Sunday, September 25, 2011

தமிழக அரசுக்கு 60 கேள்விகள்


சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகளின் கவனத்திற்கு...

1. இன்றைய அரசுக்குத் தெரியுமா?

தலைமைச் செயலர்கள் எல்லா செயலர்களுடன் நடத்தும் மாதக் கூட்டங்களில், பட்டியல் சாதியினர் பற்றிய எந்த கருத்துகளும் பேசக்கூடாது என்ற எழுதப்படாத சட்டம் கடைப்பிடிக்கப்பட்டு வருவது, தமிழகத்தை ஆளும் இன்றைய அரசுக்குத் தெரியுமா? அப்படி இல்லை எனில், சென்ற ஆட்சியின்போது 2006 முதல் 2011 வரை நடத்தப்பட்ட தலைமைச் செயலர் மாதக் கூட்டங்களில் எத்தனை கூட்டங்களில், பட்டியல் சாதியினர் பிரச்சினைகள் பேசப்பட்டன என்பதைத் தெரிவிக்க அரசு முன்வருமா?

2. உரிய அதிகாரம் வழங்கப்படுமா?

பட்டியல் சாதியினருக்கான ஒதுக்கீடு, பட்டியலினச் சான்று வழங்குதல், பட்டியல் சாதியினர் துணைத் திட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த ஆதிதிராவிடர் செயலருக்கு, தலைமைச் செயலக நடைமுறைப் பனுவலில் (Secretariat Business Rules) அதிகாரம் வழங்கப்படவில்லை என்பது உண்மையா? எனில், உரிய அதிகாரத்தை வழங்க அரசு முன்வருமா?

3. கூட்டங்களுக்கு செல்லக் கூடாதா?

பட்டியல் சாதி பணியாளர் சங்கங்களும், பட்டியல் சாதி சமூக அமைப்புகளும் நடத்தும் கூட்டங்களுக்கு பட்டியல் சாதி அமைச்சர்கள், பட்டியல் சாதி அதிகாரிகள் செல்லக் கூடாது என்று தடுக்கப்படுகிறார்கள் என்பது அரசுக்குத் தெரியுமா? அவ்வாறு கலந்து கொண்ட பட்டியல் சாதி அதிகாரிகள் யார் யார் மீது குற்றச்சாட்டு வனையப்பட்டது எனத் தெரிவிக்க அரசு முன்வருமா? எதிர்காலத்தில் இவ்வாறு தடுக்காமல் இருக்க, உரிய அரசாணைகள் பிறப்பிக்கப்படுமா?

4. ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படுமா?

பட்டியல் சாதியினர் துணைத் திட்டம் தொடர்பாக, பட்டியல் சாதி அறிவர்களுடனும் (Experts) சங்கங்களுடனும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்த – தமிழ்நாடு திட்டக் குழுவும், அரசு திட்ட வளர்ச்சித் துறையும், நிதித் துறையும், ஆதிதிராவிடர் துறையும் மறுத்து வருவது அரசுக்குத் தெரியுமா? எனில், இவர்கள் ஆண்டுக்கு மூன்று முறையாவது பட்டியல் சாதியினர் துணைத் திட்ட ஆலோசனைக் கூட்டங்களை நடத்த, அரசு ஆவன செய்யுமா?

5. துணை ஆட்சியர்களுக்கு அநீதி ஏன்?

சென்ற ஆட்சியில் 2008 – 09 துணை ஆட்சியர் பதவி உயர்வுப் பட்டியலில், 25 பட்டியல் சாதியினருக்கான இடங்கள் நிரப்பப்படாமல் அநீதி விளைக்கப்பட்டது அரசுக்குத் தெரியுமா? எனில், அரசு ஆணையின்படி இதற்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

6. உதவித் தொகையை வழங்குமா?

புதுச்சேரியில் சுயநிதித் தொழிற் கல்லூரிகளில் பயிலும் பட்டியல் சாதியினருக்கு, அக்கல்லூரிகள் வசூலிக்கும் முழுக் கட்டணத் தையும் உதவித் தொகையாக வழங்க அந்த அரசு முன் வந்துள்ளது போல, தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பிக்குமா?

7. பொறியியலில் ஏன் குறைந்தனர்?

தமிழ் நாடு பொறியியல் கல்லூரிகளில் 1980களில் 20 சதவிகிதமாக இருந்த பட்டியல் சாதி மாணவர் எண்ணிக்கை, தற்போது 8 சதவிகிதமாகக் குறைந்து விட்டது அரசுக்குத் தெரியுமா? எனில், உரிய கல்வி உதவித் தொகைகள் தரப்படாமையே இதற்குக் காரணம் என்பதால், கல்வி உதவித் தொகையை முழுமையாக வழங்க அரசு முன்வருமா?

8. மாணவர்கள் சேர்க்கப்படுவார்களா?

தமிழக அரசில் அங்கீகாரம் பெற்ற, அரசு உதவி பெறும் 354 பள்ளிகளில் +2வில் 1 சதவிகித மாணாக்கர்கூட சேர்க்கப்படவில்லை என்பது அரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டும் சென்ற ஆட்சியில் எந்தவித மாற்று நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை இந்த அரசு கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமா? எனில், அனைத்துப் பள்ளிகளிலும் +2இல் 20 சதவிகிதத்திற்கும் குறையாமல் பட்டியல் சாதியினர்/பழங்குடியின மாணவர்கள் சேர்க்கப்படுவதை அரசு ஆணை வெளியிட்டு உறுதி செய்யுமா?

