Saturday, July 30, 2011

இது தீண்டாமை தேசம் !

தீண்டாமை என்பது பலருக்குச் சென்ற நூற்றாண்டு வரை கொடுங்கனவாகவே இருக்கும். இப்ப எல்லாம் யாருங்க சாதி பார்க்கிறாங்க ? என்கிற குரல்களும், 'சர்ட்ஃபிக்கேட்டில் சாதி கேட்பதால்தான் சாதி இருக்கிறது' என்கிற குரல்களுக்கும், தீண்டாமையின் வலியும் வடுவும் தெரியாது. இந்திய வரலாற்று பாதை முழுக்கச் சேறு அப்பிய கால்களின் சுவடுகளாக இன்னமும் இருக்கிறது தீண்டாமை. அன்பு, மனிதாபிமானம், உபசரிப்பு என்று விழுமியங்களின் உறைவிடமாகக் கட்டப்பட்டு இருக்கும் கிராமங்களுக்கு விஷம் தோய்ந்த ஒரு கோரப்பல் இருக்கிறது என்பதை நம்புவதற்க்கு உங்களுக்குச் சிரமமாகத்தான் இருக்கும்.


சமீபத்தில் தீண்டாமை ஒழிப்பு முண்ணனி மாநாட்டில் பேசிய மார்கிசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், "கடந்த தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தின் சமூகக் கொடுமைகள், தீண்டாமை, மூடப்பழக்க வழக்கங்கள் குறித்து ஆய்வு செய்ய சமூக சீர்த்திருத்தக் குழு அமைக்கப்பட்டது. அதில் பேராசிரியர் மா.நன்னன், பொன்னம்பல அடிகள், நான் உள்ளிட்ட பலர் இடம் பெற்றோம்.நான்கைந்து முறை பல்வேறு விஷயங்களை விவாதித்த அந்த குழு, பின்பு என்ன ஆனது எனத் தெரியவில்லை. அரசுக்கும் அறிக்கை அளிக்கவில்லை. எனவே தற்போதை அ.தி.மு.க. அரசு மீண்டும் அதே போன்று ஒரு ஆய்வுக் குழுவை அமைக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தவர், " தமிழகத்தில் 85 வகையான தீண்டாமைக் கொடுமைகள் நிலவுகின்றன" என்றும் கவலை தெரிவித்து இருக்கிறார்.

ஜி.ராமகிருஷ்ணனிடம் பேசிய போது "சமூகச் சீர்திருத்தக் குழு திருச்சி, ஈரோடு மாவட்டங்களில் தீண்டாமை குறித்து மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தியது. ஆனால் ஒரு கட்டத்திற்க்கு மேல் அந்த முயற்சிகள் தொடரவில்லை. கோவை மாவட்டத்தில் மட்டும் 22 வகையான தீண்டாமை வடிவங்கள் இருக்கின்றன. ஒரு காலத்தில் கீழ்த்தஞ்சை மாவட்டத்தில் சவுக்கடி, சாணிப்பால் போன்ற தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக கம்யூனிஸ்ட்கள் போராடியதால், இப்போது அவை அங்கு இல்லாது ஒழிந்துவிட்டன. அதுமாதிரியான செயல்பாடுகளை எல்லா இயக்கங்களும் மேற்கொள்ள வேண்டியது அவசியம்" என்று வலியுறுத்தினார்.

85- வகையான தீண்டாமைகள் மட்டும் இல்லை, உண்மையில் தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட தீண்டாமைகள் உள்ளன. தமிழகத்தில் 12 மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் நிலவும் தீண்டாமைகள் குறித்து எவிடென்ஸ் அமைப்பு ஒர் ஆய்வை வெளியிட்டு இருக்கிறது. மதுரை, திண்டுக்கல்,விருதுநகர், சிவகங்கை, தஞ்சை, நாகப்பட்டினம், சேலம், நாமக்கல், கடலூர், விழுப்புரம், கோவை, திருப்பூர் ஆகிய 12 மாவட்டங்களில் 213 கிராமங்களில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் இவை. அவற்றில் இருந்து சில மாதிரிகள் மட்டும், இங்கே.....

