Friday, December 2, 2011

பிள்ளைகளின் கல்வி பெரியாரின் தாகம்!


ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதில்தான் தந்தை பெரியார் தீராத தாகம் கொண்டு இருந்தார். தன் வாழ்நாள் முழுவதும் அவர் தன் குறிக்கோள்களில் ஒன்றாகவே அதனை வைத்திருந்தார்.

பிள்ளைகளினுடைய படிப்பின் மீது அவர் எவ்வளவு அக்கறை உடையவராக இருந்தார் என்பதை இரண்டு நிகழ்வுகள் நமக்குக் காட்டுகின்றன. இரண்டுமே திருச்சி மாநகரத்தில் நடைபெற்றவை.

1972 ஆவது ஆண்டு, பேருந்து நிலையத்துக்கு எதிரே இருக்கிற அவருடைய சிலையின் கண்ணாடியை யாரோ உடைத்து விட்டார்கள். அல்லது உடைந்து போயிருக்கலாம். ஆனால் அடுத்த நாள் முழுவதும் அது திருச்சியில் பெரிய செய்தியாகிவிட்டது. இந்த செய்தி பரவிய உடன் முதன் முதலாக கல்லூரியை விட்டு மாணவர்கள் வெளியே வருகின்றனர்.

அந்த கல்லூரியை நிறுவியவர் தந்தை பெரியார்தான். அந்த நன்றி கடனின் பொருட்டு அம்மாணவர்கள் பெரிய ஊர்வலம் நடத்தினர். பெரியாரும் அன்று ஓர் அலுவல் காரணமாக திருச்சி வந்திருந்தார். தன்னுடைய மாளிகையில் அவர் தங்கியிருந்தார். பெரியார் மாளிகையை நோக்கி அந்த ஊர்வலம் நகர்கிறது. அப்போது அம்மாளிகையின் முன் மணியம்மையார் நின்று கொண்டு இருக்கிறார்.

மாணவர்கள் ஊர்வலமாக வந்த செய்தி பெரியாருக்கு செல்கிறது, உடனே அவர் பதட்டத்துடன் வெளியே வந்து 'என்னப்பா, என்னாச்சு' என்று அவர் கேட்டவுடன், அம்மாணவர்கள் 'தங்களின் சிலையை யாரோ சேதப்படுத்தி விட்டார்கள், அதனால் அதற்கு கண்டம் தெரிவித்து ஊர்வலமாக வந்து இருக்கிறோம் என்றனர். இதை கேட்ட தந்தை பெரியார் மிகுந்த கவலைக்கு உள்ளாகிறார்.

நான்தான் தவறு செய்துவிட்டேன் என்று நினைக்கிறன், இந்த திருச்சி மாநகரத்திலே இரண்டு, மூன்று கல்லூரிகள் உள்ளன. அவையாவும் ஒவ்வொரு மதத்தை சேர்ந்தவர்களுடையது என்பதாலும், அவர்களுடைய மதத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாலும், இந்து மதத்தைச் சேர்ந்த கல்லூரிகள் மேல் சாதி மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதாலும், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, உழைக்கும் மக்களின் பிள்ளைகளுக்கு தரமான கல்வி போய் சேர வேண்டும் என்று ரூபாய் 5 லட்சமும், 12 ஏக்கர் நிலத்தையும் அரசுக்கு கொடுத்து கல்லுரி ஒன்றை நிறுவ சொன்னேன்.

ஆனால், நீங்கள் எல்லாம் இப்படி படிக்க வேண்டிய நேரத்தில் படிப்பை உதறி தள்ளி விட்டு இங்கு வந்து நிற்கிறீர்களே என்று ஆதங்கப்பட்டார்.

சிலை உடைந்தால் என்ன ? என் கண் கண்ணாடி சரியாகத்தானே உள்ளது. இது போன்ற வேலைகளையெல்லாம் கட்சிக்காரர்கள் பார்த்துக் கொள்வார்கள். உங்கள் வேலை என்ன ? படிப்பது தானே, அதை விடுத்து தெருவில் இறங்கி கலவரம் பண்ணுவது, ஊர்வலம் வருவது உங்கள் வேலை அல்ல. நீங்கள் படிப்பது ஒன்றுதான் எனக்கு நீங்கள் செலுத்தும் நன்றி கடன் என்று கூறி அம்மாணவர்களை கல்லூரிக்கு திருப்பி அனுப்புகிறார்.

இதை அன்றைக்கு மாணவர்கள் ஊர்வலத்தில் பங்கு கொண்ட, இன்றைக்கு நாடளுமன்ற உறுப்பினராக இருக்ககூடிய திருச்சி சிவா அவர்கள் இதனை நினைவு கூர்ந்தார். இன்றைக்கு அந்த கல்லூரியின் முதல்வராக இருக்கக்கூடியவர் 72 - ல் அந்த கல்லூரியின் மாணவராக இருந்திருக்கிறார்.

தந்தை பெரியார் அவர்கள், தன்னுடைய சிலை உடைந்தது பற்றி கவலைப்படுபவராக இல்லாமல், மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் தந்தார்.