9. ஆசிரியர் நியமனம் உறுதிபடுமா?

30 சதவிகிதத்திற்கும் மேலாக பட்டியல் சாதி மாணவர்களைச் சேர்க்கும் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு, கூடுதல் உதவி பெறும் ஆசிரியர் பணியிடங்களை வழங்க அரசு முன்வருவதன் மூலம் – அடித்தட்டு முதல் தலைமுறையினர் பட்டியல் சாதியினர்/பழங்குடியின மாணவர்கள் கல்லூரிகளில் சேர்க்கப்படுவதை அரசு ஆணை வெளியிட்டு உறுதி செய்யுமா?

10. தமிழக அரசு வெளியிடுமா?

அனைத்துத் துறைத் தலைவர்களும் பட்டியல் சாதி பணியாளர்கள் புள்ளி விவரத்தை ஆதிதிராவிடர் நல இயக்குநருக்கு அனுப்ப வேண்டும் என்ற ஆணையை – இதுவரை எந்தத் துறையும் மதிக்கவில்லை என்பதை அரசு அறியுமா? எனில், அனைத்துத் துறைகளுக்குமான இந்த ஆண்டு அறிக்கையை ஆதிதிராவிடர் நல இணையதளத்தில் வெளியிட அரசு ஆவன செய்யுமா?

11. கொள்கைக் குறிப்பை வெளியிடுமா?

மய்ய அரசுத் துறைகளின் ஆண்டு அறிக்கையில் பட்டியல் சாதியினர் பணியாளர் பற்றிய புள்ளி விவரம், ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுவதை அரசு அறியுமா? எனில், தமிழ்நாடு மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்படும் கொள்கைக் குறிப்பு அறிக்கைகளில் இதைக் கடைப்பிடிக்க அரசு ஆவன செய்யுமா?

12. ஏமாற்றப்பட்டது தெரியுமா?

சென்ற ஆட்சியின்போது, 2008 ஆம் ஆண்டு 520 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு பட்டியல் சாதியினர் பின்னடைவு நியமனம் செய்யப்படும் என அறிவித்து விட்டு, இதுவரை 420 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டு பட்டியல் சாதியினர் ஏமாற்றப்பட்டுள்ளதை அரசு அறியுமா? எனில், இதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் முறைகேடாக 2009 இல் பொது நியமனம் மேற்கொண்ட அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா?

13. ஆதிக்கத்தை தடுக்குமா அரசு?

தமிழக அரசில் மூன்றாம் அடுக்கு ஆளுகையில், பட்டியல் சாதியினத் தலைவர்கள் ஊராட்சி மன்றத் தலைவர்களாக இருக்கக்கூடிய இடங்களில், அவர்கள், பட்டியல் சாதி யினரல்லாத துணைத் தலைவர்களாலும், ஊராட்சி மன்றக் கணக்கர்களாலும் ஆதிக்கம் செய்யப்படுவது அரசுக்குத் தெரியுமா? இதனால், ஊராட்சி மன்றத் திட்ட முன்னுரிமை பட்டியல் சாதியினருக்கு மறுக்கப்படுவது அரசுக்குத் தெரியுமா? எனில், இத்தகைய போக்கைத் தடுத்து நிறுத்த அரசு என்னென்ன வழிவகைகளை மேற்கொள்ளப் போகிறது என்கிற விளக்கத்தை, தமிழக அரசு பட்டியல் சாதியினருக்குத் தர முன்வருமா?

14. ஆதிதிராவிடர் துறைக்கு தலித்தா?

ஆதிதிராவிடர் நலத்துறைக்கு அமைச்சர், செயலர், இயக்குநர் ஆகிய பதவிகளுக்கு பட்டியல் சாதியினரை மட்டுமே நியமிக்க வேண்டும் என்ற குறுகிய பார்வையைக் கொண்ட நடைமுறையை இந்த அரசு மாற்ற முன்வருமா?

15. ‘தாட்கோ நிலம்' வழங்கப்பட்டதா?

2 ஏக்கர் நிலம் வழங்கும் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை எத்தனை பேருக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளது? யார் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது? ஆளுக்கு எத்தனை ஏக்கர் வழங்கப்பட்டது? எவ்வளவு நிதி செலவிடப்பட்டது? என்ற புள்ளி விவரம் மாவட்டம் வாரியாக 2011 – 12 பட்ஜெட் தொடரில் வெளியிடப்படுமா?

16. ஏனில்லை தனித் திட்டங்கள்?

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் பட்டியல் சாதியினர் 40 சதவிகிதத்திற்கு மேல் இருக்கிறார்கள் என்றபோதும், உயர் கல்வித் துறை நிதி ஒதுக்கீட்டில் பட்டியல் சாதியினருக்கென்று – தனியாகவும் கூடுதலாகவும் எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை என்பதும், உயர் கல்வியை எட்டும் அம்மாணவர்களுக்கு ஏற்ற தனித்துவமான திட்டங்கள் ஏதும் இல்லை என்பதும் உண்மையா? எனில், உயர் கல்வி பட்ஜெட்டில் பட்டியல் சாதி கல்லூரி மாணவர்களுக்கென்று தனித் திட்டங்கள் கொண்டுவர இந்த அரசு முன்வருமா?