213 கிராமங்களில் 70 கிராமங்களில் நியாய விலைக் கடைகளில் சாதியப் பாகுபாடு நடைமுறையில் உள்ளது. 23 கிராமங்களில் தலித் மக்கள் ஆதிக்கச் சாதியினருடன் நியாய விலைக் கடைகளில் ஒன்றாக வரிசையில் நிற்க முடியாது. 31 கிராமங்களில் ஆதிக்கச் சாதியினருடன் வரிசையில் நின்றாலும் தலித்துகள் அவர்களைத் தொடக்கூடாது. 2 சதவிகித நியாய விலைகடைகள் மட்டுமே தலித் குடியிருப்புகளில் உள்ளன. ஆதிக்கச் சாதியினர் வசிக்கும் பகுதிகளில் அமைந்திருக்கும் பிற நியாய விலைகடைக்களுக்குதான் தலித் மக்கள் செல்ல வேண்டும்.24.09.2009 அன்று கள்ளக்குறிச்சி அருகில் உள்ள தச்சூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த தலித் பெண் காசியம்மாள், நியாய விலை கடை வரிசையில் நிற்கும் போது, அவரது கை, ஆதிக்கச் சாதியிப் பெண்மணி மீது பட்டதற்காக அவர் பொது இடத்தில் மானபங்கப்படுத்தப்பட்டார்.

தலித் மக்களின் பிணங்களைப் பொது பாதையில் எடுத்துச் செல்ல முடியாது. ஆதிக்கச் சாதியினரின் குடியிருப்புகளின் வழியாக எடுத்துச் செல்ல முடியாது ஆகிய தீண்டாமைகள் மயானம் தொடர்பாக நிலவுகின்றன.தலித் மக்களுக்குத் தனிச் சுடுகாடும், மற்ற சாதியினருக்கு தனிச் சுடுகாடும் இன்னும் பல கிராமங்களில் உள்ளன.

02.01.2011 அன்று தேனி அருகில் கூழையானுரில் ராஜீ என்ற தலித் பெரியவரின் சடலத்தைப் பொது சுடுகாட்டில் அடக்கம் செய்யக்கூடாது என்று ஆதிக்கச் சாதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக நடந்த மோதலில், 27.01.2011 அன்று சின்னாயி என்ற தலித் மூதாட்டி பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டுக் கொல்லப்பட்டார். கூழையானுரில் அரசு அதிகாரிகளே உறுதிமொழிப் பத்திரம் ஒன்று எழுதி, தலித்துகளுக்கு, மற்ற சாதியினர்களுக்கும் தனித் தனி சுடுகாடு பயன்படுத்த வேண்டும் என்று கையெழுத்திட்டுள்ளனர்.

67 சதவிகித கிராமங்களில் சலூன் கடைகளில் தலித் மக்கள் மீது பாகுபாடு காட்டப்படுகிறது. 143 கிராமங்களில் தலித் மக்களுக்கு முடி வெட்டக்கூடாது என்று சாதிக் கட்டுபாடு உள்ளது. 13 கிராமங்களில் கத்திரிக்கோல், சீப்பு, கத்தி போன்றவை தலித்துகளுக்குத் தனியாகவும், மற்ற சாதியினருக்குத் தனியாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

25 கிராமங்களில் சலூன் கடைகளில் நாற்காலிகளில் தலித் மக்கள் அமரக்கூடாது. 12.01.2008 அன்று உத்தமாபாளையம் மார்க்கையான் கோட்டை கிராமத்தில், தன் குழந்தைகளுக்கு முடி வெட்டுவதற்க்குச் சலூன் உரிமையாளர் மறுத்ததால் பெரியசாமி எனும் தலித் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். அதனால் அவர் குழந்தைகள் முன்பே சாதி இந்துகளால் தாக்கப்பட்டார்.

68 சதவிகித கிராமங்களில் பொது குழாயில் நீர் எடுக்கவும், பொது கிணற்றில் தண்ணீர் எடுக்கவும் தலித் மக்களுக்கு உரிமை இல்லை. 131 கிராமங்களில் சாதி இந்துகளுக்கும், தலித் மக்களுக்கும் தனித் தனி நீர்நிலைகள் உள்ளன.

