Saturday, October 22, 2011

மரியாதை குறைவான பயம்.

எல்லா மக்களுக்குமே சில விஷயங்களில் பயம் இருக்கும். ஆனால் ஒரு நாட்டுக்கே பொதுவான பயம் இருக்க முடியுமா ?

அப்படி ஒரு பயம்தான் 'டைஜின் கியோபுஷோ'.

இது ஜப்பானியர்களுக்கு வரும் மட்டும் பயம். தங்கள் செய்கைகள், உடல் அசைவுகள், எதிராளியை காயப்படுத்த்திவிடுமோ என்கிற பயம்தான் அது. பெரும்பாலான நாட்டு மக்களுக்கு சுய கவுரவம் தான் முக்கியம். நம்மவர்கள் மரியாதை குறைந்தால் கேட்டு வாங்குவார்கள். ஆனால், ஜப்பானியர்கள் அவமரியாதைக்கு உள்ளானால் கூட புன்னகையோடு நகர்ந்து சென்றுவிடுவார்கள். அவர்களின் பண்பாடு அப்படி.

வீட்டுக்கு வரும் விருந்தினரில் இருந்து, எதிரே வரும் முகம் தெரியாத நபர் வரை, அதனை பேருக்கும் மரியாதை கொடுத்து பழக்கப்பட்டவர்கள். சின்ன உடல் அசைவு கூட தவறான அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்பட்டு மரியாதை குறைவாக எடுத்துக் கொள்ளப்படுமோ என்று கவனமாக இருப்பார்கள்.

தன் தோற்றம், உடல் அசைவு, முக பாவனை, வியர்வை, நாற்றம் போன்றவை எதிராளிக்கு தன்னை பற்றி தவறான பிம்பத்தை ஏற்படுத்திவிடுமோ பயப்படுவார்கள். தன்னால் அடுத்தவர்கள் அவமானப்பட்டு விடுவார்களோ என்ற எச்சரிக்கை உணர்வே, பயமாக, நோயாக மாறி விடுகிறது.

இந்த வகை நோய் உள்ள ஜப்பானியர்கள் யாரையும் சந்திக்க விரும்பாமல் வீட்டுக்குள் முடங்கி கிடப்பார்கள். வேலைக்கும் போக மாட்டார்கள். வீட்டுக்கு யாரவது வந்தால் ஒளிந்து கொள்வார்கள். வேறு வழி இல்லாமல் சந்திக்க நேர்ந்தால் எதிராளியின் கண்களை பார்க்கமாட்டார்கள்.

ஒருவரை சந்திக்க பல முறை குளித்து, பல முறை வாசனை திரவியம் தடவி, சின்ன சுருக்கம் கூட இல்லாமல் துணி அணிந்து இருக்கிறதா என்று பார்த்து விட்டுதான் வெளியே கிளம்புவார்கள்.

சிறு வயதில் தன்னால் பிறர் அவமரியாதை பட்ட சம்பவம் ஒன்று இருந்தால், பிற்பாடு அதற்காக வருத்தப்பட்டால் அதுதான் இந்த பயத்தின் அடிப்படை.

இந்த பயத்தை போக்குவதற்கு ஜப்பானில் பல மருத்துவமனைகள் உள்ளன.

இந்த வகை நோயாளிகளுக்கு 'மோரிட்டா' என்கிற நான்கு நிலை சிகிச்சை கொடுக்கப்படுகிறது. முதலில் தூங்க சொல்வார்கள். எழுந்ததும் பய நோயாளியை கவிதை எழுதவோ அல்லது அன்றைய நிகழ்வுகளை குறிப்பேட்டில் எழுத சொல்வார்கள். அதற்கடுத்து, யோசிக்கவே முடியாத அளவிற்கு வேலை செய்ய சொல்வார்கள். நான்காவது நிலையாக, தொடர்ச்சியாக, பல கருத்தரங்குகளுக்கு சென்று நிறைய மனிதர்களை சந்திக்க வேண்டும் என்பதும் பயிற்சிகளில் ஒன்று. இப்படி ஒவ்வொரு நிலையாக நோயாளின் பயத்தை குறைத்து, நோயில் இருந்து விடுபட உதவி செய்வார்கள்.


தகவல் : தினத்தந்தி.

0 comments:

Post a Comment