17. ஏனில்லை துணை வேந்தர் பதவி?

இதுவரை தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் (தனியார் உட்பட) 222 துணை வேந்தர்கள் பதவி வகித்திருப்பினும், பட்டியல் சாதியினர் ஆறு பேர் மட்டுமே மிகக் குறுகிய காலத்திற்குத் துணை வேந்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது, பட்டியல் சாதியினர் உயர் கல்வியில் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது. இப்பாகுபாட்டை அரசு உணர்ந்துள்ளதா? எனில், எதிர்காலத்தில் குறைந்தது 5 துணை வேந்தர்களாவது ஒரே காலத்தில் பட்டியல் சாதியினராக இருப்பதை அரசு உறுதி செய்யுமா?

18. பஞ்சமிக்கு தனிச் சட்டம் வருமா?

பட்டியல் சாதியினருக்கு சென்ற நூற்றாண்டில் (1890களில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த ஆங்கிலேய கலெக்டர் ட்ரெமன் கிரே என்பவரால்) வழங்கப்பட்ட 10 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தில், 9 லட்சம் ஏக்கருக்கு மேல் சாதி அதிகாரம் செய்பவர்கள் அபகரித்துவிட்டனர் என்பது உண்மையா? இந்த நிலங்களை பட்டியல் சாதியினருக்கு மீட்டுத்தர, தமிழ்நாடு அரசு தனிச் சட்டம் இயற்ற முன்வருமா?

19. பணியிடங்களை நிரப்பாதது ஏன்?

காலிப் பணியிடங்களை அறிவிக்கை செய்யும்போது பட்டியல் சாதியினர்/பழங்குடியினர்/மிகப் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கான இடங்களை சரியõகக் குறித்து வெளியிட வேண்டும் என்ற அரசு ஆணைகளை – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம், பல்கலைக் கழகங்கள் ஆகியோர் நடைமுறைப்படுத்த மறுத்து வருவதை அரசு அறியுமா? எனில், அவர்கள் மீது தேவையான நடவடிக்கைகளை எடுக்க இந்த அரசு முன்வருமா?

20. அரசு விளக்குமா?

+2வில் பொது மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை விட, பட்டியல் சாதி மாணவர்களின் சேர்க்கை சதவிகிதம் 2 சதவிகிதம் கூடுதல் என்பது அரசுக்குத் தெரியுமா? ஆனால், கல்லூரி மாணவர் எண்ணிக்கையில் சேர்க்கை சதவிகிதம் பொது சதவிகிதத்திற்குள் பாதியாகக் குறைந்துள்ளது ஏன் என்பதை அரசு விளக்குமா?

21. பழங்குடிச் சட்டம் ஏனில்லை?

பழங்குடியினர் இடங்களைப் பாதுகாக்க, பிற மாநிலங்கள் எல்லாம் சட்டம் இயற்றி இருக்க, தமிழ்நாடு அரசு மட்டும் சட்டம் இயற்றாமல் இருக்கிறது என்பது இந்த அரசுக்குத் தெரியுமா?

22. தலித் சட்டமன்றக் குழு ஏனில்லை?

நாடாளுமன்றத்தில் பட்டியல் சாதியினர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு இருப்பது போன்று, தமிழ்நாட்டில் பட்டியல் சாதியினர் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைக்க தமிழ்நாட்டில் ஆட்சி செய்தவர்கள் மறுத்து வந்திருப்பதை இந்த அரசு அறியுமா? எனில், பட்டியல் சாதியின சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைக்க இந்த அரசு உடனே முன் வருமா?

23. ஏனில்லை ‘ர்' விகுதி?

தமிழ்நாட்டில் உள்ள பட்டியல் சாதியினர் பட்டியலை, தமிழ்நாடு அரசு இன்னும் தமிழில் அறிவிக்கை செய்யவில்லை என்பதை அரசு அறியுமா? இந்தத் தமிழ்ப் பெயர்கள் கொண்ட பட்டியலை தமிழ்நாடு அரசு உடனே அரசிதழில் வெளியிடுமா? அவ்வாறு வெளியிடும்போது பெயர்களுக்கு இறுதியில் ‘ன்' விகுதி போட்டு இழிவு செய்யாமல் ‘ர்' விகுதி போட்டு வெளியிட்டு, பட்டியல் சாதியினரின் மாண்பைக் காக்க இந்த அரசு உடனே ஆவன செய்யுமா?

24. தனி வளர்ச்சிக்கு நிதி ஒதுக்குமா?

50 சதவிகிதத்திற்கும் மேல் பட்டியல் சாதியினர் வாழும் கிராமங்கள், பஞ்சாயத்துகள், பேரூராட்சிகள், குக்கிராமங்கள் பட்டியலை அரசு வெளியிட்டு – அவற்றிற்கு பட்டியல் சாதியினத் துணைத் திட்டத்தில் தனி வளர்ச்சித் திட்டங்களை வகுத்து, நிதி ஒதுக்க இந்த அரசு ஆவன செய்யுமா?

25. முனைவர்களுக்கு ஏனில்லை நிதி?

