Monday, September 12, 2011

தேவை தீப்பந்தம்... மெழுகுவத்தி அல்ல!




சாதிய அரசியல் முதல் சர்வதேச அரசியல் வரை சிவப்புச் சிந்தனைகளை சினிமாவில் விதைப்பவர் இயக்குநர் ஜனநாதன். ஜீவா- 'ஜெயம்’ ரவி இணைந்து நடிக்கும் படத்துக்கான ஏற்பாடுகள், இயக்குநர் சங்கப் பொருளா ளராக திரைப்படத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான பேச்சுவார்த்தை, மரண தண்டனைக்கு எதிரான கூட்டங்கள் என்று பரபரப்பாக இருக்கும் ஜனநாதனின் பேட்டி.

''ஆரம்பத்தில் என்கிட்ட வந்த ஜீவா - 'ஜெயம்’ ரவி இல்லை அவங்க. படத்தைத் தயாரிக்கப் பலரும் முன் வருகிறார்கள். அடுத்த வருடம் எதிர்பார்க்கப்படும் படங்களில் நிச்சயம் இதுவும் ஒன்றாக இருக்கும். இதுவும் அரசியல் பேசும் சினிமாதான்!''

''பொதுவாக, மாற்று சினிமாக்களைப் பற்றிப் பேசுபவர்கள் உங்கள் படங்களைக் கவனமாகத் தவிர்ப்பதுபோலத் தெரிகிறதே?''

''என் சினிமா மீது மட்டுமல்ல, என் மீதும்கூடப் போதிய கவனம் விழுவது இல்லை. இது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. ஊடகங்களில் என் படங்கள் தவிர்க்கப்படுவதை உணர் கிறேன். நான் இயக்குவது மாற்று சினிமாவா என்று தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக அது அரசியல் சினிமா. 'பொதுவுடைமை அரசியலைவிடச் சிறந்தது எதுவும் இல்லை’ என்று வெளிப்படையாகப் பேசக் கூடிய சினிமா. என் மூன்றாவது படத்துக்கான ஒப்பந்தம் போடும்போதே, 'கதையையோ காட்சியமைப்புகளையோ நான்தான் தீர்மானிக்க வேண்டும். வேறு யாரும் தலையிடக் கூடாது’ என்று எழுதி இருப்பேன். ஏனென்றால், அப்போதுதான் சமரசம் இல்லாமல் என்னால் படத்தில் அரசியல் பேச முடியும். பொதுவாக, ஒரு படம் வெளியான பிறகு, அந்தப் படத்தின் கதைகளைப் பற்றியோ காட்சிகளைப் பற்றியோதான் கேள்வி கள் எழும். ஆனால், 'பேராண்மை’ வெளியானபோது, நான் சென்ற கூட்டங்களில் அரசியல் தொடர்பான கேள்விகள்தான் வந்தன. அரசியல் விவாதத்தை என் சினிமாக்கள் எழுப்பு கின்றன. நான் நம்பும் அரசியலை நான் பேசுகிறேன். என் சினிமாவும் அதைத்தான் பேசும்!''




''உங்கள் சினிமாக்களைச் சக இயக்குநர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்?''

''பெரும்பாலும் யாரும் அதைப் பற்றிப் பேசுவது இல்லை என்பதுதான் உண்மை!''

''சமூக மாற்றத்தை நேசிக்கும் இயக்குநர் என்ற முறையில், அண்ணா ஹஜாரேவின் போராட்டம்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

''அதில் நல்லெண்ணத்தின் கோஷம் இருந்தது. ஆனால், ஆழமான அரசியல் பார்வைகள் இல்லை. ஹஜாரே எம்.பி-க்களை விமர்சிக்கிறாரே தவிர, நாடாளுமன்றத்தை உருவாக்கும் தேர்தல் முறையை விமர்சிக்க வில்லை. உண்மையில் விமர்சிக்கப்பட வேண்டியது நாடாளுமன்ற அமைப்புதான். இங்கு இருக்கும் தேர்தல் முறையிலேயே ஏராளமான கோளாறுகள் உள்ளன. 1961-ல் அண்ணா தலைமையில் நடந்த கோவை தி.மு.க. தேர்தல் மாநாட்டில் 'விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில்தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும்’ என்று தீர்மானம் போட்டார்கள். அந்தத் தீர்மானத்துக்கான தேவை இன்றும் இருக்கிறது. தோழர் லெனின், 'சுவிட்சர்லாந்து நாட்டு நாடாளுமன்ற முறை முதலாளித்துவ ஜனநாயகத்தின் உச்சம்’ என்றார். அங்கு பெரும்பான்மையான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவது இல்லை. மக்களின் பொது வாக்கெடுப்பு மூலம்தான் நிறைவேற்றப்படுகின்றன. அங்கு மக்களிடம்தான் இறையாண்மை இருக்குமே தவிர, ஆளும் அரசிடம் இல்லை.

