Saturday, December 17, 2011

வறுமை நமக்கு தந்த மூலதனம் !

கார்ல் என்ரிச் மார்க்ஸ்

இன்னும் 7 ஆண்டுகள் கடந்தால் கார்ல் மார்க்ஸ் பிறந்து 200 -வது ஆண்டு. 1818 மே மாதம் 5 - ஆம் தேதி பிறந்த கார்ல் என்ரிச் மார்க்ஸ் (Karl Heinrich Marx) இன்றைக்கு ஜெர்மனி என்று அறியப்படுகிற அன்றைய பிரஷ்யா நாட்டில் பிறந்தார். அவர் பிறந்தது ஏழ்மையான குடும்பத்தில் என்றும் சொல்ல முடியாது. மிகப் பெரிய பணக்காரக் குடும்பம் என்றும் சொல்லிவிடமுடியாது. ஆனால், அவருடைய வாழ்க்கை ஏழை-பணக்காரன் என்கிற சிந்தனையிலே ஒரு புதிய மாற்றத்தை இந்த உலகத்திற்கு கொண்டுவந்தது.

எல்லோரும் உலகத்தை விளக்கி கொண்டிருந்த வேளையில், அவர்தான் உலகத்தை மாற்றுவதற்கான சிந்தனையை வெளியிட்டார் என்று சொல்ல வேண்டும். அவர் முதலில் சட்டம், வரலாறு, தத்துவம் என்கிற மூன்று துறைகளிலும் பயின்றார். ஒரு பேராசிரியர் ஆக வேண்டும் என்றே ஆசைப்பட்டார். வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஒரு தொடர் வண்டி துறையில் எழுத்தர் வேலைக்கு போனார். "உன்னுடைய கையெழுத்து சரியில்லை. அதனால், உன்னை வேலைக்கு சேர்த்து கொள்ள முடியாது" என்று சொல்லி விட்டார்கள்.

பிறகு பத்திரிக்கையிலே எழுதினார். ஒரு பத்திரிகைக்கு ஆசிரியரே ஆனார். அந்த பத்திரிக்கை புரட்சிகரமான செய்திகளை வெளியிடுகிறது என்று சொல்லி அவரை நாடு கடத்த வேண்டும் என்று முடிவெடுத்தார்கள்.

பொதுவாக நாடு கடத்தப்பட்டவர்கள் என்று சொல் உண்டு. கார்ல் மார்க்ஸ் மட்டும்தான் "நாடுகள்" கடத்தப்பட்டார் என்று சொல்ல வேண்டும். அவரை பிரான்ஸ் நாடு கடத்தியது. அவர் பிறந்த பிரஷ்யா கடத்தியது.

1849 - வது ஆண்டு அவர் லண்டனுக்கு வந்து சேர்ந்தார். இறுதி காலம் வரை லண்டனில்தான் வாழ்ந்தார் எனபதை விட, தன் இறுதி காலம் வரை லண்டனில் வறுமையில்தான் வாழ்ந்தார் என்று குறிப்பிட வேண்டும். லண்டனில் இருந்துதான் தன் அறிவு கதிர்களைப் பரப்பினார் என்று சொல்லலாம்.

நான் ஒரு முறை லண்டனுக்கு பயணம் செல்ல நேர்ந்த போது, அங்கு விமான நிலையத்தில் கேட்டார்கள், "நீங்கள் லண்டனில் எங்கெல்லாம் சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறீர்கள் ?" என கேட்ட போது, "பல இடங்கள் உள்ளன" என்றேன்.

"அரண்மனையை சுற்றிப் பார்க்கிறீர்களா ?" என கேட்கும் போது,

"அரண்மனையையும் சுற்றி பார்க்க வேண்டும், அதோடு மட்டுமில்லாமல், முக்கியமாக ஒரு கல்லறையை பார்க்க வேண்டும் " என்று சொன்னேன்.


கார்ல் மார்க்ஸின் கல்லறை

அது ஹைகேட் என்கிற இடத்தில் உள்ள கார்ல் மார்க்ஸின் உடைய கல்லறை. மேலும், அவருடைய காதலியான துணைவியார் ஜென்னியினுடைய கல்லறை மற்றும் அவருடைய குழந்தை எஸ்தருடைய கல்லறை, இன்னொரு பக்கத்திலே மேலும் இரண்டு குழந்தைகளின் கல்லறை என 5 கல்லறைகள் அந்த இடத்திலே உள்ளன.

லண்டனுக்கு போய் சேர்ந்த மறு ஆண்டே அவர்கள் தங்கள் முதல் குழந்தையை இழந்து போனார்கள். 1852 - ல் இன்னொரு பெண் குழந்தையையும் இழந்து போனார்கள். காய்ச்சலிலே அவதியுற்ற அந்த குழந்தையை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

ஒரு நண்பருக்கு ஜென்னிமார்க்ஸ் கடிதம் எழுதுகிறார் "அந்தக் குழந்தைப் பிறந்த போது தொட்டில் வாங்குவதற்கும் எங்களிடம் பணம் இல்லை. அது இறந்தபோதும் சவப்பெட்டி வாங்குவதற்கும் பணம் இருந்ததில்லை" என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

உலகில் அறிவார்ந்த செல்வர்களை உருவாக்கியவரின் குடும்பம் மிக கொடிய வறுமையில் வாழ்ந்து இருக்கிறது என்பதைத்தான் அக்கடிதம் நமக்கு உணர்த்துகிறது.