முனைவர் படிப்பைத் தொடர பட்டியல் சாதியினருக்கு 100 சதவிகித முழு கல்வி உதவித் தொகை வழங்க, ஒவ்வொரு பல்கலைக் கழகத்திலும் தலைக்கு ரூ. 5 கோடி கொண்ட நிதிக்குவையை (Corpus Fund) உருவாக்க அரசு ஆவன செய்யுமா? எனில், ஓராண்டுக்கு 4 பல்கலைக் கழகங்கள் என 5 ஆண்டுகளுக்குள் இதை நிறைவேற்ற, இந்த அரசு ஆவன செய்யுமா?

26. ஏனில்லை அரசு விளம்பரம்?

பட்டியல் சாதியினர் நடத்தும் செய்தித்தாட்களுக்கும், காலமுறை இதழ்களுக்கும் அரசு விளம்பரம் தரக்கூடாது என்ற தடை இருப்பதை அரசு அறியுமா? எனில், அரசு தரும் விளம்பரங்களில் 20 சதவிகிதத்தை தலித் இதழ்களுக்கு தர அரசு ஆணை பிறப்பிக்குமா?

27. பயிற்சி நடத்த தடையை நீக்குமா?

தமிழ்நாட்டில் பணியாற்றும் அனைத்து இந்தியப் பணி அதிகாரிகளுக்கும் (IAS, IPS, IFS), மாவட்ட வருவாய் அதிகாரிகள், துணை ஆட்சியர்கள் போன்ற முதல் வகுப்பு (Group I) அதிகாரிகளுக்கும் பட்டியல் சாதியினர் துணைத் திட்டம் (SCSP) வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் (1989 PA ACT), ஒதுக்கீடு விதிகள் ஆகியன பற்றி ஆண்டுப் பயிற்சிகளை நடத்த அரசு உடனே ஆவன செய்யுமா? அண்ணா மேலாண்மை நிறுவனம், பவானிசாகர் மாநிலப் பயிற்சி மய்யம், பஞ்சாயத்துகளுக்கான பயிற்சி மய்யம், தலைமைச் செயலகப் பயிற்சி மய்யம், திட்டக் குழு இவை யாவும் இந்தப் பொருள்கள் பற்றி பயிற்சி நடத்துவதைத் தடை செய்து வைத்துள்ளன என்பதையும் அரசு அறியுமா?

28. தலித் முன்வரிசை உண்டா?

தமிழ்நாடு அமைச்சர் அவையின் வரிசைப் பட்டியலில் பட்டியல் சாதியினரைச் சேர்ந்த அமைச்சர்களை கடைசி 5 இடத்திற்கு மேல் வைக்கக் கூடாது என்ற மரபு, இதுவரை இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருவதை இந்த அரசு அறியுமா? எனில், பட்டியல் சாதியின அமைச்சர்களை முதல் 5 இடத்தில் வரிசை வைக்க இந்த அரசு முன்வந்து பட்டியல் சாதியினருக்கு மாண்பு செய்யுமா?

29. கல்விக் கட்டணம் செலுத்துமா?

அரசு நடத்தும் தொழில் கல்வி நுழைவுத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு சேர்க்கை தரப்பட்ட பின்னர் கட்டணம் கட்ட முடியாமையால் சென்ற ஆட்சியில் (2009 – 10 ஆம் ஆண்டு) மட்டும் 250 பொறியியல் கல்லூரிகளுக்கு இடம் கிடைத்த பட்டியல் சாதியின மாணாக்கரும், 5 மருத்துவக் கல்லூரிகளுக்கு இடம் கிடைத்த பட்டியல் சாதி மாணாக்கரும் கல்லூரிகளில் சேர முடியாமல் போனது. இத்தகைய நிலைமையை தவிர்க்க, இன்றைய அரசு உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமா?

30. செயலர் மீது நடவடிக்கை உண்டா?

சென்ற ஆட்சியின்போது 11ஆவது அய்ந்தாண்டுத் திட்டத்திற்காக UGC தலைவர் தோராட் தலைமையிலான மய்ய திட்டக்குழு, பட்டியல் சாதியினரின் வளர்ச்சிக்காக அளித்த அறிக்கைகளை தமிழ்நாட்டின் அனைத்து செயலர்களுக்கும், தலைமைச் செயலருக்கும், மாநிலத் திட்டக் குழுவிற்கும் அனுப்பி இருந்தும் – அனைவரும் அவ்வறிக்கையை இருட்டடிப்பு செய்து விட்டனர். இந்த ஆட்சியிலாவது அந்த அறிக்கையின் பரிந்துரைகள் மீது உடனே நடவடிக்கை எடுக்க அரசு ஆவன செய்யுமா?

31. அம்பேத்கருக்கு அவமதிப்பா?

அண்ணல் அம்பேத்கர் படத்தை தமது அலுவலகத்தில் வைக்க மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்கள், துறைத் தலைவர்கள், செயலாளர்கள், தலைமைச் செயலர் ஆகியோர் மறுத்து வருவதை – தமிழ்நாட்டை ஆளுவோர் அறிவார்களா? எனில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு முன்வருமா?

32. பிற அமைச்சர்கள் செல்லாதது ஏன்?