அமீரும் சீமானும் இறையாண்மைக்கு எதிராக இருந்ததாக ஆட்சியாளர்கள் சொன்னார்கள். உண்மையில் அவர்கள் வாதப்படி அண்ணா ஹஜாரேதான் இறையாண்மைக்கு எதிராக இருக்கிறார். தான் உருவாக்கிய கமிட்டியிலேயே தென்னிந்தியர்களுக்கும் தலித்துகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்காத ஹஜாரேவுக்கு மக்கள் பிரதிநிதித்துவம்பற்றிப் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? தீப்பந்தம் ஏந்த வேண்டியவர்களை மெழுகுவத்தி ஏந்த வைத்ததுதான் ஹஜாரே செய்த சாதனை. அது மத்தியதர வர்க்கம் கொண்டாடிய தேசிய தீபாவளி. இந்தி யாவுக்கு வரும் பன்னாட்டு நிறுவனங்கள் லஞ்சம் கொடுப்பதற்கு என்று கணிசமான தொகையைத் தங்கள் பட்ஜெட்டில் ஒதுக்கு கின்றன. அந்தத் தொகையைக் குறைக்க வேண்டும் அல்லது இல்லாமல் ஆக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட பிரமாண்ட சினிமாதான் அண்ணா ஹஜாரேவின் போராட்டம்!''

''திராவிட இயக்கத்தில் இருந்தபோது நீங்கள் தீவிர ஈழ ஆதரவாளர். இனி ஈழ அரசியலின் எதிர்காலம் எப்படி இருக்கும்?''

''இப்போது நான் வர்க்க அரசியலை நம்புபவன். வர்க்கக் கூறுகளைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளாததால்தான் ஈழப் போராட்டம் பின்னடைவைத் தழுவியது என்று கருதுகிறேன். நான் தமிழன். அதனால், எனக்குத் தமிழ்த் தேசிய உணர்வு உண்டு. ஏனென்றால், மொழி என்பது நிச்சயம் வெறுமனே கருவி மட்டும் இல்லை. கனவு காண்பதற்குக்கூட மொழி தேவைப்படுகிறது. பொருளாதாரரீதியான இருப்புக்கும் மொழி அவசியம். ஆனால், வெறுமனே ஒரு மொழி மட்டுமே போராட்டத்தை நடத்திவிடாது. இறுதிப் போரில் தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டார்கள். ஆனால், ஒட்டுமொத்த சிங்கள இனமும் சேர்ந்து இந்தப் படு கொலைகளை நடத்தவில்லை. மாறாக, சிங்களப் பேரினவாத அரசுதான் தமிழர் களைக் கொன்றொழித்தது. தமிழர்களின் இருப்பும் போராட்டமும் லாப வெறிகொண்ட வர்க்கத்துக்கு இடையூறாக இருந்திருக்கிறது. அதனால்தான் இனப்படுகொலை நடந்தது. எந்த ஒரு போராட்டமும் வர்க்கக் கூறுகள் இல்லாவிட்டால் வெற்றிபெறாது. தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை எடுத்துக்கொண்டால்கூட, அது வெறுமனே மொழிப் போராட்டம் மட்டும் இல்லை. 'இந்தி படித்தால்தான் வேலை கிடைக்கும்’ என்ற திணிப்பு நடந்தபோது, தங்கள் வேலைவாய்ப்பை உறுதிசெய்துகொள்ளும் உணர்விலும் இருந்துதான் இளைஞர்கள் போராடினார்கள். வர்க்கரீதியான அம்சங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் வெறுமனே உணர்ச்சி அரசியல் பேசுவதில் பலன் இல்லை. ஒரு தமிழனாக தமிழீழம் மலரும் என்று நம்புகிறேன், எதிர்பார்க்கிறேன்!''


நன்றி ஆனந்த விகடன் மற்றும் தேடிப்பார் இணையதளம்

0 comments:

Post a Comment