Monday, August 8, 2011

"நான் முத்துகிருஷ்ணன் ஆனது எப்படி?"


'பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களை'த் தமிழ் மொழிக்குக் கொண்டுவரும் நவீன

எழுத்துலகில் அ.முத்துகிருஷ்ணன் குறிப்பிடத் தகுந்தவர். 'குஜராத்: இனப் படுகொலை ஆவணம்' இவரது முக்கியப் பங்களிப்பு. 'ஒளிராத இந்தியா','மலத்தில் தோய்ந்த மானுடம்' மற்றும் பல்வேறு மொழிபெயர்ப்புக் கட்டுரைகளை எழுதியிருக்கும் முத்து கிருஷ்ணனுக்கு, கல்லூரிப் படிப்பு முடியும் வரை தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது.

"அப்பாவின் தொழில் காரணமாக, நான் பிறந்த உடனேயே மதுரையில் இருந்து வட இந்தியாவுக்கு இடம் பெயர்ந்தோம். கோவா, ஹைதராபாத் எனப் பல ஊர்களைச் சுற்றிவிட்டு, நவிமும்பையில் குடியேறினோம். பள்ளிப் படிப்பு முழுக்க அங்குதான். சுமார் 200 தமிழ்க் குடும்பங்கள் இருந்தன என்றாலும்கூட, இந்திதான் பிரதானம். வீட்டைவிட்டு வெளியே வந்தால் எல்லோரும் இந்திதான் பேசு வார்கள். நான் படித்த பள்ளிக்கூடத்தில் இந்தியா வின் அத்தனை மாநிலங்களில் இருந்தும் மாணவர்களும் ஆசிரியர்களும் உண்டு. இதனால், இயல் பாகவே மொழி மீது எனக்கு ஈர்ப்பு வந்தது.

என் அப்பாதான் நவிமும்பை தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக இருந்தார். அதை ஒட்டி பொங்கல் விழா, ஆண்டு விழா, சினிமா திரையிடுதல் என ஏதோ ஒரு விழா ஏற்பாடுகள் நடக்கும். இதில் நானும் பங்கேற்பேன்.

அப்பாவின் தொழில் சார்ந்து ஏற்பட்ட பின்னடைவுகளால் எனது 13-வது வயதில் நாங்கள் மீண்டும் எங்கள் சொந்த ஊரான மதுரை, மங்கல் ரேவு நோக்கி வந்தோம். எங்கள் கல்வித் தேவைகளுக்காக அருகில் இருந்த மதுரையில் வசித்தோம். அப்போது வரை எனக்கு தமிழ் மொழி பேச மட்டுமே தெரியும். அதுவும் வட்டார வழக்கு அறியாத ஒருவிதத் தட்டையான மொழி மட்டுமே பேசத் தெரியும். இதனால், மதுரையுடன் ஒட்டவே முடியவில்லை. ஒரு சுற்றுலாப் பயணியின் மனநிலையில்தான் பல வருடங்கள் இருந்தேன். சினிமா போஸ்டர், பேருந்து செல்லும் இடம் என எதையும் வாசிக்கத் தெரியாது. இந்தியை இரண்டாவது மொழிப் பாடமாக எடுத்து மெட்ரிக்குலேஷனை ஒரு வழியாக முடித்தேன். அதன் பின், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் டிப்ளமோ.

அப்போது வீட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி. ஏறக்குறைய உறவினர்கள் அனைவருமே கைவிட்ட நிலையில், மதுரையில் நான் ஓர் அகதிபோல உணர்ந்தேன். நான் விரும்பிப் படித்த அறிவியல் கல்வியைத்தொடர இயலவில்லை. பெரும் மன உளைச்சலில் குடும்பத்தின் அன்றாடத் தேவைகளுக்காகக் குட்டிக் குட்டியாகப் பல்வேறு வேலைகள் பார்த்தேன். அதன் தொடர்ச்சியாகச் சில காலம் ரயில்வேயில் கான்ட்ராக்ட் எடுத்து சிக்னலிங் பணிகளை மேற்கொண்டேன். அது என் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனை.

இந்தியாவின் பல உள்ளடங்கிய கிராமங்களுக்கும் பயணித்து, அங்கேயே தங்கி வேலை பார்த்ததில் இந்தியக் கிராமங்களின் உண்மை நிலை முகத்தில் அறைந்தது. ராமநாதபுரம் பக்கத்துக் கிராமத்துக்கும், மத்தியப்பிரதேசக் கிராமத்துக்கும் நிலத்தைத் தவிர, எந்த வேறுபாடும் இல்லை. பொருளாதாரம், சாதி எல்லாம் அப்படியே இருந்தன. இதைப்பற்றி நண்பர்களிடம் விவாதித்தபோது 'இதை எழுது' என்றார்கள். மொழியே தெரியாதபோது எப்படி எழுதுவது? என் அம்மா தனது 35 வயதுக்குப் பிறகு, தன் சொந்த அனுபவத்தில் தையல் கலையைக் கற்றுக்கொண்டு அதை ஒரு தொழிலாகச் செய்தார்.