சென்னை அடையாறு பகுதியில் அரசு அமைத்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்திற்கு – இதுவரை பட்டியல் சாதியின அமைச்சர்களைத் தவிர, வேறு அமைச்சர் எவரும் சென்று மரியாதை செய்ததில்லை என்பதை, தமிழ்நாட்டை ஆளுவோர் அறிவார்களா? எனில், இதை மாற்றுவதற்கு அரசு முன்வருமா?

33. ஆட்சியரை அரசு கண்டிக்குமா?

அம்பேத்கர் பிறந்த நாளை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களில் நடத்திச் சிறப்பிக்க மாவட்ட ஆட்சித் தலைவர்கள் எதிர்த்து வருவதை தமிழ்நாட்டை ஆளுவோர் அறிவார்களா? எனில், இதை மாற்ற அரசு முன்வருமா?

34. பதவி உயர்வை அறிவிக்குமா?

பதவி உயர்வில் ஒதுக்கீடு தருவது குறித்து 4 மாதங்களுக்குள் கொள்கை முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் (WP. 13780/1998 & WP 14676 / 1996 Dt. 11.01.2007) தீர்ப்பு வழங்கியும், சென்ற ஆட்சியில் அதன்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவிடாமல் தலைமைச் செயலர் தடுத்து வந்ததை, இன்றைய அரசாவது உடனே கொள்கை முடிவை அறிவித்து சரி செய்ய முன்வருமா?

35. அம்பேத்கர் நூல்களை வாங்குமா?

அனைத்து பஞ்சாயத்து நூலகங்களுக்கும் அரசு செலவில் புத்தகங்கள் வாங்கித் தரும் திட்டத்தின் கீழ் தமிழில் வெளிவந்துள்ள அம்பேத்கரின் நூல்களை வாங்கத் தடை இருப்பதாகச் சொல்லப்படுவது உண்மையா? எனில், அனைத்து நூலகங்களிலும் தமிழில் வெளிவந்துள்ள அம்பேத்கரின் நூல்களின் தொகுதிகள் 37 எண்களும் வழங்கப்பட அரசு ஆவன செய்யுமா?

36. பொறியியல் இடங்களை நிரப்புமா?

ஒவ்வோராண்டும் ஏறக்குறைய 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பொறியியல் கல்வி இடங்கள் நிரப்பப் படாமல் காலியாக விடப்படுவது அரசுக்குத் தெரியுமா? எனில், அந்தக் கல்வி காலி இடங்களை பட்டியல் சாதி மாணாக்கருக்கு ரூ.10,000 என்கிற கட்டணத்தில் வழங்க, தனியார்க் கல்லூரிகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள அரசு முன்வருமா? அந்தக் கட்டணத்தை முழுமையாக அந்தக் கல்லூரிகளுக்கு வழங்கவும் அரசு முன்வருமா?

37. உயர் கல்வி உரிமையாக்கப்படுமா?

அடிப்படைக் கட்டாயக் கல்வி மய்ய அரசினால் அடிப்படை உரிமையாக்கப்பட்டது போல, உயர்கல்வி பெறத் தகுதியான (60 சதவிகிதம் முதல் 80 சதவிகிதத்திற்கும் மேல் மதிப்பெண்கள் பெறும்) அனைத்து பட்டியல் சாதி – பழங்குடியின மாணாக்கருக்கும் உயர் கல்வி உரிமையாக்கப்பட அரசு ஆவன செய்யுமா?

38. தலித் உதவித் தொகை வழங்குமா?

பட்டியல் சாதியின மாணாக்கருக்கு வழங்கப்பட்டு வரும், உயர்கல்விக்கான கல்வி உதவித்தொகை, ஒவ்வோர் கல்வியாண்டும் செப்டம்பர் மாதத்திற்கு மேல்தான் வழங்கப்பட்டு வருவதை அரசு அறியுமா? எனில், அதற்கு முதற்காரணம் நிதித்துறை ஒப்பளிப்பை, கல்வியாண்டின் தொடக்கத்திலேயே (ஏப்ரல் – மே திங்களிலேயே) வழங்க மறுத்து வருவதுதான் என்பதும் அரசுக்குத் தெரியுமா? எனில், கல்லூரி தொடக்க நாளன்றே கல்லூரிகளுக்கு கல்வி உதவித் தொகை சென்று சேர்வதை உறுதி செய்யும் வண்ணம், முந்தைய மாதத்திலேயே உரிய தொகையை ஆதிதிராவிட நலத்துறைக்கு வழங்க, அரசின் நிதித்துறை முன்வருமா?

39. மின் உற்பத்திக்கு நிலம் வழங்குமா?

தமிழ்நாட்டில் பட்டியல் சாதியினருக்கு சூரிய – மின்சக்தி உற்பத்தி நிலையங்கள் அமைக்க, நிலங்களை வழங்க அரசு முன்வருமா?

40. பின்னடைவை சரி செய்யுமா?

ஆதி திராவிடர் நலத்துறையின் அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம், துறைவாரியாகக் கண்டறிந்த பின்னடைவுப் பணியிட புள்ளி விவரங்களை – கடந்த ஆட்சியில் முதலமைச்சர் அலுவலகம் வெளியிடாமல் மறைத்து விட்டது என்பது உண்மையா? எனில், அப்புள்ளி விவரங்களை உடனே வெளியிட அரசு முன்வருமா?

