Friday, July 22, 2011

புவி வெப்பமயமாதல் கவிதை


மனிதா!

கிஷ்கிந்தா வாசிகளிடமிருந்து
கிளைபிரிந்து வந்தவனே!

வரம் கொடுத்த பூமிக்கு
ஜூரம் பிடிக்கச் செய்தவனே!

நீர்தேடி நெடும் பயணம் செல்கிறாய் – நிலவுக்கு
பிராணவாயு தேடி பிரயாணம் செய்கிறாய் - செவ்வாய்க்கு

நீ இருக்க இடம் கொடுத்த பூமிக்கோ
இன்னலைத் தவிர என்ன கொடுத்தாய்?

நிலமகளைத்துளையிட்டு நீரை உறிஞ்சினாய்

உனக்கு அது நீர்
பூமிக்கு அது செந்நீர்

பாவம்!

நீ உறிஞ்சிய உதிரத்தால்
உடல் நடுங்குகிறாள் நிலமாதா நீயோ
நிலநடுக்கம் வந்துவிட்டதாய்
நீலிக் கண்ணீர் வடிக்கிறாய்

அடப்பாவி!
நீ வீடு கட்டிக் குடியேற
நிலத்தடி நீருக்கே சமாதி கட்டப் பார்க்கிறாயே

மனிதா
அகழ்வாரைக்கூட தாங்கும் அன்னை - புகை
தருவோரால் புழுங்கிக் கொண்டிருக்கிறாள் ..
அறிவாயா நீ?

ஆகாயத்தில்
ஓசோன் படலத்து ஓட்டையாம்
உனக்குத் தெரியுமா?

விருட்சங்கள் வெட்டி வெட்டி
இலட்சங்கள் சேர்க்கிறாயே
ஓசோனின் ஓட்டையை
காசு தந்து அடைத்திடுவாயா?

மனிதா
பண்ணிய பாவத்துக்கு
பரிகாரம் சொல்கிறேன் கேள்!

நீ ஒன்றும் பூமியை பூக்களால் அர்ச்சிக்க வேண்டாம்
புகையால் அச்சுறுத்தாமல் இரு
நீ ஒன்றும் மரங்களுக்கு நீர் கூட ஊற்றவேண்டாம்
பாலூற்றாமல் இரு
பூமிக்கு பொன்னை அள்ளி இறைக்க வேண்டாம்
மண்ணை அள்ளி அள்ளி இறைக்கவிடாமல் இரு

போதும் மனிதா போதும்
பூமியைச் சுரண்டி நீ வாழ்ந்தது போதும்
இனியேனும் இந்த பூமியை வாழவிடு!!

** ** ** ** ** ** ** ** ** **


பிடித்திருந்தால் 9865 005 345 இந்த எண்ணுக்கு அழைத்து அவரை வாழ்த்துங்கள்.


நன்றி : http://www.parisalkaaran.com

3 comments:

Anonymous said...

I love it so much. .........

Unknown said...

Yen manakumuralgal ... Vazhtha varthai thedugiren

Valasai Hasan Bagavi said...

மிக அருமை

Post a Comment