விழுப்புரம் மாவட்டம் பெரிய செவலை கிராமத்தில் 2009-ம் ஆண்டு சந்தோஷ் குமார் என்ற தலித் இளைஞர் பொது கிணற்றில் குளித்ததற்காக 30 பேர் கொண்ட ஆதிக்கச் சாதிக் கும்பலால் தாக்கப்பட்டார்.

சில கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் தலித் மக்களைத் தொட்டு மருத்துவம் பார்ப்பது இல்லை. மருத்துவமனை ஊழியர்களும் இத்தகைய தீண்டாமையை கடைபிடிக்கின்றனர்.

மதுரை கீரிப்பட்டியைச் சேர்ந்த தலித் பெண் வசந்தமாளிகை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்காகச் சேர்க்கப்பட்டு இருந்த போது, அங்கு இருந்த ஊழியர் அவரை தொட மறுத்து கொண்டை ஊசியால் பனிக்குடத்தை குத்தி சேதப்படுத்தி இருக்கிறார். கருப்பை முற்றிலும் சிதைந்த நிலையில் அகற்றப்பட்டது. சீறுநிரகக் குழாயில் ஓட்டை அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைக்கு அப்பெண் தள்ளப்பட்டார்.

29 கிராமங்களில் பள்ளிகளில் தலித் மாணவர்களிடம் பாகுபாடு காட்டப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. கோவையில் உள்ள ஒரு பள்ளி ஆசிரியர், தலித் மாணவர்களை மைனஸ் என்றும், பிற மாணவர்களை ப்ளஸ் என்றும்தான் அழைப்பாராம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தேனி அருகே உள்ள எண்டபுளி கிராமத்தில் பள்ளிகளில் தலித் சிறுவர்கள் பின் இருக்கையில்தான் அமரவைக்கப்பட்டு இருந்தார்களாம்.

பேருந்து பயணம் மற்றும் பேருந்து நிறுத்தங்களிலும் சாதி பாகுபாடு உண்டு. பேருந்து நிறுத்தங்களில் உள்ள் இருக்கைகளில் தலித் மக்கள் அமர கூடாது என்ற கொடுமையும் உண்டு. ஆதிக்க சாதி சிறுவர்களை தலித் முதியவர்கள் மரியாதையோடு அழைப்பதும், ஆதிக்கச் சாதி சிறுவர்கள் தலித் முதியவர்களை பெயர் சொல்லியும், மரியாதை இல்லாமல் அழைப்பதும், இன்றும் பெரும்பாலான கிராமங்களில் உள்ள நடைமுறை.

தபால் நிலையங்களில் தலித் மக்கள் நுழைய கூடாது. தபால்காரர்கள் தலித் மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு தபால் கொடுக்க வரமாட்டார். ஆதிக்கச் சாதி குழந்தைகளோடு, தலித் குழந்தைகள் விளையாட கூடாது, பள்ளிக் கூடங்களில் தலித் மாணவர்களைத் துப்புரவு பணியில் ஈடுபடுத்துவது என்று ஆரம்ப பள்ளிக்கூடங்கள் முதல் அரசு அலுவலங்கள் வரை தீண்டாமை கொடுமை நிலவுகிறது.

தலித் பஞ்சாயத்து தலைவர்களுக்கு, மற்ற ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் ஒத்துழைப்பு தர மறுப்பது, பல இடங்களில் தலித் பஞ்சாயத்து தலைவர்களுக்கு, நாற்காலியில் அமர அனுமதி மறுப்பது போன்ற தீண்டாமைகளும் உள்ளன.