41. 2,000 கோடியை செலவழிக்குமா?

கடந்த ஆண்டு பட்டியல் சாதியினர் துணைத்திட்டத்தின் கீழ் ரூ. 3828 கோடி ஒதுக்கப்பட்டு, ஆண்டு இறுதியில் ரூ.2000 கோடி கூட முழுமையாகச் செலவிடப்படவில்லை என்பது உண்மையா? எனில், ஒதுக்கீட்டை செலவழிக்காத அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவிக்குமா?

42. தலித் முதலீட்டை ஆதரிக்குமா?

அ.இ.அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட 3000 மெகாவாட் சூரிய மின் உற்பத்தியில் 1/5 பங்கு, அதாவது (எஸ்.சி. மக்கள் தொகை விகிதாச்சாரப் பங்கு) 20 சதவிகிதம் பட்டியல் சாதியினரில் முதலீட்டாளருக்கு வழங்க அரசு முன்வருமா?

43. தலித் திட்டம் : அபச்சாரமா?

தலைமைச் செயலர், நிதிச் செயலர், திட்ட வளர்ச்சி செயலர், ஆதிதிராவிட நலச் செயலர் உட்பட்ட ஆட்சியர் நிலைப் பொறுப்பிலுள்ள தமிழக அரசின் (அய்.ஏ.எஸ்.) உயர் அதிகாரிகள் பட்டியல் சாதியினர் திட்டம் பற்றிப் பேசுவது அபச்சாரம் என்று பேசிக் கொள்வது உண்மையா? எனில், அவர்கள் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்க அரசு முன்வருமா?

44. வன்கொடுமை விவாதிக்கப்படுமா?

பட்டியல் சாதியினர் துணைத் திட்டம் (SCSP), வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பற்றி தலைமைச் செயலர் மாதந்தோறும் செயலர்களுடன் நடத்தும் கூட்டத்தில் பேசக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டிருப்பது உண்மையா? இல்லை எனில், கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்த தலைமைச் செயலரின் மாதாந்திர செயலர்களின் கூட்டத்தில், எத்தனை முறை இந்த விவரங்கள் பேசப்பட்டன என்பதைத் தெரிவிக்க அரசு முன்வருமா?

45. தலித் ஆய்வை முதல்வர் செய்வாரா?

அரசு ஆணை 134, (தி.வ.ம.சி.மு. துறை), நாள் : 9.10.2006 இன்படி, பட்டியல் சாதியினர் துணைத் திட்டத்திற்கு (SCSP) பற்றாளராக ஆதிதிராவிடர் நலத்துறைச் செயலர் நியமிக்கப்பட்டுள்ளார். பட்டியல் சாதியினர் துறை திட்டத்திற்குப் பொறுப்பான ஆதிதிராவிடர் நலத்துறைச் செயலர், சூலை மாதம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடத்திய துறை ஆய்வின்போது, பட்டியல் சாதியினர் துணைத் திட்ட விவரம் எதையும் முதல்வருக்குத் தெரியப்படுத்தாமல் மறைத்து விட்டார் என்பது உண்மையா? தலைமைச் செயலரோ, நிதிச் செயலரோ, திட்டத் துறை செயலரோ, வளர்ச்சி ஆணையரோகூட முதல்வருக்கு பட்டியல் சாதியினர் துணைத் திட்டம் பற்றி எதுவும் எடுத்துரைக்காமல் மறைத்து, தமது கடமையிலிருந்து தவறி உள்ளனர் என்பது உண்மையா? எனில், பட்டியல் சாதியினத் துணைத் திட்டம் பற்றிய ஆய்வை முதல்வர் மேற்கொள்ள முன்வருவாரா?

46. உற்பத்தியில் பங்கு கொடுக்குமா?

அ.இ.அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டுள்ள 20,000 குடிநீர் உற்பத்தி நிறுவனங்களில், எதையும் பட்டியல் சாதி முதலீட்டாளர்களுக்கு கொடுக்கக் கூடாது என அரசுக்கு அழுத்தம் தரப்படுவது உண்மையா? எனில், அதைப் பொய்யாக்கும் வண்ணம் 1/5 (எஸ்.சி. மக்கள் தொகை விகிதம்) 20 சதவிகித நிறுவனங்களைப் பட்டியல் சாதியினருக்குத் தர அரசு முன்வருமா?

47. தலித் முதுநிலை பறிக்கப்பட்டதா?

பட்டியல் சாதியினர் எவரும் கல்லூரி முதல்வராக ஆகக்கூடாது என்று 2011 சூன் திங்களில் அரசுக் கல்லூரி ஆசிரியர்களின் மூப்பு வரிசையை அதிகாரமே இல்லாத கல்லூரிக் கல்வி இயக்குநர் மாற்றி உள்ளார் என்பதும், இதனால் 68 பட்டியலின ஆசிரியர்களின் முதுநிலை பறிக்கப்பட்டது என்பதும் அரசுக்குத் தெரியுமா? எனில், வரம்பு மீறி அதிகாரமே இல்லாதபோதும் தேர்வாணையம் போட்ட முதுவரிசையைத் திருத்திய கல்லூரிக் கல்வி இயக்குநரையும், அதைச் செய்யத் தூண்டிய அரசுச் செயலரையும் பதவி விலக்கம் செய்ய அரசு முன்வருமா?