இன்னொரு நிகழ்ச்சியும் அதே திருச்சி மாநகரத்தில் நடைப்பெற்றதுதான். திருச்சியில் சீதாலட்சுமி இராமசாமி என்ற பெயரில் ஒரு பெரிய கல்லூரி இருக்கிறது. அந்த கல்லூரியின் நிறுவனர் இராமசாமி ஐயருக்கு பெரிய பாராட்டு விழா நடைபெறுகிறது.


அந்த பாராட்டு விழாவில் யார் கலந்து கொள்கிறார்கள் என்றால் பச்சை நாத்திகர்களான தந்தை பெரியாரும், நாவலர் நெடுஞ்செழியனும். கடவுள் வாழ்த்து பாடலுடன் விழா தொடங்க, பெரியார் எழுந்து நிற்கிறார். இதை கண்ட அந்த கல்லூரியின் நிறுவனர் இராமசாமி ஐயர் ஒடி வந்து, தாங்கள் நிற்க வேண்டாம் என்ற சொன்னவுடன், 'இல்லை இல்லை, எல்லோரும் நிற்கும் போது, நான் மட்டும் அமர்ந்திருந்தால், சபை ஒழுங்கு கெட்டுவிடும். எனக்கு சிரமமில்லை' என்று கூறுகிறார்.

பின்பு நிகழ்ச்சியில் இராமசாமி ஐயரை பாராட்டி பேசுகிறார். இதை கேட்ட தோழர்கள் பலரும், நீங்கள் காலமெல்லாம் யாரை கடுமையாக எதிர்த்து பேசுகிறீர்களோ, இப்போது அவர்களையே ஆதரித்து பேசுகிறீர்களே என்று கேள்வி எழுப்பினர்கள்.

உடனே தந்தை பெரியார் ' என்ன பேசுகிறீர்கள், நம் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று, அதுவும் பெண் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று தன்னுடைய பணத்தில் ஒரு மனிதர் கல்லூரி கட்டியிருக்கிறார். அவரை பாராட்ட வேண்டாமா? அவர் நாத்திகராக இருந்தால் என்ன, ஆத்திகராக இருந்தால் என்ன, இல்லை வேறு எந்த சாதியாக இருந்தால் என்ன ? காலமெல்லாம் நாம் எதற்காக போராடுகிறோம், பெண் பிள்ளைகளுக்கு கல்வி வேண்டும் என்றுதானே, அதைதான் அவர் செய்திருக்கிறார். அவரை நாம் பாராட்டவில்லை என்றால் வேறு யார் பாராட்டுவார்கள்' என்று கேள்வி எழுப்பினார்.

தந்தை பெரியாரின் மனதில் பதிந்து இருந்ததெல்லாம் ஒன்றுதான், 1000 ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட ஒரு சமுகம், ஓர் இனத்திற்கு கல்வி கிடைக்க வேண்டும், அதன் மூலம் தான் இந்த தமிழ் சமூகம் முன்னேற்றமடைய முடியும் என்ற ஆவல் மட்டும்தான்.
ஆனால், அவரை பற்றி பல தவறான தகவல் இங்கே உள்ளது. அதில் ஒன்று, அவர் குறிப்பிட சாதியை தாக்குவதாக கூறுகின்றார். அது தவறு, அவர் எந்த குறிப்பிட சாதியையும் தாக்கவில்லை, அதன் ஆதிக்கத்தைத்தான் தாக்குகிறார். ஒருவேளை, அந்த சாதி எல்லோருக்குமான கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்குமானால், முதலில் அதரவு தருவது தந்தை பெரியார்தான்.

சமத்துவம்தான் தந்தை பெரியாரின் கொள்கையே தவிர, துவேசமல்ல. ஒடுக்கப்படுகிற மக்களை அதிகமாக நேசித்தார். அவர்களை ஒடுக்குகிறவர்களை கடுமையாக எதிர்த்தார். ஆகவே, ஆதிக்கத்திற்கு எதிரான சமத்துவம் என்பதுதான் தந்தை பெரியார் தொடுத்த போரே அல்லாமல், பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய தாகம். மற்றப்படி அவரை பற்றி சொல்லப்படுகிற செய்திகள் தவறு என்பதற்கு இவ்விரண்டு நிகழ்ச்சிகளுமே ஆதாரம்.


தகவல் : ஒன்றே சொல், நன்றே சொல் புத்தகம்
- பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.

புகைப்பட உதவி : தமிழச்சி பெரியார்.

1 comments:

saivam said...

கீழே உள்ள தரவுகளை பார்க்கவும் .
பெரியார் ஆந்திரா குல்டி . தமிழை அழிக்க வந்த அவதாரம்.
Dravidian Illusions and Tamil Identity Part-1 to part 8. Reference tamilan TV.
இத பார்த்த பிறகும் எவனும் பெரியார் பத்தி பேச மாட்டான்.
https://www.youtube.com/watch?v=5yhlMx65m1Y
https://www.youtube.com/watch?v=R4AQ3m3yWvo
https://www.youtube.com/watch?v=hlS3eTMGqRk
https://www.youtube.com/watch?v=qfhC_i5jf8E
https://www.youtube.com/watch?v=iVGkLfCdaMI
https://www.youtube.com/watch?v=rp0zhLcELSk
https://www.youtube.com/watch?v=mD5eSwRe4p8
https://www.youtube.com/watch?v=FnwKIqqh5l8
evr in nokkam enna ?

Post a Comment