கார்ல் மார்க்ஸ் - ஜென்னி

ஒருமுறை மார்க்ஸிடம் வேடிக்கையாக ஒரு கேள்வி கேட்கப்பட்டது. "உங்களுக்கு இன்னொரு பிறவி என்று இருந்தால் என்ன செய்து கொண்டு இருப்பீர்கள்" என கேட்ட பொழுது, "இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறேனோ, அதைதான் அப்போதும் செய்து கொண்டு இருப்பேன், திருமணம் செய்வதை தவிர" என்று குறிப்பிட்டார்.

இதனால், அவருக்கு திருமணத்தின் மீது வெறுப்போ, தன் துணைவி ஜென்னியின் மீது வெறுப்போ என்பதாக அர்த்தம் இல்லை. இன்னொரு பிறவி என்று ஒன்று இருந்தால், அதிலாவது தன் அன்புக்குரிய காதலி ஜென்னியையும், குழந்தைகளையும் துன்பபடுத்த வேண்டாம் என்று எண்ணித்தான் அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

தொடக்கத்திலே, கார்ல் மார்க்ஸ் ஹெகல் (Hegel) என்கிற தத்துவ ஞானியின் மாணவராக இருந்தார். அவருடைய சிந்தனைகளை ஏற்றுக் கொண்டு தன் கருத்துக்களை வெளிப்படுத்த ஆரம்பித்தார். மூன்று துறைகளிலும் பட்டம் பெற்ற கார்ல் மார்க்ஸ் பொருளாதாரத் துறையிலும் பல நூல்களைக் கற்றார். அவ்வாறு அவர் கற்றதன் பயனாக நமக்கு மூலதனம் என்கிற பொருளாதார நூல் கிடைத்தது.

ஹெகல்

எனவே நான்கு துறைகளில் வல்லுனராக இந்த கார்ல் மார்க்ஸ் ஹெகலின் மாணவராக இருந்தார். ஹெகல் அடிப்படையில் ஒரு கருத்து முதல் வாதி. கருத்து முதல் வாதி என்றால் ஆன்மீக வாதி என்று எளிமையாக குறிப்பிடலாம்.

ஆனால், பிற்காலத்தில் கருத்து முதல் வாதியாக இருந்த கார்ல் மார்க்ஸ், பொருள் முதல்வாதியாக மாறினார்.


பயர்பாக்

பொருள் முதல் வாதம் என்பது ஒரு பகுத்தறிவு வாதம் என்றும் எளிதாக புரிந்து கொள்ளலாம். அதற்கு காரணமாக இருந்தாவர் பயர்பாக் (Feuerbach). அவருடைய புத்தங்களை படித்த பிறகுதான் ஹெகலியனாக இருந்தாலும் கூட, அந்த கருத்து முதல் வாதத்தில் இருந்து மாறுபட்டு, ஒரு பொருள் முதல் வாதி என்கிற சிந்தனைக்கு வந்து சேர்ந்தார்.

அவர் பிரான்ஸ் நாட்டில்தான் முதல்முறையாக எங்கல்சை (Engels) சந்தித்தார். அப்போது அறிமுகமாகிய அந்த நட்பு, ஆயுட்கால நட்பாக மாறியது. எங்கல்ஸ் என்கிற ஒரே ஒரு நண்பணை, ஒரே ஒரு மனிதனை சந்தித்திருக்கவிட்டால், கார்ல் மார்க்ஸை வறுமை எனும் கொடிய நோய் முன்பே கொன்றிருக்கும். எனவே வறுமையிலிருந்து அவரை மீட்டு, இந்த சமூகத்துக்கு நன்மைகளை கொண்டு வந்ததில் எங்கல்ஸ் எனும் மாமனிதனின் பங்கு அளப்பரியது.

எங்கல்ஸ்

கார்ல் மார்க்ஸும், எங்கல்சும் சேர்ந்து 1848 - ல் கம்யூனிஸ்ட் அறிக்கையை - பொதுவுடமைக் கட்சியின் அறிக்கையை தந்தார்கள். மார்க்ஸ் ஒரு கடிதத்தில் குறிப்பிடுகிறார் "நான் துன்பத்தை அனுபவித்து இருக்கிறேன். நான் கொஞ்சி விளையாடிய என் குழந்தைகளை ஒன்றன் பின் ஒன்றாக இறந்த போது, துன்பத்தின் அடி ஆழத்தை உணர்ந்தேன்.

ஆனாலும் இன்னமும் கூட, நான் உயிர் வாழ வேண்டும் என்று கருதுவது கூட, இந்த சமூகத்திற்கு நாம் இரண்டு பெரும் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய உள்ளன என்கிற எண்ணமும், அதற்கு உன் உதவி இருக்கும்" என்று எழுதுகிறார்.


ஆக, இன்றும் கூட பல பேர் கம்யூனிசம் இறந்து விட்டது என்று கூறுவதுண்டு, எங்கெல்லாம் ஒரு மனிதன் துன்பபடுகிறானோ, எங்கெல்லாம் தொழிலாளர்கள் துன்பபடுகிறார்களோ அங்கெல்லாம், அடிமை விலங்கை ஒடிக்க கார்ல் மார்க்ஸ் - எங்கல்ஸ் எனும் மாமனிதர்களின் சிந்தனைகள் பிறக்கும்.




நன்றி :

நூல் : ஒன்றே சொல் ! நன்றே சொல் !
- பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.


0 comments:

Post a Comment