேகமாக பூச்சிகள் வளர்வதை அழித்து வருகிறார்கள். கொசு, கரப்பான் போன்ற நோயை உண்டாக்கும் பூச்சிகள் என்றால் பரவாயில்லை. ஆனால், நமக்கு நன்மை செய்யும் பூச்சிகளும் அழிந்து போனால் என்ன செய்வது ?

இனி நடந்த நிகழ்வைப் பார்ப்போம்.

ஆஸ்திரேலியாவில் மரம், செடி, கொடிகள் எல்லாமே திடகாத்திரமாக வளர்கிறது. ஆனால், அவை பூப்பதில்லை. காய்ப்பதில்லை.காரணம் ஏனென்று தெரியவில்லை ? கடைசியில் விடை கிடைத்தது. 'பம்பிள் பீ' என்கிற குண்டுத்தேனீ வயல்வெளிகளில் அங்கும் இங்குமாக பறந்து கொண்டிருக்கும். தற்போது அந்த தேனீ க்கள் முற்றிலும் அழிந்து விட்டது.

இந்த தேனீக்கள் தேன் சேகரிப்பதோடு தன் வேலையை முடித்து கொள்வதில்லை.கூடுதலாக மற்றொரு வேலையையும் செய்கிறது. அது, ஒரு பூவில் இருக்கும் மகரந்தத்தை இன்னொரு பூவிற்கு எடுத்து செல்கிறது. இந்த சேர்கைதான் பூக்கள்,காய்கள் உருவாவதற்கு காரணம். இந்த அரிய பணியை செய்து வந்த பம்பிள் பீ குண்டுத்தேனிக்கள் தற்போது இல்லை. தேனிக்கள் குறைந்ததால் மகசூலும் குறைந்தது.

அதனால், அந்த வேலையை செய்ய ஆட்களை அமர்த்துகிறார்கள், பண்ணை முதலாளிகள். அந்த வேலையாட்களுக்கு என்ன வேலை தெரியுமா ? நாள் முழுவதும் தோட்டங்களை சுற்றி வர வேண்டும். ஒவ்வொரு தக்காளி செடியாக சென்று அதை மென்மையாக உலுக்க வேண்டும். செடியின் பூக்களில் இருந்து மகரந்த துகள்கள் கீழே கொட்டும். அது காற்றில் பறந்து அயல் மகரந்தச் சேர்க்கையை நிகழ்த்தும்.


இந்த வேலையை திறம்பட செய்யத்தான் இப்போது ஆட்களை விளம்பரம் கொடுத்து கூவி அழைக்கிறார்கள். பம்பிள் பீ ஒரு பைசா கூட வாங்காமல் இலவசமாக திறம்பட செய்த வேலையை, இப்போது மனிதர்கள் செய்ய தொடங்கி இருப்பது ஒரு தொடக்கம்தான் என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள். இன்னும் சந்திக்க வேண்டியது நிறைய இருக்கிறது.

சரி, பம்பிள் பீ குண்டுத் தேனீ எப்படி காணமல் போனது ? நம்மூரில் சிறுவர்கள் தட்டான் பூச்சிகளை பிடித்து விளையாடுவது போல, ஆஸ்திரேலிய சிறுவர்கள் 'கொழு கொழு'வென உடம்பை வைத்து கொண்டு சாவதானமாக பறந்து திரியும் இந்த குண்டுத் தேனீயைப் பார்த்தல், பிடித்து விளையாடி கொன்று விடுவார்கள்.
இப்படி விளையாட்டாக விளையாடியது வினையாக முடிந்தது. இந்த குண்டுத் தேனீ கொட்டினால் வலி தாங்க முடியாது என்ற தவறான எண்ணமும், இந்த தேனீ அழிந்து போக மிக முக்கிய காரணம். இதுதவிர, விவசாயத்திற்கு பயன்படுத்தும் ரசாயன பூச்சிகொல்லியும் இந்த வகை பூச்சிகளை கொன்று குவித்துவிட.....விவசாயிகளுக்கு நண்பனாக விளைச்சலை அதிக்கபடுத்திய, மனிதனுக்கு தேனை கொடுத்த தேனீ க்களும் அழிந்து விட்டன.

இப்போது இயற்கை செய்த வேலையை மனிதன் செய்கிறான். இப்படி இயற்கை ஆற்றும் பணிகள் ஒவ்வொன்றையும் மனிதன் செய்ய முடியுமா ? அது நடக்கும் காரியமா ? உயிரினங்களின் மறைவு, இயற்கை கொடுக்கும் பதிலடி. இனியாவது இயற்கையை பேணிக் காப்போம்.





தகவல் : தினத்தந்தி

0 comments:

Post a Comment