"இவை வெறுமனே 213 கிராமங்களில் ஆய்வு செய்த முடிவுகள். இன்னும் ஆய்வுகளில் உட்படாத கிராமங்களும், மாவட்டங்களும் தமிழகத்தில் உள்ளன. தமிழகத்தில் தீண்டாமைக்கு உட்படாத கிராமங்களே இல்லை என்று உறுதியாக சொல்ல முடியும். ஆனால், அரசிடமோ இது குறித்த சரியான புள்ளிவிவரங்கள் கிடையாது. சொல்லப்போனால், உண்மையை மறைக்கும் பொய் விவரங்களைத்தான் அரசு வெளியிடும். 2009-ல் தமிழகத்தில் 384 கிராமங்களில் மட்டுமே தீண்டாமை உள்ளது என்று கூறிய தமிழக அரசு, 2010-ல் 174 கிராமங்களில்தான் தீண்டாமை நிலவுகிறது என்கிறது. இந்த தீண்டாமையை விசாரிப்பதற்காக, பி.சி.ஆர்.( 1955), எஸ்.சி, எஸ்.டி சட்டம் (1989) ஆகியவை வழி செய்கின்றன. ஆனால், இந்த சட்டங்களின் அடிப்படையில் பெரும்பாலும் நடவடிக்கைகள் எடுப்பதில்லை. 2010-ல் தீண்டாமை வன்கொடுமை தொடர்பாக தமிழகம் முழுவதும் 1050 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன" என்று வேதனை தெரிவிக்கிறார் எவிடென்ஸ் கதிர்.

எவிடென்ஸ் கதிர்

தீண்டாமையை ஒழிப்பதற்க்கு என்று திருச்சியில் தீண்டாமை ஒழிப்பு அலுவலகம் இயங்குகிறது. அதனால் எந்த பயனும் இல்லை என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் -15ம் தேதி அன்று தீண்டாமை ஒழிப்பு அலுவலகத்தை இழுத்து மூடும் போராட்டத்தை நடத்தியது பெரியார் திராவிடர் கழகம். தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில் இரட்டை குவளை முறையைக் கணகெடுத்து, இரட்டை குவளை போராட்டங்களையும் நடத்திய பெரியார் திராவிடர் கழகம், சமீபத்தில் போராட்டம் நடத்திய இடம், கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியம்.

'காலம் மாறினால், தீண்டாமை மாறும் என்பது நம்பிக்கையாக இருந்தாலும், உண்மையில் காலம் மாற, மாற, சாதியும், தீண்டாமையும் அதற்கேற்ப தன் வடிவங்களை மாற்றிக் கொள்வதே யதார்த்தமாக இருக்கிறது. கோவை மாவட்டம், அன்னூர் ஒன்றியத்தில் உள்ள நல்லிசெட்டிபாளையம், அச்சம்பாளையம், அல்லிக்காரன்பாளையம், செங்கபள்ளி, குருக்கிளயாம் பாளையம் போன்ற கிராமங்களில் தலித் மக்கள் பொது குழாய்களில் தண்ணீர் பிடிக்க கூடாது என்கிற 'மரபான' தீண்டாமையோடு, தலித் மக்கள் பொது இடங்களில் செல்போன் பேசக்கூடாது, பைக் ஒட்டாக்கூடாது போன்ற நவீன தீண்டாமைகளும் தொடர்கின்றன'.

அன்னூர் 27.06.11 தாழ்த்தப்பட்டோர் தண்ணீர்பிடிக்கும் போராட்டம்

1,000 பேரோடு பொதுக் குழாய்களில் தண்ணீர் பிடிக்கும் போராட்டத்தை நடத்திய பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, " இத்தகைய தீண்டாமைகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அன்னூர் காவல் ஆய்வாளர், சமூக நீதி மற்றும் மனித உரிமைப் பிரிவு உதவி ஆய்வாளர் இருவரும் அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் 'அன்னூர் உள் வட்டத்தில் இரட்டை குவளை மற்றும் முடி திருத்த நிலையங்களில் தீண்டாமை இல்லை' என்றும், இது தொடர்பாக 'தனிப்பட்ட நபர்கள் மீது எந்த புகார்களும் வரவில்லை' என்றும், அன்னூர் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட கிராமங்களில் அடிக்கடி தாழ்த்தப்பட்ட நபர்கள் உரிமை பிரச்சனை தொடர்பாக, தணிக்கை செய்யப்பட்டு வருவதாகவும்' எழுதியுள்ளார். ஏப்ரல் 19-ந் தேதி உயர்நீதி மன்றம் தீண்டாமை தொடர்பான வழக்கு ஒன்றில் அளித்த தீர்ப்பில், 'எந்த பகுதியில் தீண்டாமை இருக்கிறதோ, அந்த மாவட்ட எஸ்.பியையும், கலெக்டரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும்' என்று தெளிவாக கூறியுள்ளது. ஆனால், இதுவரை அப்படியான எந்த நடவடிக்கைகளும், எடுக்கப்படவில்லை. சட்டங்களின் மூலமாக மட்டுமே தீண்டாமையை ஒழித்து விட முடியாது என்றாலும், கடுமையான சட்டங்களும், இத்தகைய சாதி பாகுப்பாட்டை ஒழிக்க ஒரு வழிதான்! " என்கிறார் கொளத்தூர் மணி.