48. காப்பீட்டில் தீண்டாமையா?

அரசு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த ஆட்சியில் பட்டியல் சாதியினர் நடத்தும் எந்த மருத்துவமனைகளும் பதிவுப் பட்டியலில் சேர்க்கப்படக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டிருந்தது அரசுக்குத் தெரியுமா? எனில், அதை மாற்றும் வண்ணமாகத் தற்போதைய புதிய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பட்டியல் சாதியினர் நடத்தும் மருத்துவமனைகளுக்கு முன்னுரிமை தந்து பதிவு செய்யப்படுமா?

49. தலித் ஒப்பந்தப் பணிகள் உண்டா?

அ.இ.அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் முதல் தலைமுறையினருக்கு ஒப்பந்தப் பணிகள் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள் ளது. இதில் 50 சதவிகிதம் பட்டியல் சாதியின முதல் தலைமுறையினருக்கும், பெண்களுக்கும் வழங்க அரசு முன்வருமா?

50. அம்பேத்கர் படத்திற்கு தடையா?

சிவகங்கை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களிலும், சென்னை டி.பி.அய். வளாகத்திலுமுள்ள கல்வித் துறையைச் சார்ந்த அய்ந்து இயக்குநர் அலுவலகங்களிலும் பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கர் அவர்களின் படத்தை வைக்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதும், அண்ணல் படத்தை வைக்க பட்டியல் சாதியின அலுவலர் சங்கம் கேட்டபோது, காவல் துறை மூலம் அண்ணல் படம் வைப்பது தடுக்கப்பட்டது என்பதும் அரசுக்கு தெரியுமா? எனில், எல்லா அரசு அலுவலகங்களிலும், அரசு விருந்தினர் இல்லங்களிலும் அண்ணல் அம்பேத்கர் படத்தை உடனே வைக்க அரசு முன்வருமா?

51. தலித் ஆய்வை வெளியிடுமா?

டெல்லியில் மத்திய திட்டக்குழு நடத்திய ஆண்டுத் திட்ட ஆய்வின்போது, தமிழ்நாட்டின் பட்டியல் சாதியினர் துணைத் திட்டம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது உண்மையா? எனில், ஆய்வின் முழு விவரத்தை அரசு வெளியிடுமா?

52. தலித் வளர்ச்சியை கண்காணிக்குமா?

வளர்ச்சி ஆணையர் தயாரித்துள்ள Compendium of Minutes of the Meetings held by the Additional Chief Secretary/Development Commissioner with various secretaries of the Secretariat Departments from 28.9.2010 to 20.4.2011 28.9.2010 tணி 20.4.2011 அறிக்கையின் மீது, தமிழக அரசின் துறை வாரியாக என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறதென்பதை இன்றைய அரசு தொடர்ந்து கண்காணிக்குமா?

53. எதிர் மனு விவரம் வெளியிடுமா?

1988 வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பட்டியல் சாதியினர் புகார் தரும் எல்லா வழக்குகளிலும் காவல் துறையினர் எதிர்மனு செய்வதை, தமிழ்நாட்டு காவல்துறை வழக்கமாக மேற்கொண்டு வருவது உண்மையா? 2006இலிருந்து பதிவு செய்யப்பட்ட வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகளில் எத்தனை வழக்குகளில் எதிர்மனுக்கள் பதிவு செய்யப்பட்டன? அவற்றின் முடிவுகள் என்ன?

54. ஒரு கோடி ரூபாய் வழங்கப்படுமா?

கேரம் உலகக் கோப்பையை வென்று வந்த தமிழ்நாட்டவரான இளவழகி, ராதாகிருஷ்ணன், ரேவதி ஆகியோருக்குத் தரவேண்டிய சற்றொப்ப ஒரு கோடி ரூபாய் பரிசுப் பணத்தை தராமல், அதை வெளிமாநில கிரிக்கெட்காரர்களுக்கு கடந்த ஆட்சி வழங்கியது அரசுக்குத் தெரியுமா? எனில், இம்மூவருக்கும் தரவேண்டிய பரிசுப் பணத்தை அரசு உடனே வழங்குமா?

55. இருபது சதவிகிதம் வழங்குமா?

1991 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, பட்டியல் சாதியினருக்கு 18 சதவிகிதம் ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என நீதிபதி ஜனார்த்தனம் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் அறிக்கை தந்திருப்பது தவறான தகவல் என்பதை அரசு அறியுமா? 1991லிருந்து பட்டியல் சாதியினர் தொகை 19 சதவிகிதத்தை தாண்டி விட்டது என்பதால், நீதிபதி ஜனார்த்தனம் அறிக்கையை அரசு நிராகரித்து, பட்டியல் சாதியினரின் 20 ஆண்டு கோரிக்கையை ஏற்று, பட்டியல் சாதியின ஒதுக்கீட்டை 20% ஆக உயர்த்தி வழங்க அரசு முன்வருமா?

56. தலித் பாகுபாட்டைப் போக்குமா?

