Wednesday, April 4, 2012

தகவல் களம் !



மென்மையான காஷ்மீர் கம்பளங்கள் உலகப் புகழ் பெற்றவை. இவை மென்மையாக இருப்பதற்குக் காரணம், பாஷ்மினா ஆடுகள். இமயமலையை ஒட்டிய பனி படர்ந்த பகுதிகளில் பிரத்யேகமாக வசிக்கும் இந்த ஆடுகள், அந்தக் குளிரைத் தாங்குவதற்கு ஏதுவான மென்மையான அடர் ரோமங்கள் அமையப் பெற்றவை. அவற்றிலிருந்து தான் புகழ் பெற்ற காஷ்மீர் சால்வைகளும் கம்பளங்களும் உருவாகின்றன.

குறைந்துவரும் இந்த இனத்தை அபரிமித ஆற்றலோடு உருவாக்குவதற்கான முயற்சி, காஷ்மீரின் ஷெர்-இ-காஷ்மீர் பல்கலைக்கழக விலங்கியல் துறையில் நடக்கிறது. அவர்கள் குளோனிங் முறையில் பாஷ்மினா ஆட்டை உருவாக்கி சாதித்துள்ளனர். 'நூரி' என இந்த ஆட்டுக் குட்டிக்கு பெயர் வைத்துள்ளனர். கடந்த 2009-ம் ஆண்டு 'கரிமா' என்ற எருமைக் கன்றுக் குட்டியை ஹரியானாவில் குளோனிங் முறையில் உருவாக்கினார்கள். அதன் பின் இந்தியாவின் இரண்டாவது குளோனிங் வெற்றி இது!




உலகிலேயே மிக விரைவாகச் செல்லக்கூடிய எலிவேட்டரை ஜப்பானின் மிட்ஸூபிஷி நிறுவனம் உருவாக்குகிறது. சீனாவின் ஷாங்காய் நகரில் 'ஷாங்காய் டவர்' என்ற வானுயர்ந்த கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. வரும் 2014-ம் ஆண்டு இது கட்டி முடிக்கப்டும். 632 மீட்டர் உயரத்தில் கட்டப்படும் இந்த ஷாங்காய் டவர், உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலீபாவை விட சற்றே உயரம் குறைவானது. 128 மாடிகள் கொண்ட இந்தக் கட்டிடத்தில் சிறப்பு அம்சமே இந்த எலிவேட்டர்தான்.

ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த எலிவேட்டார். தரைத் தளத்தில் ஏறும் ஒருவர், 128-வது மாடியை வெறும் 37 நொடிகளில் சென்றடைய முடியும். இப்போது புர்ஜ் கலீபா கட்டிடத்தில் இருக்கும் எலிவேட்டரைவிட இது இரண்டு மடங்கு வேகம். இவ்வளவு வேகமாகச் சென்றாலும், உள்ளே பயணிப்பவர்கள் சிறு அதிர்வையோ, காது அடைத்துக் கொள்ளும் அவஸ்தையோ உணர முடியாது. இப்படி வேகமாக பயணிக்கும் போது, அந்த இயக்கத்தில் கொஞ்சம் மின்சாரத்தையும் இது உற்பத்தி செய்யுமாம்.



தென் கொரியாவுக்கும், வட கொரியாவுக்கும் ஜென்மப் பகை இருந்தாலும், இசை இரண்டு தேசங்களையும் இணைக்கிறது. பிரான்ஸ் ரேடியோவுக்காக தலைநகர் பாரிஸில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றுக்கு இரண்டு கொரியாக்களைச் சேர்ந்த கலைஞர்களும் இணைந்துவந்து தங்கள் பாரம்பரிய வாத்தியங்களை இசைத்தார்கள்!







தகவல் : லோகேஷ்.

1 comments:

banti said...

-Good piece of information.

Post a Comment