கொளத்தூர் மணி

தலித் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய தலித் கட்சிகள், அந்த பிரச்சனைகளைக் கைவிட்டு தேர்தல் அரசியல், தமிழ்தேசியம் எனத் திசை திருப்பும் அவலம் ஒருபுறம், மற்ற ஒட்டு கட்சிகளோ, ஆதிக்கச் சாதியின் ஒட்டு வங்கிக்காக தலித் மக்களின் பிரச்சனைகளை பேச மறுக்கும் துயரம் மறுபுறம். இவற்றுக்கு இடையில்தான் தலித் மக்கள் தங்கள் மீது திணிக்கப்பட்டு இருக்கும் சாதிய இழிவோடு வாழ வேண்டி இருக்கிறது.


இத்தகைய தீண்டாமைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலேயே, '2020-ல் இந்திய வல்லரசு, 'இளைஞர்களே கனவு காணுங்கள், மனித முகம் கொண்ட உலகமயமாக்கம், தகவல் தொழில் நுட்ப யுகம், இலவச திட்டங்கள் என்கிற குரல் கேட்கும் போது,

'ஒங்க தலைவன் பொறந்தநாளு போஸ்டர் ஒட்டவும்- ஒங்க

ஊர்வலத்தில் தர்ம அடியை வாங்கி கட்டவும் - எங்க

முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும்- நாங்க

இருந்தபடியே இருக்கணுமா

காலம் பூராவும் ?

சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுதே- உங்க

சார்காரும் கோர்ட்டும் அதில் எண்ணையை ஊத்துதே

எதை எதையோ சலுகையினு அறிவிக்கிறீங்க- நாங்க

எரியும் போது எவன் மசுரை புடுங்க போனீங்க?'

என்கிற கவிஞர் இன்குலாப்பின் 'மனுசங்கடா' பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.


நன்றி : கட்டுரை தகவல்- ரீ. சிவக்குமார் - ஆனந்த விகடன்.

குறிப்பு : தட்டச்சு செய்யும் போது சில எழுத்து பிழைகள் வந்திருக்க வாய்ப்பு இருக்கிறது, பிழை கண்டோர் சிரமம் பார்க்காமல், sdsannal@gmail.com என்கிற மின்னஞ்சல் அனுப்பவும். தவறுகள் சரி செய்யப்படும். நன்றி.

3 comments:

-தோழன் மபா, தமிழன் வீதி said...

தோழா...இங்கு சாதி சிலருக்கு வரம். சிலருக்கு அதுவே சாபம்.

Siraju said...

மாற்றியமைப்போம் தோழர்.

vidivelli said...

சாதிப்பிரச்சனை என்பது மாற்றமுடியாத ஒன்றாகத்தான் இருந்துவருகிறது...
இந்த உலகம் மாறாது..
நல்ல பதிவு..

சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுதே- உங்க

சார்காரும் கோர்ட்டும் அதில் எண்ணையை ஊத்துதே

எதை எதையோ சலுகையினு அறிவிக்கிறீங்க- நாங்க

எரியும் போது எவன் மசுரை புடுங்க போனீங்க?'

நல்ல கவிதை வரிகள்..
பகிர்வுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்..

Post a Comment