எதையும் கற்க வயது ஒரு தடை இல்லை என்பதை அம்மாவிடம்தான் கற்றுக் கொண்டேன். அம்மாவின் உதவியோடு மெள்ள தமிழ் கற்றேன். சினிமா போஸ்டர், பத்திரிகைகளின் தலைப்பு வரிகள் எனப் படிக்க ஆரம்பித்தபோது மேலும் மேலும் ஆர்வம் வந்தது. பாம்பு சட்டையை உரிப்பதுபோல அந்நிய மனநிலை உருமாற்றம் அடைந்து, நான் இந்த ஊரின் ஆளாக என்னை உணரத் தொடங்கினேன்.

பொதுவாகவே, நம் சொந்தக் கிராமங்களில் இருந்து எவ்வளவு விலகிச் செல்கிறோமோ, அந்த அளவுக்குச் சாதிய உணர்வு குறைகிறது. ஆனால், பலருக்கு இன்றும் சொந்த ஊருடனான உறவு என்பது சாதியை அடிப்படையாக வைத்தே இயங்குகிறது. தமிழ்நாட்டில் கால் பதித்த பின்தான் என் சாதி எது என்றே எனக்குத் தெரியும். இதன் பொருள், மற்ற மாநிலங்களில் சாதி இல்லை என்பதல்ல; ஒப்பீட்டளவில் தமிழ்நாட்டைக் காட்டிலும் வட மாநிலங்களில்தான் சாதி வெறி அதிகம். ஆனால், நான் வசித்த நவி மும்பையின் வாழ்க்கை சாதியைக் கடந்ததாக இருந்தது. ஆனால், இங்கு சிறுவர்கள்கூட வயதில் மூத்த, முதிர்ந்த தலித்துகளைப் பெயர் சொல்லி அழைப்பதைப் பார்த்து அதிர்ந்துபோனேன்.

கோபமும் முரண்பாடுமாக இதுபற்றி என் அம்மாவுடன் விவாதம் செய்து விடை காண முயல்வேன். ரெட்டை டம்ளர், தனி சுடுகாடு, செருப்பு அணியத் தடை, குடி தண்ணீர் எடுக்கத் தடை, மலம் அள்ளுதல் என சாதியக் கொடூரங்களின் மொத்த பரிணாமங்களும் அறிந்தபோது, இதற்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. பாபர் மசூதி இடிப்பும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மதக் கலவரங்களும் வேறு திசையில் பெரும் அச்சுறுத்தல் வளர்ந்து வருவதை உணர்த்தியது. மறுபுறம் விவசாயிகளின் தற்கொலை என்பது அன்றாடச் செய்தியானது. இந்தச் சூழலில் நல்ல வேலை, கை நிறையச் சம்பளம், சொந்த வீடு, கார் என ஊர் உலகமே கச்சிதமாகச் செய்வதை நான் வெறுத்தேன். எல்லோரும் தங்களைப்பற்றியே சிந்திக்கும் இந்த பாணி வாழ்க்கைகூட ஒரு சதியே.

நானும் என் நண்பர்களும் தினமும் மதுரையில் சந்தித்துப் பேசினோம். அவர்கள் என்னை எழுதத் சொன்னார்கள். முதலில் சில மொழிபெயர்ப்பு முயற்சிகளில் ஈடுபட்டேன். பின்னர், கட்டுரைகள் எழுதும் நம்பிக்கை ஏற்பட்டது. அப்புறம் வரிசையாகப் பல்வேறு சிற்றிதழ்களிலும் எழுதத் தொடங்கினேன். என் எழுத்து இந்த சமூகத்தின் மறைக்கப்பட்ட முகங்களை வெளிச்சப்படுத்துவதாகவே அமைந்திருக்கிறது. வானத்துக் குக் கீழே இருக்கும் அத்தனை பிரச்னைகளையும் தமிழ் நிலத்துக்குக் கொண்டுவந்து சேர்ப்பதும், இந்த பூமியை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்துவதுமே எனது வாழ்நாள் பணியாக இருக்கும்!"

நன்றிகள் : நிருபர் பாரதிதம்பி மற்றும் வெங்கட் ரமணன்.



2 comments:

உயிர்மெய் said...

தங்களைப் போன்ற தொலைநோக்கு பார்வை கொண்டவர்கள்...இணைந்து...மாபெரும் சமூக மாற்றம் வர வேண்டும்...கத்தி இன்றி, இரத்தம் இன்றி இது சாத்தியப்பட வேண்டும ...வாழ்த்துகள்...

அன்புடன்

கணேசலிங்கம் செண்பகம்
கே.கே.நகர், சென்னை
செல்:9840827369

உயிர்மெய் said...

தங்களைப் போன்ற தொலைநோக்கு பார்வை கொண்டவர்கள்...இணைந்து...மாபெரும் சமூக மாற்றம் வர வேண்டும்...கத்தி இன்றி, இரத்தம் இன்றி இது சாத்தியப்பட வேண்டும ...வாழ்த்துகள்...

அன்புடன்

கணேசலிங்கம் செண்பகம்
கே.கே.நகர், சென்னை
செல்:9840827369

Post a Comment