மற்றவர் நூலை நாட்டுøடமை ஆக்க ரூ. 30 லட்சம் தருவதும், பட்டியல் சாதியின எழுத்தாளருக்கு ரூ. 20,000 மட்டும் தருவதும் என்ற பாகுபாட்டை நீக்கி, பட்டியல் சாதியின எழுத்தாளருக்கு வழங்கப்படும் நல்கையை ரூ. 2 லட்சமாக உயர்த்தித் தர அரசு முன்வருமா?

57. தலித் நிதி : நேர் செய்யப்படுமா?

சென்ற முறை (2001 – 2006) ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த அ.தி.மு.க. அரசு, 2001 – 02 ஆம் ஆண்டு மற்றும் 2002 – 03 ஆண்டுகளின் நிதிநிலையறிக்கைகளில், பட்டியல் சாதியினருக்கான சிறப்புக் கூறுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில் உள்ள குறைகளைக் கண்டறிந்து, உண்மையை அறிவித்து ஒப்புக் கொண்டபடி, முரண்பாடுகளைக் கண்டறிந்து சீர்செய்ய, உயர் மட்டக் குழுவை அமைப்பதாகச் சொன்னதை செயல் படுத்த முன்வருமா? அக்குழுவைத் தற்போதைய திட்டம் – வளர்ச்சித் துறை வளராணையர் திரு. கிருத்துதாஸ் காந்தி தலைமையில், நிதித்துறை, திட்டம் – வளர்ச்சித் துறை மற்றும் தமிழ் மாநிலத் திட்டக் குழு உறுப்பினர்களோடு, தலித் மேம்பாட்டுக்காய், அம்மக்களோடும், தலித் ஊராட்சிமன்ற உறுப்பினர்களோடும் ஈடுபட்டு – உழைத்துவரும் சமூகக் குழுக்களின் பிரதிநிதிகளையும், சமூகவியல் நிபுணர்களையும் இணைத்துக் கொண்ட குழுவாகச் செயல்பட அரசு உடனடி ஆவன செய்யுமா?

58. தனித் திட்டம் நீக்கப்பட்டது ஏன்?

‘தாட்கோ'வில் பட்டியல் சாதியின ஒப்பந்ததாரர்களுக்கு என்று இருந்த தனித்திட்டத்தை தாட்கோ மேலாண்மை இயக்குநரும், ஆதிதிராவிட செயலரும் காலாவதி ஆக்கியது அரசுக்குத் தெரியுமா? எனில், தாட்கோ அதிகாரியின் தவறான அணுகுமுறை மற்றும் அரசாணையை இந்த அரசு மாற்றுமா? இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? பட்டியல் சாதியினருக்கு எதிரான இந்த ஆணை உடனே விலக்கப்படுமா? (ஆதிதிராவிடர் நலச் செயலரின் 20800/ஆதிதிராவிடர் நலம் 5/08–4 நாள் : 8.2.2010).

59. நடைமுøறப்படுத்தாதது ஏன்?

பட்டியல் சாதியினருக்கான கீழ்க்கண்ட அரசாணைகளை நடைமுறைப்படுத்த அரசு அதிகாரிகளும், தலைமைச் செயலரும் மறுத்து வருவது அரசுக்குத் தெரியுமா? எனில், இந்த அரசாணைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசு முன்வருமா?

1. அரசு ஆணை 65/பற்றாளர் கூட்டம் 2. தலைமைச் செயலர், தவறிழைக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை 3. மேயர் சிவராஜ் ரூ. 10 லட்சம் அறக்கட்டளை – சென்னை பல்கலைக்கழகம் – சட்டத்துறை 4. அயற்படிப்பு உதவி 5. இடஒதுக்கீட்டு மதிப்பீட்டு ஆணையம் 6. அரசுத் துறைகளில் பட்டியல் சாதியினரின் இடஒதுக்கீடு நிரப்புதல் குறித்த ஆண்டறிக்கை.

60. ஏன் ஒதுக்கீடு செய்யப்படவில்லை?

நாடாளுமன்றத்திலும், தமிழ்நாட்டு சட்டமன்றத்திலும் விடை காண வேண்டிய பொதுவான சில கேள்விகள் :

பட்டியல் சாதியினருக்கு மய்ய அரசின் பட்டியல் சாதியினர் துணைத் திட்ட வழிகாட்டுதல்களின்படி, விகிதாச்சார ரீதியில், அனைத்துத் துறைகளுக்கும் திட்ட ஒதுக்கீடு செய்யவில்லை என்பது உண்மையா?

(எ.கா. கீழ்க்காணும் துறைகள், மய்ய அரசிலும் சரி, மாநில அரசிலும் சரி, நிதி ஒதுக்கீடே செய்வதில்லை) எனில், இதை மாற்ற அரசுகள் முன்வருமா? 2011 – 12இல் இத்துறைகளில் பிரித்தறியும் திட்டங்களில் பட்டியல் சாதியினர் துணைத் திட்ட ஒதுக்கீடு விகிதாச்சார ரீதியில் முழுமையாக வழங்க, தமிழக அரசு உறுதி செய்யுமா? வெறும் எண்களால் காட்டப்படும் National Allocation இந்த பட்ஜெட்டிலாவது தவிர்க்கப்படுமா?


நன்றி : தலித் முரசு மற்றும் கீற்று இணையதளம்.

1 comments:

aotspr said...

நல்ல கேள்விகள் தொகுப்புகள்.....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Post a Comment